
சில்வண்டின்..,
முதற்காதல் - பதினாறாம் நினைவு !
என்
முதற் காதலே!
ஆண்டுகள்
பதினாறு
ஆயிற்று
இன்றோடு!
நீ இறந்து!
உன்மேல் காதல்
எனக்கு பிறந்து!
--- 0 ---
மதிபோல்
மலர் முகம்
என்
மதியில்
மகரந்தம் தூவ!
மயங்கி
மருகி!
ஊடுறுவி
உருகி!
இமை கொட்டாது
உன் முகம்
பார்த்தேன்!
உணர்வுகளின்
ஊற்று!
உற்பத்தியாயிற்று!
--- 0 ---
--- 0 ---
அங்கங்கள்
ஒவ்வொன்றும்
அழகுக்கு
அர்த்தங்கள்!
அங்கங்கு
தங்கி நான்
ஆராய்ந்தேன்
அதில்
ஆழ்ந்தேன்!
செவி தந்தால்
ஒன்றிரண்டு
இரகசியமாய்
சொல்லிடுவேன்!
பூத்தார்போல்
புன்னகைப்பாய்!
அவ் வழகுக்காய்
விழைகின்றேன்!
--- 0 ---
ஒரு புருவம் மேலுயர்த்தி
வினாக்குறி என்றாக்கி
ஆராய்ந்த தென்னவென்றா
கண்ணாலே கேட்கின்றாய்?
குறும்பே!
அத்தனையும் கூறிவிடின்
வெட்கத்தில் வெளறிடுவாய்!
"ச்சீ " - யென்று பொய்யாக
சினம் கொண்டு சிவந்திடுவாய்!
உன் ரசிப்பை
நான் ரசிக்க
ஒன்றிரண்டு உரைத்திடவா?
--- 0 ---
பாற்கடல் சூழ
கருங்கடல் கொண்டு
அழகு சேர்த்திடும்
ஆழி இரண்டு!
அலையாய் இருள்
அலையாய் இடை
சாடும் நீர்வீழ்ச்சி!
பழம் முந்தி
வரும் விதையாய்
வனப்பாய்...
இரு
வாசல் குகை ஒன்று!
ரசம் தன்
ஈரப்பதம் நிறை
கீறி வெடித்த செங்கனி!
அதில்
பக்கவாட்டு
மின்னல் கீற்று!
பட்டாடை
போர்த்தி
பொதிந்து வைத்த
பஞ்சு மெத்தை
ரெண்டு பக்கம்!
என நான்
கண்டதெல்லாம்
அருங்காட்சி!
என் கண்களெல்லாம்
அதன் சாட்சி!
--- 0 ---
நான் கூறும்
எழில் யாவும்
உன் அழகில்
சொச்சம் மட்டும்!
நீ
அறிய
இவை போதும்!
மிச்சமெல்லாம்
எனக்கு மட்டும்!
அநியாயம்
என்றெல்லாம்
அங்கலாய்ப்பு
தேவையில்லை!
அழகெல்லாம்
உனதாயினும்
ரசனை யாவும்
எனதன்றோ?
--- 0 ---
தாரகையாய்
மேல் நின்று
இப்போதும்
புன்னகைப்பாய்!
என் காதல்
உணர்ந்தாயா
என கேட்டால்
நீ சிரிப்பாய்!
பாதி கிணறு
தாண்டிவிட்டேன்
மறு பாதி ஓடிவிடும்!
விரைந்தோடி
வந்திடுவேன்!
உன்
கன்னத்தில்
ஆழ் முத்தம்
பதித்தெடுக்க!
December 29, 2008