Saturday, October 31, 2009

பதினாற்றுச்சோலையின் குறிஞ்சிப்பூ!

ந்ததிலிருந்து தேடிக்கொண்டிருக்கிறேன். அவளைக்காணவில்லை. அக்காவிடம் கேட்கவும் தயக்கமாக இருந்தது. அவள் சைக்கிள் இருக்கிறதா எனப்பார்த்து அவள் வந்திருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம் என நினைத்து வெளியே வந்திடக் கதவு திறந்தால் என் எதிரே தரிசனம் தந்து நிற்கிறாள் சிவரஞ்சனி.

அன்றுதான் முதன் முதலாய் அவளைப் பார்ப்பதுபோல் எனக்குள் ஒரு ஜில்! பொங்கல் புத்தாடையாய் பட்டுப்பாவாடை சட்டை அணிந்து அன்று அவள் நின்றிருந்த கோலம் இன்றுவரை என் நினைவில் பளிச்!

எப்போதும் இவள் அழகுதான் என்றாலும் இன்றைக்கு ஒரு பிரத்யேக அழகோடு காட்சி தருகிறாள். ஏதேது? அழகிடமிருந்து பொங்கல் போனஸ் ஏதும் பெற்றாளோ!? அவளது அழகில் மிளிர்கிறது பண்டிகைப்பொலிவு!

அடர் நீலத்தில் பட்டுப்பாவாடை, ஆகாய நீலத்தில் பட்டுச்சட்டை, கை நிறைய கண்ணாடி வளையல், தலையாட்டிப்பேசும் அவள் இயல்புக்கு ஈடுகொடுத்து தனித்தாடும் புது ஜுமிக்கி, ஒளிக்கீற்றை உள்வாங்கி மின்னல்கீற்றாய் எதிரொளிக்கும் ஒற்றைக்கல் மூக்குத்தி, தலை நிறைய அவள் சூடியிருக்கும் மல்லிகைப்பூ! என அவள் அணிந்திருந்த அனைத்தும் அவளால் அழகு பெற்றுக்கொண்டிருந்தது.

என் சுவாசத்தில் அவள் வாசத்தின் ஸ்பரிசங்கள்! கண்கொட்டாமல் அவளையே பார்த்துச் சிலையாய் நின்றிருந்த என்னைப் பார்த்து சிரிக்கிறாள் சிவரஞ்சனி! என்ன காரணம் என்றறியேன், என் கண்களில் கொஞ்சம் நீர் திரண்டது. அவள் கவனிக்கும் முன்பே, அவள் கவனிக்காத விதம், கவனமாகக் கண்ணீர் துடைத்தேன்!

"பொங்கல் எடுத்துக்கோங்கோ!"

-- என் முன்னே அவள் நீட்டிய பாத்திரத்தில் சக்கரைப்பொங்கல்!

"நானே செய்தது. சாப்பிட்டு நன்னாயிருக்கான்னு சொல்லுங்கோ !"

-- அந்தப் பொங்கலில் மட்டுமல்ல, சக்கரை, அவள் குரலிலும் கலந்தேதான் இருந்தது. எத்தனை நாள் ஆயிற்று அவளின் குரல் கேட்டு? கை நீட்டினேன், கொஞ்சம் பொங்கல் எடுத்து என் உள்ளங்கையில் இட்டாள். உண்டேன்!

அவளின் குரல் ஏற்கெனவே செவிப்புகுந்து என் மனம் முழுதினையும் இனிக்கச் செய்திட்டதாலோ ஏனோ? அவள் தந்த சக்கரைப்பொங்கல் அப்படியொன்றும் இனித்திடவில்லை எனக்கு.

"எப்படி இருக்கேள்?" -- கேட்டாள்

"நல்லாயிருக்கேன்! நீங்க?"

-- 'நீ ' என்று ஒருமையில் தான் அவளை அழைத்திருந்தேன். ஆனால் இன்று அவளோடு ஒருமையில் பேசிட இயலவில்லை. சந்திக்க இயலாத நீண்ட நாட்கள் எங்களுக்குள் உண்டாக்கியிருந்த இடைவெளியோ?!

"நன்னாயிருக்கேன்!" -- 'நீ ' என விளிக்காமல் 'நீங்க' என விளித்ததற்காக அவள் கோபித்துக் கொள்ளவுமில்லை, சண்டைக்கும் வரவில்லை. நிச்சியமாக இது, சந்திக்க இயலாத நீண்ட நாட்கள் எங்களுக்குள் உண்டாக்கியிருந்த இடைவெளியேதான்.

"சாப்பிடுங்கோ நான் எல்லாருக்கும் கொடுத்திட்டு அக்காவ பாத்திட்டு வந்திடறேன்."

-- எனக்கூறி ரஞ்சனி டியூஷன் அறைக்குள் சென்றாள். நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

இதோ, இதே அறையில், இதே இடத்தில் தான் அவளை நான் முதன்முதலாய்ச் சந்தித்தேன். அகன்ற விழி இன்னும் அகலமாய் விரிய அதிர்ந்து நின்ற கோலத்தில் அன்று அவள் நின்றிருந்தது இன்றும் என் கண்களிலேயே அழியாது நிலை கொண்டுள்ளது!

~~~ 0 ~~~

டைந்து போன ஒரு பழைய அழுக்கு கூடையின் ஒரு பக்கத்து மரக்கட்டையைப் பெயர்த்து எடுத்து கிரிக்கெட் விளையாட ஒரு மட்டை தயார் செய்திருந்தேன். வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் நாடார் அண்ணாச்சி கடையில் ஒரு ரூபாய்க்கு சின்ன ரப்பர் பந்து கிடைக்கும். பந்தினைச் சுவரில் எறிந்து, சுவரில் பட்டு திரும்ப வரும் பந்தை மட்டையால் அடித்து, அடித்த பந்து சென்று படும் இடத்திற்கேற்ப 'ரன்' நிர்ணயித்து வீட்டுக்குள் கிரிக்கெட் விளையாடுவேன். லீவு நாட்கள் என்றால் நான் ஒத்தை ஆளாக ஒரு டூர்ணமெண்டே நடத்திவிடுவேன்!

விளையாடுகையில் உணர்ச்சிவசப்பட்டு ஓங்கி அடிக்கும் சில பந்துகளுக்கு 'டைனிங் டேபிள்' மீது இருக்கும் கண்ணாடிக் குவளைகள், ஊறுகாய் ஜாடி, பூ ஜாடி, என சில பொருட்கள் அவ்வப்போது இரையாகிவிடுவதால் அம்மாவின் கைவிரல்கள் என் முதுகில் பதிவது வாடிக்கையாகிப்போனது. ‘வீட்டுக்குள் விளையாடாதேடா' என சொல்லியும் அடித்தும் ஏதும் பிரயோஜனம் இருக்கவில்லை என்பதால், என் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த நினைத்த அம்மா அதன் பிறகு எனக்கு பந்து வாங்க காசு தருவதை நிறுத்திவிட்டாள்.

Necessity is the mother of all inventions அல்லவா? நானும் கண்டுபிடித்தேன் ரப்பர் பந்துக்குப் பதிலாக, எனக்கு விளையாட உதவக்கூடிய, மற்றொரு மாற்றுப் பந்தினை.

நாங்கள் வசித்திருந்தது ஒரு வாடகை வீட்டின் மாடி போர்ஷன். மாடியில் சமையல் அறையை ஒட்டி டைனிங் அறையும், டைனிங் அறையில் உள்ள கதவு திறந்தால் மொட்டைமாடி போன்ற திறந்தவெளி ஒன்றும் இருக்கும். இந்த திறந்தவெளியினைக் கடந்து தான் குளியலறைக்குச் செல்லவேண்டும். குளியலறைக்கும், டைனிங் அறைக்கும் இடைப்பட்ட இந்த திறந்தவெளிதான் என் விளையாட்டு மைதானம்.

பந்து வாங்கக் காசு தர அம்மா மறுக்க, விளையாடப் பந்து இல்லாமல் பரிதாபமாக நான் அந்த மொட்டை மாடியின் சுவரில் சாய்ந்து சோகமே உருவாக அமர்ந்திருந்தேன். அப்போதுதான் வீட்டை ஒட்டி நிற்கும் கொய்யா மரம் எனக்கு ஞானம் அருளியது.

அந்த மாடியின் மடியில் எப்போதும் உரசிக்கொண்டிருக்கும் கொய்யாமரத்துப் பிஞ்சுக் காய்கள் என் ஞானக்கண்ணுக்குப் பந்தாகத்தெரிய "யுரேகா... யுரேகா" என கூவிக்கொண்டே நிர்வாணமாய் ஓடாதக் குறையாகக் கண்டுபிடித்தேன் பந்திற்கான மாற்றுப்பொருளை.

மரத்திலிருந்து உதிர்ந்து வெயிலில் உலர்ந்து கடினமாகியிருக்கும் கொய்யாக்காய்களைச் சுவற்றில் எறிந்தால் அது தரையில் பட்டு பந்து போல எம்பி எழும். ரப்பர் பந்து போல சீரான புற பரப்பு இல்லாத காரணத்தால், சுவற்றில் பட்டு திரும்ப வரும் ‘கொய்யாப்பந்து’ தரையில் பட்டு எந்தப்பக்கம் spin ஆகும் என்பதைக் கணிக்க முடியாது. கணிக்க இயலாதவாறு பந்து எழும்பி வருவது ஆட்டத்தின் சுவராஸ்யத்தைக் கூட்டியது.

கொய்யாப்பந்துகள் உடைந்துபோனாலோ, அல்லது பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் விழுந்து தொலைந்து விட்டாலோ இன்னொரு காய் உதிர்ந்து உலரும் வரையில் காத்திருக்க முடியுமா என்ன? ஆதலால், பச்சைக் காயையே சுவற்றில் எறிந்து விளையாட ஆரம்பித்தேன். இதனால் சுவரெல்லாம் பச்சை நிறக் கறை படிந்து போனது. இதைப்பார்த்த அம்மா கண்சிவந்தாள்.

"இவன் வயசுப் பயல்கள் எல்லாம் வெளியில் போய் விளையாடிட இவன் வீட்டுக்குள்ளேயே அடஞ்சு கிடக்கிறான். வீட்டுக்குள்ளே இவன் பண்ணும் அநியாயம் தாங்க முடியலே!"

-- என அப்பாவிடம் புகாரும் செய்து, கறை படிந்த சுவரின் கோலத்தையும் அப்பாவுக்குக் காட்டிக்கொடுத்தாள் அம்மா.

வீட்டுக்குள் என் தொல்லையைக் குறைக்கும் நோக்கத்தில், என்னை மாலை நேரங்களில், ஹிந்தி பயில, ஹிந்தி டியூஷனில் சேர்த்துவிடலாம் என்று அப்பாவும் அம்மாவும் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றினார்கள். இப்படியாகத்தான் நானும் போய்ச்சேர்ந்தேன் ஹிந்தி டியூஷனுக்கு, ஹிந்தி படிக்க!

~~~ 0 ~~~

நான் டியூஷன் சேர்ந்த சமயத்தில், டியூஷனில் படித்துக்கொண்டிருந்த பிள்ளைகள் எல்லோரும் இன்னும் ஒரு மாதத்தில் வரப்போகும் பரீட்சைக்குத் தயாராகிக்கொண்டிருந்ததால், அவர்களோடு சேர்த்து எனக்குக் கிளாஸ் எடுக்க இயலாது எனவும், ஆகையினால், அவர்களுக்குப் பரீட்சை முடியும் வரை எனக்கு ரெகுலர் டியூஷன் முடிந்த பிறகு தனியாக கிளாஸ் எடுப்பதாகவும் கூறியிருந்தார் அக்கா.

அக்கா - எனக்கு டியூஷன் எடுக்கும் ஹிந்தி டீச்சர்.

அக்காவின் வீடுதான் எங்கள் டியூஷன் செண்டர். பங்களா போன்ற பெரிய வீடு அது. பின்புறம் அழகான தோட்டமும் தோட்டத்தை ஒட்டி ஒரு பெரிய வராந்தாவும் வராந்தாவை ஒட்டி ஒரு பெரிய அறையும் உண்டு. இந்த அறைதான் எங்களின் டியூஷன் வகுப்பு. எனக்குத் தனியாக டியூஷன் என்பதால் நான் டியூஷனுக்குச் செல்லும் நேரங்களில் பொதுவாக வகுப்பறையில் வேறு பிள்ளைகள் யாரும் இருப்பதில்லை. ஆனால், அன்றைய தினம் நான் அறைக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்தால், அறைக்குள் ஒரு பெண், அதும் அழகான ஒரு பெண்னொருத்தி அமர்ந்திருக்கிறாள்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தவள் உள்ளே நான் நுழைவதைக் கண்டதும் அதிர்ச்சியடைந்து தடாலென எழுந்து நின்றாள். அப்படி அவள் எழுந்திருக்கையில், அவள் கையிலிருந்த பேனா நழுவிக் கீழே விழுந்தது. அவள் என்னைப் பார்க்க, நான் அவளைப் பார்க்க, என்ன பேசுவது எனத் தெரியாமல் இருவரும் திண்டாடி நின்றிருந்தோம்.

அவளைக் கண்டதிர்ந்து நின்ற நிலையிலிருந்து வெளியேற நான் பெரும் போராட்டமே நடத்திக்கொண்டிருக்க எனக்கு முன்பே சுதாகரித்து இயல்பு நிலைக்கு வந்தவளாய் அவள் என்னிடம் கேட்டாள்,

"நீங்க... நீங்கதான் அந்த புதுப்பையனா?"

"ஆமாம்" என்று தலையாட்டினேன். டியூஷனுக்குப் புதிதாய்ச்சேர்ந்த பையனா என்றுதான் அவள் கேட்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டேன். நான் புதுப்பையன் என்று இவளுக்கு எப்படித்தெரியும்? அக்கா சொல்லியிருப்பாரோ? அக்கா எங்கே? அங்கே அக்காவைக் காணவில்லை! ஆதலால் அவளிடம் கேட்டேன்,

"அக்கா எங்கே?"

"உள்ளே ஆத்துல இருக்கா! யாரோ விசிட்டர்ஸ் வந்திருக்காங்களாம், இப்ப வந்திடுவாங்க..." என்று கூறி கை நழுவிய பேனாவை எடுத்து பென்சில்பாக்ஸில் வைத்து அவள் இடத்தில் அமர்ந்தாள்.

அவள் பேச்சுநடையில் ஐயர் வாசனை. நானும், நான் வழக்கமாய் அமரும் இடம் சென்று என் புத்தகத்தையும், நோட்டினையும் வைத்தேன். என் ஓரக்கண் அவளை அவளறியாமல் நோட்டமிட்டது!

அவள் அணிந்திருந்த பள்ளிச்சீருடை அவள் கான்வெண்டில் படிக்கும் பெண் என்பதைப் பறைசாற்றிக்கொண்டிருந்தது. இவள் பேச்சு மென்மை! இவள் வார்த்தைகளை உச்சரிக்கும் விதம் கேட்பதற்குப் பெரும் சுகம். நிலவு இவள் முகம். அடடே! இதுவென்ன? நிலவுக்குப் பொட்டாக மூன்றாம் பிறையா? அவள் முன்நெற்றியில் பிறை வடிவில் நெற்றிப்பொட்டு! முதல் பார்வையிலேயே என்னைத்தாக்கி நிலைகுலைய வைத்த ஆயுதங்கள், அவளின் கண்கள்!

கயல் விழி அல்ல, கயல் வாழும் கடல் விழி என்னைக் களவாடும் இவள் விழி!

அவளைப் பார்த்த படபடப்பு எனக்குள் இன்னும் அடங்காது இருக்க, என்னை பார்த்த பரபரப்பின் சுவடே இல்லாமல் அவள் நோட்டுப்புத்தகம் எடுத்து ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறாள்.

வேறு என்னதான் அவளும் செய்வாள் பாவம்? புதியவன் என்னோடு பேசத்தான் என்ன இருக்கிறது? பூ அன்றோ அவள்? நான் இங்கே இருப்பதாலேயே அவள் மிரண்டுபோகச் சாத்தியக்கூறுகளும் உண்டன்றோ? சுவரோடு சுவராய் ஒட்டி அமர்ந்து தலை தாழ்த்தி அவள் எழுதிக்கொண்டிருக்கும் கோலத்தில் அவள் மழையில் நனைந்த சிட்டுக்குருவி போல எனக்குக் காட்சி தருகிறாள்.

“சிட்டுக்குருவியே பயக்காதே, நானொன்றும் வேடன் அல்ல. புள்ளிமானே மிரளாதே உன் விழி போன்ற அம்பொன்றும் என்னிடமில்லை.”

இங்கேயே நான் நின்று அவளுக்கு மேலும் சங்கோஜம் கொடுக்க வேண்டாம் எனத்தீர்மானித்து அக்கா வரும் வரை அறைக்கு வெளியில் நிற்கலாம் என்று முடிவு செய்து வெளியே போக எத்தனிக்கையில்,

"எங்கே போறேள்? உக்காருங்கோ! அக்கா இப்ப வந்திடுவாங்க" என்கிறாள் சிட்டுக்குருவி.

"இல்லை! பரவாயில்லை. அக்கா வந்ததும் சொல்லுங்கள் அதுவரை நான் வெளியிலே நிற்கிறேன்!"

"அக்கா இப்போ வந்திடுவாங்க! நீங்க உக்காருங்க" டியூஷனுக்கு அவள் பழைய மாணவி அல்லது பழகிய மாணவி ஆதலால், புதிய மாணவனான என்னை உரிமையாய் இப்படி உபசரிக்கிறாள் போலும்! அங்கேயே அமர்ந்து அவள் அழகை கள்ளத்தனமாய் இரசித்திருக்க எனக்கும் ஆசைதான் ஆயினும் தீர்மானத்தில் உறுதியானவனாய்,

"இருக்கட்டும்! பரவாயில்லை. அக்கா வந்தபின் வருகிறேன்!" என்று கூறி வெளியே செல்லும் கதவு நோக்கி முன்னேறினால்,

"அட, அதான் அக்கா இப்போ வந்திடுவாங்கன்னு சொல்றேனே? அதைக்கேட்காம எதுக்கு இப்படி அடம் பிடிக்கறேள் வெளியே போகனும்னு? பேசாமல் உட்காருங்க!" என்கிறாள் சற்றே உயர்ந்த குரலில்.

கட்டளையும் கண்டிப்பும் கலந்து அவள் இப்படிக் கூறிட, அதைக்கேட்ட நான், அவள் கேட்ட தொனியை நம்ப இயலாதவனாக அங்கேயே வாயடைத்து நிலைகுத்தி நின்றேன். பேசியது அவள்தானா? இல்லை வேறு யாராவதா? என உண்மையிலேயே அந்த அறையை ஒருமுறை நோட்டம் விட்டேன்.

மிரண்டு நிற்கும் என்னைப் பார்த்து சிரிக்கிறாள் அவள். ஏதேது? மழையில் நனைந்த சிட்டுக்குருவியாக இப்போது நான் தெரிகின்றேனோ அவள் கண்களுக்கு?

என் நிலை கண்டு ரசிக்கிறாள் அவள்! "நான் உங்களை ஏதும் செய்திடமாட்டேன் பயப்படாதீர்கள்!" என்று கூறி மேலும் சிரிக்கிறாள். அடங்கவில்லை சிரிப்பு அவளுக்கு,

கன நேரத்திற்க்கு முன் நான் இவளைப்பற்றி கணித்ததென்ன இப்போது நான் காண்பது தான் என்ன?

அவள், பயம் கொள்ளும் பதுமை. நான் இருப்பதால் நாணம் கொள்ளும் அழகி, அறிமுகமில்லாத ஆடவன் ஒருவனின் அருகாமையால் சங்கோஜம் கொள்ளூம் பணிவான பெண்மகள், என்றெல்லாம் இவளைப்பற்றி எனக்கு நானே சமர்பித்த முதல் தகவல் அறிக்கையை நானே டார்ஸ டாரென கிழித்துக்கொண்டிருந்தேன்.

அக்கா வந்தார்!

"வாப்பா ரொம்ப நேரம் ஆச்சா வந்து? ஏன் நிக்கிறே உக்காரவேண்டியதுதானே?"

-- என அக்கா என்னிடம் கேட்டதற்கு,

"இப்பத்தான் அஞ்சு நிமிஷம் முன்னாடி வந்தார்! நீங்க இல்லைன்னதும் வெளியே ஓடப்பார்த்தார், அதுக்குள்ளே நீங்க வந்திட்டீங்க, மாட்டிண்டுட்டார்" என்று அவள் என்னைப் பார்த்துக்கொண்டே அக்காவுக்கு பதில் தருகிறாள்.

"........" --அடிப்பாவி! இவளா மழையில் நனைந்த சிட்டுக்குருவி? என் புரிந்துகொள்ளும் திறனை நொந்துகொண்டேன்.

"என்னடீ? அதுக்குள்ளே ஆரம்பிச்சுட்டியா உன் கலாட்டாவை?" என்று அக்கா அவளிடம் கேட்க, அக்கா இப்படி கேட்டதிலிருந்து அவள் ஒரு கலாட்டா பேர்வழி என்பது உறுதியானது. இன்று இவள் பசிக்கு நான் இரையா? அவள் குறும்புச்சிரிப்போடு என்னை அமைதியாய் பார்த்துக்கொண் டிருக்கிறாள்.

"அறிமுகம் செய்துகிட்டீங்களா இல்லையா?" அக்கா கேட்க,

"இல்லை அக்கா! பார்த்துக்கிட்டோம் அவ்வளவுதான். சரியான அறிமுகம் இன்னும் ஆகவில்லை!" என்று அவள் பதில் கொடுத்தாள். பொடிவைத்தார்போல பேசுகிறாளே?

"இவ சிவரஞ்சனி, மத்யமா எழுதப்போறா!" அக்கா அவளை அறிமுகப்படுத்த சம்பிரதாயமாய் நான்,

"ஹலோ..." என்றேன் அவளைப்பார்த்து!

அவள் புன்னகைத்தாள். பிறகு இரு கையும் கூப்பி, "நமஸ்த்தே!!" என்று ஹிந்தியில் வணக்கம் தெரிவித்தவள் தொடர்ந்து, "இது ஹிந்தி டியூஷன் இல்லையா இங்கே ஹிந்தில தான் விஷ் பண்ணனும்" என்று கூற,

நான் நாராய்... நார் நாராராய்ய்க்க் கிழிந்துகொண்டிருந்தேன்! ஆனாலும் அவளின் குறும்பும், குறும்பு பேச்சும் என்னைக் கவர்ந்துதான் இருந்தது.

~~~ 0 ~~~

ஞ்சனிக்கு ஸ்கூலில் ஸ்பெஷல் கிளாஸ் இருப்பதால் அவளால் ரெகுலர் நேரத்திற்கு டியூஷனுக்கு வர முடியாத சூழ்நிலை. ஆகையால்தான் அவளுக்கும் ரெகுலர் டியூஷன் முடிந்த பிறகு தனியாக வகுப்பு எடுக்கிறார் அக்கா. அவள் வகுப்பு என் வகுப்பு ஆரம்பிப்பதற்கு அரைமணி நேரம் முன்பே துவங்கி, என் வகுப்பு முடிவதற்கு அரைமணி நேரம் முன்பே முடிந்தும்விடும். இந்த நேர முரண்பாட்டினால் எங்களுக்குப் பேசிப்பழக சந்தர்ப்பம் அமையாது போனாலும் எங்களுக்குள் ஒரு நெருக்கம் உண்டாகியிருந்ததை என்னால் உணர முடிந்தது.

டியூஷனில் அக்காவுக்கு எதிரே நான் அமர்ந்திருக்க எனக்குப் பின்னால் சுவரில் சாய்ந்து ரஞ்சனி உட்கார்ந்திப்பாள். அக்கா, பாடம் எடுக்கையில் என்னைக் கேட்கும் கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரியவில்லையென்றால் பின்னாலிருந்து இரகசியமாகச் சொல்லித்தருவாள். சில தவறான பதிலை நான் கூறிவிட்டால் 'உச்' கொட்டி சலித்துக்கொள்வாள்.

டியூஷனுக்குள் நான் நுழைந்ததும் முதல் செய்கையாய் அவள் கண்கள் என் கண்களோடு பேசும். என்னை 'வருக' என வரவேற்கும். சிலப்பொழுது 'உன் வருகைக்காய் காத்திருந்தேன்' எனும்! தாமதமாய் நான் வரும் நாட்களில் 'கோவம் உன்மேல் எனக்கு' என்றும் கூடக் கூறிடும். எங்களை விட எங்கள் கண்கள் விரைவாய் நட்பு வளர்த்து நெருக்கம் கொண்டாடியது.

அவள் வகுப்பு முடிந்து கிளம்புகையில் அறையின் கதவருகில் சென்று கதவு திறந்து வெளியே செல்லும் அந்த நொடியில் என்னைப் பார்ப்பாள். நானும், சரியாக அதே நொடியில் கள்ளத்தனமாய் அக்காவுக்குத் தெரியாமல் தலை திருப்பி அவளைப் பார்ப்பேன். அவள், 'வருகிறேன்' என தலையசைத்து, கண்ணிமைத்து விடை வாங்கிச்செல்வாள். அந்த நொடியினை நாங்கள் இருவரும் தவறவிட்டதே இல்லை.

அவள் விழி விடைவாங்க என் விழியோடு நேர்கோட்டில் இணையும் தருணம் இருக்கிறது பாருங்கள், அதுதான் ஹிந்தி டியூஷனுக்கு என்னை தொடர்ந்து செல்லவைத்த கிரியா ஊக்கி!

விழிகளின் விளையாட்டினை ரசித்துக்கொண்டே சில நாட்கள் உருண்டோட ஒருநாள் ஊக்கம் குறைக்கும் செய்தி ஒன்று என்னைக் காத்திருந்தது. ஹிந்தி பரீட்சைகள் நெருங்கிவருவதாலும், தற்போது பரீட்சை எழுதும் மாணவர்களைத் தயார் படுத்த அவர்களோடு அதிக நேரம் செலவிடவேண்டியிருப்பதாலும், நான் இந்த பரீட்சை எழுதப்போவதில்லை என்பதாலும், அக்கா எனக்கு மட்டும் டியூஷனுக்கு லீவு விட்டார்.

பரீட்சை எல்லாம் முடிந்தபிறகு கிட்டத்தட்ட பத்துப்பதினைந்து நாட்கள் கழிந்துதான் இனி டியூஷன் எனக்கு! அதுவரை ரஞ்சனியைப் பார்க்க இயலாது!

~~~ 0 ~~~

ரு தள்ளுவண்டி, அதனருகே மசாலாப்பொறி விற்கும் தொப்பி அணிந்த ஒரு முஸ்லிம் பெரியவர், மசாலா பொறியை சுவைத்துக்கொண்டே சிரித்த முகத்தோடு அரட்டையில் ஆழ்ந்திருக்கும் மூன்று பையன்கள். இந்தக் காட்சியை அப்படியே மனதில் கற்பனை செய்துகொள்ளுங்கள். என் மனதில் ஒரு ஓவியம்போல் பதிந்துபோன இந்தக்காட்சி, என் வாழ்வின் அதிமுக்கியமான நட்பிற்கான சாட்சி!

அந்த மூவரின் ஒருவன் நான், குறும்புச்சிரிப்புடன் என்னை கூர்ந்து பார்த்தவண்ணம் நிற்பவன் என் நண்பன் வினோத். சிங்கப்பல் உள்பட எல்லா பல்லும் வெளியே தெரிய தலையை சற்றே உயர்த்தி வானம் பார்த்து எவரையும் கவர்ந்திடும் சிரிப்பினை உதிர்த்துக்கொண்டு ஒல்லியான உடல்வாகில் வளர்த்தியாய் நின்றுகொண்டிருப்பவன் மற்றொரு நண்பன் பக்ஷிகுலாம்!

நான் செய்யும் கள்ளத்தனத்தைக் கண்டுபிடித்துவிட்டார்களாம். அதனால் தான் இந்தச் சிரிப்பு இவர்கள் முகத்தில் பளீரிடுகின்றது! பொறிக்கடை பாய் பொறியை வறுப்பதுபோல இவர்கள் இருவரும் என்னை வறுத்தெடுத்துக்கொண்டிருந்தார்கள்.

"அப்படியென்றால் அவளை உனக்கு பிடிக்கும் என்று கூறு!"

"பிடிக்கும்... ஆனால் நீங்கள் நினைப்பது போல இல்லை!"

"நாங்கள் என்ன நினைக்கிறோம் என்பது உனக்கெப்படித் தெரியும்?"

"தெரியும்! உங்கள் கேலிச்சிரிப்பில், கிண்டல் பேச்சில் அது எனக்குப் புரியும்!"

"நீயாக செல்லியிருந்தால் பிரச்சினை இல்லை, நாங்களாகத்தானே கண்டுபிடித்தோம்? அதனால் கேலி செய்ய எங்களுக்கு உரிமை உண்டு!"

"........."

"என்ன பேசாதிருக்கிறாய்?"

"ஒன்றும் இல்லை!"

"சரி! கேட்டதற்கு பதில் சொல். அவளை உனக்கு பிடிக்கும் இல்லையா?"

"இல்லை!"

"இல்லையா? இல்லை என்பது உண்மை என்றால் முகம் வாட்டம் கொள்ளக் காரணம் என்ன? டியூஷன் போகாமல் மண்டைகாய்கிறது என்றாயே ஏன்?"

"........" -- பதில் கிடைக்காமல் முழித்துக்கொண்டிருந்தேன் பக்ஷி கையில் மாட்டிய பக்ரீத் ஆடுபோல!

"இருக்கட்டும், புதிய பழக்கமாய் வாக்கிங் போகலாம் என்றாய், ஒவ்வொரு முறையும் உன் டியூஷன் இருக்கும் இந்தப்பக்கமே வாக்கிங் என அழைத்து வந்தாய். உன் டியூஷன் பக்கம் இருக்கும் இந்த பொறி கடையில்தான் பொறி நன்றாக இருக்கும் என இங்கேயே அழைத்து வருகிறாய், நாங்கள் இருவரும் ஏதும் பேசிக்கொண்டிருந்தால் எங்கள் பேச்சில் கலந்துகொள்ளாமல் உன் கண்களை டியூஷன் இருக்கும் பக்கமே அலைபாய விடுகிறாய்!"

".............." -- பாவிப்பயல்கள் எல்லாவற்றையும் கவனித்திருக்கிறார்கள்!

"முக்கியமாய் நீலநிறத்தில் சைக்கிள் என்றால் ஏன் படபடக்கிறாய்?"

-- பக்ஷி எனும் அந்தக் குச்சிப்பயல் அப்பட்டமாய் வெளிப்படையாய்க் கேட்டான்.

"ஒன்றும் இல்லை! இங்கே நல்ல பொறி கிடைக்கும்.. நீங்கள் ரசித்து உண்பீர்கள் என அழைத்துவந்தேன்!" கோவத்தில் உரைப்பதுபோல பதிலுரைத்தேன். இதற்கெல்லாமா மசிவார்கள் என் நண்பர்கள்.

" ரசித்துக்கொண்டுதான் இருக்கிறோம்! பொறியையும், பொறியில் மாட்டிய உன்னையும். மொத்தத்தில் நல்ல காரம்!" என்கிறார்கள் அசராமல்!

இப்படி ஓயாமல் தொடர்ந்தது அவர்களின் கிண்டல்பேச்சு. கவனிக்க மாட்டார்கள் என நினைத்து கை கழுவி வருகிறேன் என்று கூறி தள்ளு வண்டியின் பின்புறம் மறைவாகச்சென்று ரஞ்சனி சைக்கிளில் போவதை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் இவர்களிடம் கையும் களவுமாக அகப்பட்டேன்!

இவர்கள்தான் என்னை ஒருமுறை, நான் மிகவும் ரசிப்பேன் எனக்கூறி ஓர் திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.

வேதம் புதிது!

இந்தத் திரைப்படம் அதுவரை நான் உணர்ந்திராத வினோத பரவசத்தை எனக்குள் உண்டாக்கியது. அடிவயிற்றுக்குள் ஒரு வெற்றிடம் உண்டாகி அது என்னை அதற்குள் இழுப்பதுபோல் ஒரு உணர்வினை நான் உணர்ந்தேன்.

ஐயர் வீட்டுப் பெண்ணாக கதாநாயகி கோவில் கல்மண்டபத்தில் கோலம் போட்டு அறிமுகம் ஆகும் காட்சியில் ஆரம்பித்த இந்த வினோத உணர்வு படம் முழுவதும் எனக்குள் வியாபித்திருந்தது. கதாநாயகியாய் எனக்கு ரஞ்சனி தெரிகிறாள்!

ரஞ்சனியின் முகத்தை பிரதிபலிக்கும் நாயகியை எவனோ ஒருவனோடு ஜோடி சேர்ப்பதாவது? நான் என்னையே என் நாயகியின் நாயகன் ஆக்கினேன். திரையில் நானும் அவளும் கதாபாத்திரம் என்றாக, அவர்களின் உணர்வுக்குள் நான் ஊடுறுவிப் பயணம் செய்தேன்!

பொருத்தம் நமக்குள் இல்லையென்று நீ

நினைத்ததுண்டோ நெஞ்சுக்குள்ள?

-- தவிப்போடு கேட்டேன்!

தாமிரபரணி ஆத்துத்தண்ணி அது ஜாதிபேதம் பார்ப்பதில்ல!

-- அவள் கூறியதில் ஆறுதல் கொண்டேன்!

நீ நினைத்தால் திருநீறு அணிந்திருப்பேன்!

-- உறுதியாகத்தான் கூறினேன்!

நீ தடுத்தால் கோவில் மறந்திருப்பேன்!

-- அவள் கூறக்கேட்டு உருகினேன்!

சில திரைப்படங்கள், சில பாடல்கள், நம் வாழ்வில் நாம் கடந்து வந்த காலத்தின் கால அடையாளம் என்று ஆகிவிடுவதுண்டு. BookIndex போல, அல்லது, Bookmark போல.

சில பாடல்களைக் கேட்கும் போது மனம் அந்த காலகட்டத்துக்கு நம்மை இழுத்துச் செல்லும், அந்த காலங்களில் மனதினைப் பாதித்திருந்த உணர்வுகள் மீண்டும் மனதில் பொங்கி எழுந்து நிரம்பி வழியும். பழைய காட்சிகள் யாவும் மனதில் விரிந்து பரவ கண்கள் மூடி அக்காட்சிகளுக்குள் ஆழ்ந்துபோவது சுகம்.

ரஞ்சனி சம்மந்தமாய் மனதில் வியாபித்திருந்த அன்றைய உணர்வுகளுக்கு, என் கால அடையாளம் ஆனது "வேதம் புதிது" படமும் அதன் பாடல்களும் தான்.

ரஞ்சனியை பார்க்க முடியாத இந்த லீவு நாட்களில் என் மனம் முழுதும் ரஞ்சனியே வியாபித்திருந்தாள். கண் மூடியிருந்தாலும், திறந்திருந்தாலும், இருட்டிய இரவோ, வெளிச்சப்பகலோ எதுவாயினும் உள்ளத்திரையில் தெளிவாய் ரஞ்சனியின் பிம்பமே காட்சியளித்தது. என்னுள்ளும் தவிர்க்க இயலாத சில மாற்றங்கள் உண்டாகியது!

ஐயர் பாஷை பேசத்துவங்கினேன். மடிசார் புடவை தான் அழகென்று வாதம் செய்தேன். மாகாளிவேர் ஊறுகாக்கருகில் மற்றவை நெருங்குமா? சுண்டக்காய் போட்ட வத்தல் குழம்பின் ருசி வேறு எதற்கும் ஈடாகுமா? என்றெல்லாம் புகழ் பாடினேன். மோர்க்குழம்பும் அதில் கிடக்கும் வழ வழா வெண்டைக்காயும் கூட எனக்குப் பிடித்துப்போயிற்றென்றால் பாருங்களேன்!

~~~ 0 ~~~


ண்ணன் குறுக்கே வந்தான்! லீவு முடிந்து டியூஷன் துவங்கும் முதல் நாள் நான் நேரத்துக்கு டியூஷன் செல்ல இயலாதபடி அவன் இடைஞ்சல் செய்தான்! வழக்கமாய் அவன் எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்துதான் ஊர்சுற்றுவோம். இந்த முறை நான் கற்பனாலோகத்தில் ரஞ்சனியோடு சஞ்சரித்துக்கொண்டிருந்ததால் அண்ணனோடு சுற்றுதற்கு எனக்கு நேரம் கிடைக்கவில்லை! இதனால் என் மீது அவன் வருத்தம் கொண்டிருந்தான்.


இன்று அவன் ஊருக்குக் கிளம்புகிறான். என் மனம் சங்கடப்பட்டது. என்ன இருந்தாலும் அவன் என் அண்ணன் அல்லவா? குறைந்தபட்சம் பஸ் நிலையம் வரைச்சென்று பஸ்ஸாவது ஏற்றி விடவேண்டும். இல்லையேல் அவன் மனம் காயமுறும். என் விந்தை போக்கு புரியாமல் குழப்பம் கொள்வான். ஆதலால் அவனை வழியனுப்பச் செல்லலாம் என முடிவுசெய்தேன். பேருந்து வரவேண்டிய நேரத்திற்கு சரியாக வந்திட்டால் கவலையில்லை. டியூஷனுக்கும் சரியான நேரத்தில் சென்றடைந்திட முடியும். ஆனால், வருமா?

வரவில்லை! வழக்கம்போல நேரத்துக்கு வரவில்லை பாழாய்ப்போன அந்த அரசு விரைவுப்பேருந்து. வராத பேருந்தினைத் திட்டவும் முடியவில்லை. ஏனென்றால் அன்றெல்லாம் அரசு விரைவுப்பேருந்துக்கு திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஒரு பக்கம் திருவள்ளுவர், மறுபக்கம் அண்ணன். யாரைத்திட்ட? ஒருவழியாக ஒரு மணிநேரம் தாமதமாகப் பேருந்து வந்துசேர, அண்ணனை ஏற்றிவிட்டு ஓட்டமும் நடையுமாக நான் டியூஷன் வந்து சேர்ந்தேன்.

அக்கா அமரும் பாயைச்சுற்றி அரைவட்ட வடிவில் எல்லோரும் உட்கார்ந்திருக்க அக்காவை அங்கே காணவில்லை. அதை பொருட்படுத்தாமல் அரைவட்டத்தை ஆராய்ந்தேன். அதில் ரஞ்சனி இருக்கிறாளா என்பதை அறிந்துகொள்ள!

இருக்கிறாள்! என்னைப் பார்க்கிறாள். பார்த்தவள் சிரிக்கிறாள். பின், அவள் அருகே அமர்ந்திருக்கும் பெண்ணை கொஞ்சம் நகரச்செய்து அவள் அருகில் நான் உட்கார ஓர் இடம் உண்டாக்கி, அங்கே என்னை வந்து அமரும்படி சைகை காட்டினாள். நான் பரவசத்திற்குள்ளானேன்!

எங்கேனும் சென்று அமரட்டும் என விட்டிடாமல் எனக்கு அவள் அருகே இடம் உண்டாக்கி என்னை அங்கே அமரச்செய்கிறாளே? ஏன்?

மீண்டும் அவள் கண்கள் அழைப்பு விடுக்க, அழைப்பினைத் தட்ட இயலாமல் அல்லது தட்ட விரும்பாமல் நான் அவள் அருகில் சென்று அமர்ந்தேன்! அவளைப் பார்த்தேன்! அவள் தன் தாடைக்குக் கை கொடுத்து என்னைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறாள். இத்தனை நாள் கழித்து மீண்டும் என் கண்கள் அவள் கண்ணோடு நேர் கோட்டில் இணைய,

கண்ணுக்குள் நூறு நிலவா? இது ஒரு கனவா?

-- மனதுக்குள் பாடல் பின்ணனி இசைத்தது!

பஸ் நிலையத்திலிருந்து வேகமாய் ஓடி வந்ததாலா அல்லது அவள் கண்ணில் கண் சேர்த்ததாலா என்றறியேன். எனக்கு முத்து முத்தாக வியர்த்திருந்தது! அதை கவனித்த அவள்,

"கர்ச்சீப் தரவா?" -- எனக்கேட்க,

கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா?

-- மீண்டும் பின்ணனி இசைத்தது பாடல். மனம் மத்தளம் கொட்டிற்று. என்னால் ஏதும் பேச முடியவில்லை. அவளை வெறுமையாய் பார்த்தேன்.

அவளே தொடர்ந்து,

"இல்ல! ரொம்ப வேர்க்குதில்ல, ஒருவேளை உங்க கிட்டே கர்சீப் இல்லாட்டி என்னோடத தரவா?" என்று கேட்கிறாள். அவள் குறும்போடு விளையாட எனக்கு நேரம் இருக்கவில்லை. நான் தறிகெட்டோடும் என் மனதை சாந்தப்படுத்திக்கொண்டிருந்தேன். ஆதலால் பதில் கூற இயலவில்லை.

விக்கித்து நிற்கும் என்னைப்பார்த்து அவள் மேலும் கேட்டாள்,

"ஏன் இப்படி வேர்க்குது?"

"வேகமாய் வந்தேன்! அதனால் வியர்க்குது"

"ஓஹ்! வேகமா வந்ததாலத்தான் லேட்டா வந்தேளா?"

-- அவள் வாய்க்கு நான் அவல் ஆனேன்!

"பஸ்டாண்டுக்குப் போயிருந்தேன்! அண்ணா ஊருக்குப் போறான், அவனை பஸ் ஏத்தி விடப் போயிருந்தேன்."

"அண்ணா?" -- உனக்கு அண்ணன் இருக்கிறானா எனும் கேள்வி இது.

"அண்ணன், என் பெரியம்மாவின் மகன்!" அவள் கேள்வி புரிந்து பதிலுரைத்தேன். அவள் சிரித்தாள். பிறகு தொடர்ந்து,

"இவ்வளோ லேட் ஆனதால ஒருவேளை இன்னைக்கு வரமாட்டீங்களோன்னு நினைச்சேன்!" -- என்று கூறினாள்.

எதிர்பார்த்திருக்கிறாள். என்னை எதிர்பார்த்திருக்கிறாள். நான் வரத்தாமதம் ஆனதும் வரமாட்டேனோ எனத் துயர் கொண்டிருக்கிறாள். ஆனால் ஏன்?

"எப்படி வராம இருப்பேன்?" என்று கூறி இடைவெளிவிட்டு அவளை ஒருமுறை ஆழமாகப் பார்த்து,

"உன்னை பார்க்காவிட்டால் இந்த நாளே பாழாகிவிடுமே!" என்று சொல்ல நினைத்ததை மனதுக்குள் ஒளித்துவிட்டு, "இன்னைக்கு முதல் நாள் டியூஷன் இல்லையா அதுதான் மிஸ் பண்ணக்கூடாதுன்னு வந்தேன்."

-- என்று என் பதிலை பூர்த்திசெய்தேன்.

"ம்ம்ம்.. நல்லதுதான்" என்கிறாள் புதிராக!

"என்னது?"

"மிஸ் பண்ணாம வந்திடனும் நு நெனச்சது!" என்று கூறி, என் முகம் பார்த்து புன்னகைத்தாள். சொல்லப்போனால் அவள் புன்னகைக்குள் என்னை புதைக்கப்பார்த்தாள். புதைபடாதிருக்க நான் பேச்சு மாற்றினேன்.

"அக்கா எங்கே?"

"யாரோ சொந்தக்காரங்க வந்திருக்கான்னு உள்ளே போயிருக்காங்க. வந்திடுவாங்க." -- பதிலுரைத்தபிறகு ஏதோ ஞாபகம் வந்தவளாய் சிரித்தாள்.

"என்ன ஆச்சு? ஏன் சிரிக்கிறாய்?"

"இல்லை! உங்களைச் சந்தித்த முதல் நாள் ஞாபகம் வந்தது. அன்னைக்கு மாதிரி இன்னிக்கும் அக்கா இல்லைன்னதும் ரூமை விட்டு வெளியே போறேன்னு சொல்லி அடம் பிடிப்பேளோன்னு நினச்சேன். சிரிப்பு வந்திட்டது"

-- என்கிறாள். எங்கள் முதல் சந்திப்பு நிகழ்வுகள் நினைவு வர நானும் சிரித்தேன். அக்கா இன்னும் வரவில்லை. டியூஷனில் மற்ற பிள்ளைகள் எல்லாம் ஒருவருடன் ஒருவர் அரட்டையில் மூழ்கியிருக்க அந்த கூட்டத்தில் நாங்கள் இருவரும் தனியாக இருந்தோம். ரஞ்சனி என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறாள். கண்ணோடு கண் பார்த்திருப்பது பேரானந்தம். வாய் பேசாது, மனம் பேசும். அவள் தைரியமாக என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாலும் எனக்கோ அவளை கண்ணோடு கண் நோக்க இன்னும் தைரியம் போதவில்லை.

கண்களால் என்னைக் கவரும் அவளீர்ப்பு விசையிலிருந்து தப்பிக்க பேச்சில் கவனம் செலுத்துதலே சிறந்த யோசனை என்பதால் பேச்சு வளர்க்க சம்பிரதாயக் கேள்விகளைத் தொடுத்தேன்.

"எங்கே படிக்கறீங்க?"

"LMS ல்!"

"எந்த க்ளாஸ் படிக்கறீங்க?" என்று நான் அடுத்து கேட்ட கேள்விக்கு பதில் தராமல்,

"அடடா! தயவு செஞ்சு இந்த 'வாங்க' 'போங்க' வ விடறீங்களா?” என்கிறாள் திடீரென்று.

"........." -- ஒன்றும் புரியவில்லை எனக்கு.

"எதுக்கு வாங்க போங்கன்னு பேசறீங்க? என்னை 'வா' 'போ' ன்னே கூப்பிட்டு பேசலாம் நீங்க" என்று அவள் விளக்க,

"எனக்கு பழக்கமில்லேங்க. நான் எல்லாரையும் வாங்க போங்கன்னு பேசித்தான் பழக்கம்!" என்றேன் நான்.

"எல்லார்கிட்டேயும் எப்படியோ பேசுக்கோங்கோ எனக்கு பிரச்சினை இல்லை. ஆனா என் கிட்டே 'வா' 'போ' போதும்." என்கிறாள் மீண்டும் குரலில் கண்டிப்பினைக் கலர்ந்து.

"சரிங்க... முயற்ச்சி செய்யறேன்." -- கண்டிப்புக்கு அடிபணிந்தேன்.

"அட ராமா! திரும்பவும் அப்படியேத்தான் சொல்றேள்!"

"நேக்கு சட்டுன்னு வராதுடி மாமி!" என மனதில் அலறிவிட்டு, "திடீர்னு இப்படி பேசச்சொன்னா வராதுங்க. போகப்போக நான் மாத்திக்கறேன்" என சாந்தமாய் அவளிடம் கூறினேன். தொடர்ந்து,

"நீங்களும் என்னை வாங்க போங்கன்னு தானே கூப்பிடறீங்க? நீங்க என்கிட்டே 'வா' 'போ'ன்னு ஒருமையிலே பேசினா நானும் உங்க கிட்டே ஒருமையிலே பேச வசதியா இருக்கும்" என்றேன்.

"ஐயோ! அது கூடாது. நான் எப்படி உங்கள ஒருமைல கூப்பிடறது? என்னால ஆகாதுப்பா, நீங்க பேசுங்க அது போறும்"

"ஏன் அதனால் என்ன? தாராளமா ஒருமையிலே பேசலாம். நாம friends தானே! friends சுக்குள்ளே ஒருமையிலே பேசுறதில் என்ன தப்பு?"

"அதுபற்றி அப்புறம் யோசிக்கலாம். நீங்க முதல்ல இந்த வாங்க போங்க வ நிறுத்துங்க" என்று கூறி விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாள். ஆனால், அவள் கூறியது எனக்குள் ஒரு விவாதத்தைத் துவக்கிவைத்தது.

எது பற்றி யோசிக்கலாம் என்கிறாள்? நாம் நண்பர்கள்தானே என்று நான் கூறியதற்கா இல்லை, அவள் என்னை ஒருமையில் அழைப்பதற்கா? நான் அவளை ஒருமையில் தான் அழைக்கவேண்டும் என்று இப்படி வற்புறுத்துகிறாளே ஏன்? அதேசமயம் என்னை ஒருமையில் அழைக்கச்சொன்னால் அது கூடாது என்று மறுக்கிறாளே அது ஏன்?

கிட்டத்தட்ட சண்டைபோடும் தோரணையில் நாங்கள் விவாதித்ததால் எங்கள் அருகே அமர்ந்திருந்த டியூஷன் பிள்ளைகள் எங்கள் விவாதத்திற்கு பார்வையாளர் ஆனார்கள். அதில் சாய்குமார் என்பவன்,

"அண்ணா, அக்கா தான் அவங்க School -ல School pupil leader." என எனக்குத் தெரிவித்தான்!

"ஓஹ்...! அப்படியாங்க? நீங்க சொல்லவே இல்லையே"

"ஐயோ ராமா! திரும்பவும் அப்படித்தான் பேசறர். அது என்ன அப்படியாங்க ன்னு அதுலயும் ஒரு ங்க? அப்படியான்னு மாத்திரம் கேட்டா போறாதா? இல்லைன்னா என் பேர் சொல்லி கூப்பிட்டா ஆகாதா?!"

-- சாய்குமார் உள்ளிட்ட பார்வையாளர்கள் கூட்டம் இப்போது அதிகரித்திருக்க அனைவரும் 'கொல்'லெனச் சிரித்தனர். இப்போது அனைவரின் பார்வையும் எங்களைச் சுற்றி மையம் கொள்ள, எனக்கென தனி ரசிகர் பட்டாளமும், அவளுக்கென தனி ரசிகர் பட்டாளமும் அமைய ரசிகர்களின் திருப்திக்காக நான் அவளையும், அவள் என்னையும் சீண்டுவது தவிர்க்க முடியாததாயிற்று. இந்த சீண்டல்கள் நெருக்கத்தை அதிகரித்தது. அன்றைய தினம் எங்களுக்காக எழுதப்பட்டதோ? அக்கா வராததால் அன்றையப் பொழுது அவளோடு அளவலாவிக்கழிந்தது!

என் பதினாற்றுச்சோலையில் குறிஞ்சி பூத்தது!

~~~ 0 ~~~

க்கா எனும் உறவில் எனக்கு யாரும் இல்லததால், அக்கா ஸ்தானத்தில் இருப்பவர்களை இயல்பாகவே எனக்குப் பிடித்துப்போகும். என் ஹிந்தி அக்காவுடனும் அதுபோலத்தான் ஆயிற்று. அக்காவை என் சொந்த அக்கா போன்றே கருதினேன். அக்காவும் அதே பாசத்தோடு என்னோடு பழகினார். டியூஷன் செல்வது என்பது மாறி என் சகோதரி வீட்டுக்குச் செல்கிறேன் எனும் உணர்வே மேலோங்கியிருந்தது. ரஞ்சனியைப்போல நானும் அக்காவுக்குச் செல்லப்பிள்ளை ஆகியிருந்தேன்.

ரஞ்சனியை நான் 'வா' 'போ' என ஒருமையில் விளிக்கத் துவங்கியிருந்தேன். அவள் கண்களால் என்னை சீண்டுவதை இன்னமும் விடாப்பிடியாகத் தொடர்கிறாள். டியூஷனில் அவள் எப்போதும் எனக்கு எதிரில்தான் வந்தமர்வாள். சந்தர்ப்பம் அமையும்போதெல்லாம் அவளை நான் பார்ப்பதும், நான் பார்க்கும் போதெல்லாம் அவள் என்னைப் பார்ப்பதும் வாடிக்கையாகிப்போனது.

ஹிந்தி எழுதுவது எனக்கு மிகக்கடினமான செயல். தமிழ் போல் அல்லாமல் நான்கு க, நான்கு ச என மெய்யெழுத்துக்களெல்லாம் நான்கு நான்காய் இருக்கும். எழுதும்போது எழுத்துகளுக்கு மேலே தொப்பி போல் எப்போதும் கோடு வேறு இடவேண்டும். "க்யா முசீபத் ஹை?"

என் எழுத்துதிறனைச் சிறப்பாக்கிட அக்கா அடிக்கடி எனக்கு எழுத்து வேலை தருவது வழக்கம். அப்படி ஒரு நாள் அக்கா எழுத்துவேலை தர, நான் அதை வகுப்பறைக்கு வெளியே உள்ள வராந்தாவில் சென்று எழுதி வருகிறேன் எனக்கூறி அக்காவின் அனுமதிபெற்று வெளியே வந்தேன்.

அவளும் வருவாள் என்று என் உள்ளுணர்வு கூறியது. உள்ளுணர்வு உணர்த்தியது போல் அடுத்த ஐந்து நிமிடத்துக்குள் அவளும் வந்தாள். வந்து என் அருகே அமர்ந்து எழுதத்துவங்கினாள். அவளைப் பார்த்து புன்னகையை பரிமாறிவிட்டு நானும் எழுதத்துவங்கினேன்.

மனதுக்குள் உண்டாகியிருந்த பிரணயத்தின் அல்லது பிரளயத்தின் எதிரொளி முகத்தில் வராமலும் எதிரொலி குரலில் வராமலும் சமாளிக்க பெரும்பாடு பட்டுக்கொண்டிருந்தேன். எனது ஒவ்வோர் அணுவும் ஆனந்தத்தில் ஆழ்ந்தது.

"ஏன் வெளியே வந்திட்டீங்க?" என்னைப் பாராமல் நோட்டுப்புத்தகத்தைப் பார்த்து எழுதிக்கொண்டே கேட்கிறாள்.

"உள்ளே ஒரே சத்தமாயிருக்குல்ல, இங்கே அமைதியா காற்றோட்டமா இருக்கு அதான்" நானும் எழுதிக்கொண்டே அவளைப் பார்க்காமல் பதில் கூறினேன்.

"நீ ஏன் வெளியே வந்திட்டே?"

-- நீங்கள் வந்ததால் எனும் பதில் வரும் எனும் அல்ப ஆசை கொண்டிருந்தேன் என்பது உங்களுக்கு மட்டுமான இரகசியம்.

"அதே சத்தம்.... அதே காற்றோட்டம்... அதேதான் என் காரணமும்!"

-- மூக்குடைந்தது! அவளே தொடர்ந்து,

"இங்க நல்லா காத்து வீசுதில்லே?" எனக்கேட்டாள்.

"ம்!" ஆமோதித்தேன்!

"அப்புறம் ஏன் உங்களூக்கு இப்படி வேர்க்குது?" அடிப்பாவி...! இதை எப்போது கவனித்தாள்?

"எனக்கு அப்படித்தான். காற்றடித்தாலும் சிலநேரம் மழை பெய்தாலும் வியர்க்கத் துவங்கும்." ஏதோ உளறிவைத்தேன்.

"விசித்திரமானவர் நீங்கள்" -- கூறி அவள் சிரித்தாள்.

"சித்திரமானவள் நீ" -- கூறாமல் நான் சிரித்தேன்!

அன்றும் நிறைய நேரம் பேசினோம். பேசுகையில் அவளை பல முறை சிரிக்கவைத்தேன். கண்ணில் கண்ணீர் வரும் வரை சிரித்தாள். அவள் சிரிப்பின் அழகை நானும் இரசித்தேன். என்னிடம் என்னைப்பற்றிய நிறைய கேள்விகளை அன்று அவள் தொடுத்தாள்.

"உங்களுக்கிருக்கும் ஆசை என்ன? கனவு என்ன? லட்சியம் ஏதும் இருக்கா?"

-- என்னைப்பற்றி கேட்டதில் முக்கிய கேள்விகள் இவை.

அதற்கு நான்,

"நிறைய விஷயங்களில் எனக்கு ஆசை உண்டு. பெருத்த ஆசை சாப்பாட்டில்தான். நான் ஒரு போஜனப்ரியன் என்று என் ஜாதகத்திலேயே எழுதியிருக்கு. அது என்னைப் பார்த்தால் கூட சுலபமாகத் தெரியும்." என்றேன்.

கலகலத்து சிரித்தவள். "சாப்பாட்டில் என்ன ரொம்ப இஷ்டம்?" எனக்கேட்டதற்கு,

"பிரியாணி... மட்டன் பிரியாணி" என்று நான் கூறிட, ஐயர் பெண்ணான அவள், அவளையறியாமல் முகம் சுளித்தாள். நான் என் நாக்கை கடித்து என்னை கடிந்துகொண்டேன். உடனே மன்னிப்பும் கேட்டேன்.

"மன்னிச்சுக்கோ! வாய் தவறி வந்திடுச்சு தப்பா எடுத்துக்காதே!"

"எதுக்கு மன்னிப்பு? பிரியாணின்னு சொன்னதுக்கா? எனக்கும் இஷ்டம்தான் பிரியாணி. நானும் பயங்கரமா சாப்பிடுவேன் தெரியுமோ?" என்று அவள் கூற தூக்கிவாரிப்போட்டது எனக்கு. என் முகத்தில் ஆச்சர்யகுறிகள் நடத்திய ஊர்வலத்தைக் கண்டு ரசித்தவள், ஊர்வலத்தை கலைக்கும் விதமாய்,

"வெஜிட்டபிள் பிரியாணி!" என்று கூறிச்சிரித்தாள் அல்லது அழகுற்றாள்!

இதைத்தொடர்ந்து அவள்,

"சரி, ஆசை ஆகிவிட்டது அடுத்து கனவு என்ன?" எனக்கேட்க, இந்த இரண்டாம் கேள்விக்கு பதிலுரைக்கும் முன் அவளிடம் ஒரு கோரிக்கை வைத்தேன்.

"சொல்கிறேன் ஆனா என் கனவைக் கேட்டு நீ சிரிக்கக்கூடாது"

"சரி.. சிரிக்கமாட்டேன்" -- என்கிறாள் சிரித்துக்கொண்டே!

"ஒரு சினிமா எடுக்கனும்" என நான் கூறவும் குபீர் என சிரிப்பு வந்தது அவள்க்கு. ஆனால் வாயை இறுக மூடி அடக்கிக்கொண்டாள். வாயைத்திறந்தால் சிரித்துவிடுவாள் என்பதால் சைகையில் என்னை மேற்கொண்டு பேசுமாறு கூறினாள்.

"நீ சினிமா பாக்குறதுண்டா?" -- அவளைக் கேட்டேன்.

"ம்ஹும்... பாக்கமாட்டேன்.. பிடிக்காது" என்று கூறியவள் உடனடியாக, "ஆனா நீங்க படம் எடுத்தா நான் கண்டிப்பா வந்து பார்ப்பேன்" என்கிறாள்.

இதைக்கேட்டு என் உள்ளம் குளிர்ந்துபோனது என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்துகொள்ளப் போகின்றீர்களா என்ன?

"சரி, லட்சியம் என்ன?" மூன்றாம் கேள்வியைத் தொடுத்தாள்.

"பெரிய லட்சியம் எல்லாம் ஏதும் இல்லை. நல்ல மனுஷனா இருக்கனும். நிறைய பேருக்கு இஷ்டமுள்ளவனா இருக்கனும் அவ்வளவுதான்." என்று நான் சொல்லியதற்கு அவள்,

"That you are already!" என்கிறாள் மிருதுவான குரலில்.

இதைக்கேட்டதும் என் இதயத்துடிப்பு மும்மடங்கு கூடியது! உண்மையில் இது அவஸ்த்தை நிலை. ஏதோ புதிய வரம் பெற்றார்போல உணர்ந்தேன். இந்த மகிழ்ச்சியிலேயே சற்று நேரம் ஆழ்ந்துகிடக்கத்தோன்றியது. மேற்கொண்டு பேச முடியாமல் ஏதோ அடைத்தது.

வெளியே வந்தும் வெகு நேரம் ஆயிற்று. ஆதலால் டியூஷன் அறக்குள் செல்ல முடிவு செய்து, "ரொம்ப நேரம் ஆச்சு, அக்கா தேடப்போறாங்க உள்ளே போலாமா?" கேட்டேன் அவளிடம்.

"ம்!" சம்மதம் மூளினாள். அக்கா சொன்ன கட்டுரையை எழுதிய காகிதங்களை எடுத்து அடுக்கிக்கொண்டிருக்கையில்,

"என்ன வயசு ஆகுது உங்களுக்கு?" என என் வயதைக்கேட்டாள் திடீரென்று.

"பதினாறு! மதுரப்பதினாறு! உனக்கு?" என் வயதைக்கூறி அவள் வயதைக் கேட்டேன்.

"கம்மிதான் கொஞ்சம் கம்மி, ஒரு ஒன்னிரண்டு வருஷம் வித்தியாசம் வரும்" என்று கூறி புன்னகைத்தவள், மெல்லிதாய் அவளுக்குள், "அப்ப பரவாயில்லை!" என்றும் கூறிக்கொண்டாள்!

அவள் கூறியது எனக்கும் கேட்டது. ஆனால், என்ன அர்த்தத்தில் பரவாயில்லை என்கிறாள் என்பதுதான் எனக்குப் புலப்படவில்லை. அவளிடம் கேட்க எத்தனித்தேன் ஆனால் அதற்குள் அவள் டியூஷன் அறைக்குள்ளே சென்றுவிட்டிருந்தாள்.

நான் அருட்பெருங்குழப்பத்தில் ஆழ்ந்தேன்.

~~~ 0 ~~~

பிணக்கமும் இணக்கமும் மாறி மாறி வரும் உறவில் நெருக்கம் நிறைந்திருக்கும். அந்த உறவும் பலம் மிகுந்ததாய் இருக்கும். எங்களுக்குப் பிணக்கம் கொள்ளவெல்லாம் சந்தர்ப்பம் அமையவில்லை. இணங்கியே இருந்தோம். ஆனாலும் எங்களை மனம் வருந்தச்செய்யும் ஒரு விஷயம் நடந்தது.

மகிழ்ச்சிப்பூக்கள் பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்த எங்கள் சோலையில் அக்கா குண்டு வீசினார். டியூஷனுக்கு வரும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகம் ஆகிவிட்டதால் இரண்டு btach-ஆக பிரித்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒவ்வொரு batch-க்கும் தனித்தனியே டியூஷன் என்றார் அக்கா.

என் உள்ளுணர்வு முன்பே உணர்த்தியிருந்ததுபோல் நானும் ரஞ்சனியும் வெவ்வேறு batch-ல் இடம்பெற்றோம். இரண்டு batch-க்குமே ஞாயிற்றுக்கிழமை டியூஷன் இருந்தாலும் இரண்டு batch-க்கும் இரு வேறு நேரங்களை நிர்ணயித்து அறிவித்தார் அக்கா. நானும் ரஞ்சனியும் சந்திப்பதைத் தவிர்க்கும் நோக்கத்தோடுதான் அக்கா இந்த முடிவு எடுத்தார் என்றே இன்றளவும் நான் நம்புகிறேன்.

நாங்கள் இருவருமே அக்காவுக்குச் செல்லப்பிள்ளைகள். எங்களுக்குள் காதல் போன்ற எண்ணங்கள் அந்த வயதில் அதும் டியூஷனில் வைத்து துளிர்விட்டு பிரச்சினை ஆகிவிடக் கூடாது என்று அக்கா நினைத்திருக்கலாம். அக்காவின் இந்த முடிவினால் மனம் வருத்தம் கொண்டிருந்தது. ஆனால், அக்கா மீது கோவம் ஏதும் வரவில்லை.

இதுகுறித்து நான் ரஞ்சனியிடமோ, அவள் என்னிடமோ ஒரு வார்த்தைகூட பேசவில்லை. பிரிவினை எங்களை பாதிக்கவில்லை ஆனால், அதற்காக நட்பு முறிந்திடாதல்லவா. சில ஞாயிற்றுக்கிழமைகளில் எப்போதேனும் அவள் டியூஷன் முடிய தாமதமானால் ஒரு ஐந்து அல்லது பத்து நிமிடம் பார்த்து பேசிக் கலைவோம். எங்கள் சந்திப்பு இவ்வளவுதான் என்றாலும் மனதுக்குள் அவளோடான நட்பு வேரூன்றி உறுதியாய் நிலைத்தது. மனதின் நெருக்கம் குன்றாமல் இன்னும் சொல்லப்போனால் குன்றுபோல் வளர்ந்தது.

வார நாட்களில் அவள் டியூஷன் போகும்போது அவளை நான் பார்ப்பதற்கு வினோதும் பக்ஷியும் ஒரு யோசனை தந்து உதவினார்கள். ரஞ்சனி, அவள் வீட்டுக்குப் போகும் பாதையில் ஒரு பள்ளிக்கூடம் உண்டு. அந்த பள்ளியின் மைதானத்தை ஒட்டிதான் அவள் வீட்டுக்குப் போகும் பாதை இருக்கும். அங்கிருந்து பார்த்தால் தொலை தூரம் வரை அவள் சைக்கிளில் செல்வது தெரியும். ரஞ்சனி, டியூஷனுக்குப் போகும்போதும் வரும்போதும் நான் அவளை பார்த்திடத் தோதுவாக, அவளுக்கு டியூஷன் உள்ள நாட்களில், நாங்கள் கிரிக்கெட் விளையாடும் இடத்தை அந்த பள்ளி மைதானத்திற்கு மாற்றினோம். சந்திக்க இயலாவிட்டாலும் அவளை நண்பர்கள் உதவியோடு இப்படி தரிசிக்க முடிந்தது.

ஒரு பக்கம் எனக்கு உதவினாலும் மறுபக்கம் இம்சித்தார்கள் என் நண்பர்கள். ரஞ்சனி வரும் நேரம் பார்த்து என் பெயரைச் சொல்லி உரக்கக் கத்துவார்கள். அந்த கால கட்டத்தில் "ரஜினிகந்தா பான் மசாலா" என்றொரு பான் மசாலாவின் விளம்பரம் அடிக்கடி டி.வி, ரேடியோக்களில் வருவதுண்டு. அதை இந்த பயல்கள் "ரஞ்சனிகந்தா பான் மசாலா" என்று பாடி என்னை மாட்டிவிடப்பாப்பார்கள். முக்கியமாய் நண்பன் வினோதுதான் இதைப்பாடுவான்.

[ஞாபகம் இருக்கா நண்பா?!]. நல்லவேளையாக நான் அங்கு விளையாடுவதும் அவளை பார்ப்பதும் அவளுக்குத் தெரியாது.

சில நாட்கள்தான் இந்த யோசனையும் செயல்பாட்டில் இருந்தது. பொதுவாக வார நாட்களில் நாங்கள் விளையாடுவது அரிதுதான் ஆகையால் ரஞ்சனியை பார்ப்பதும் அரிதானது. மாதங்கள் உருண்டோடியது. சந்திக்க இயலாத இந்த நீண்ட காலத்திற்குப் பிறகு அவளைச் சந்திக்க ஒரு சந்தர்ப்பம் அக்கா வழியாகவே அமைந்தது.

பொங்கலுக்கு டியூஷனில் பொங்கல் கொண்டாட எல்லோரையும் வீட்டுக்கு அழைத்தார் அக்கா. இதோ, நாங்கள் அக்காவோடு பொங்கல் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்!

~~~ 0 ~~~

ரஞ்சனி தந்த சக்கரைப் பொங்கலைச் சாப்பிட்டு வராந்தா படிக்கட்டில் அமர்ந்திருந்தேன். ரஞ்சனி என்னருகே வந்தாள். நான் உட்கார்ந்திருந்த படிக்கு ஒரு படி மேலே அமர்ந்தாள். எத்தனை நாள் ஆயிற்று இதுபோல் அருகருகே அமர்ந்து? நான் மகிழ்ச்சியில் திளைத்திருந்தேன். அவள் களைத்திருந்தாள்!

"என்ன ரொம்ப களைச்சுப்போனார்போல இருக்கீங்க?" நான் கேட்டேன்!!

"வேலை... நேத்து ராத்திரியிலிருந்து ஓயாத வேலை!"

"ஓஹ்! ‘தூங்கவேண்டியிருந்ததா?"

"கிண்டலா? பொங்கல் சாப்டேளே... நன்னா இருக்கா ஏதுன்னு சொன்னேளா?"

"நன்னா இருந்திச்சான்னு தெரியல.. ஆனா நல்லா இருந்திச்சு!"

"நானே பண்ணினேன் தெரியுமா?"

"கேட்டது!"

"கேட்டதா... என்ன சொல்றேள்?"

"ஆமா! நொடிக்கு நூறு தடவ நீங்கதான் விளம்பரம் செஞ்சிட்டிருந்தீங்களே.. நானே செஞ்சது, நானே செஞ்சதுன்னு!"

"உண்மையில் நானே செஞ்சது!"

"அட! திரும்பவும் அதே விளம்பரம்!" என்று நான் கூற, சட்டென என் பக்கம் திரும்பியவள் அவள் அணிந்திருந்த பட்டுச்சட்டையின் இடது கை பாகத்தை மேல் நோக்கி சுருட்டத்துவங்கினாள்.

"அடடா என்ன இது? திடீர்னு ரௌடித்தனத்துல இறங்கிட்டீங்க? கையெல்லாம் சுருட்டிட்டு பீமபுஷ்டி பயில்வான் ஆயிட்டிருக்கீங்க? சரி சரி நம்பிட்டேன்.. நீங்க தான் சக்கரைப்பொங்கல் செஞ்சது! சத்தியமா நீங்க தான் செஞ்சது!" என்று கூறி பயந்து நடுங்குவதுபோல பாவ்லா செய்தேன்.

"பாருங்க இங்க..." கையைக் காட்டினாள்! அவளது இடது கை மணிக்கட்டிற்கு மேல் எண்ணை தெறித்த அடையாளமாய் இரண்டு புள்ளிகள் இருந்தது.

"என்னது இது?" எனக்குப் புரியாததைப்போலக் கேட்டேன்!

"அப்பளம் சுடறச்சே எண்ணை பட்டிடுத்து. ஆத்துல அம்மாக்கு நான் தான் பூரா ஹெல்ப் பண்ணினேன் தெரியுமா? அம்மா நிறைய வேலை இருக்குன்னு என்னையே சக்கரைப்பொங்கல் செய்யச்சொன்னா!" என்றாள்.

"சரி சரி நம்பிட்டேன்." என்றேன்.

"ம்ம்ம்ம்ம்..." நம்ப வைத்த திருப்தியில் அவள் உம் கொட்ட நான், "புத்திசாலி தான்!" என்றேன் அவளைப்பார்த்து!

"ஏன்?"

"முன்யோசனையோட மையால புள்ளியெல்லாம் வச்சிட்டு வந்திருக்கீங்களே,. ஒரு மை! ஒரு பொய்ய மெய்யாக்கிடுச்சு பாத்தீங்களா?!" என்று கூறிய என்னை அவள் அடிக்க வர, நான் ஓட, அவள் என்னைத் துரத்த, அந்த நேரம் பார்த்து அக்கா அங்கே வர, நாங்கள் இருவரும் அமைதியானோம்.

"உங்க விளையாட்டுகள் இன்னும் தீரலியா?" என அக்கா சிரித்துக்கொண்டுதான் கேட்டார். ஆனால், ரஞ்சனியின் முகம் வாடிவிட்டது. எங்கள் இருவர் கையிலும் எக்ஸாமுக்கான அப்ளிக்கேஷனைத்தந்து அதை பூர்த்தி செய்து தரச்சொன்னார் அக்கா. ரஞ்சனி அதை பூர்த்தி செய்ய டியூஷன் அறைக்குள் நுழைய நான் வராந்தாவிலேயே அமர்ந்து அதை நிரப்பத்துவங்கினேன்.

அக்கா என் அருகிலேயே வராந்தாவில் உட்கார்ந்து மற்ற பிள்ளைகளோடு பேசிக்கொண்டிருந்ததால் என்னால் டியூஷன் அறைக்குள் செல்ல முடியவில்லை. சற்று நேரத்தில், ரஞ்சனி அப்ளிக்கேஷனை நிரப்பி முடித்து அக்காவிடம் நீட்டியவள்,

"அப்ப நான் கிளம்பட்டுமாக்கா?" என அவள் அக்காவிடம் கேட்க நான் திடுக்கிட்டு அவளைப்பார்த்தேன். இத்தனை நாள் கழித்து பார்க்கிறோம், இன்னும் சரியாகப் பேசக்கூட இல்லை, அதற்குள் கிளம்புகிறேன் என்கிறாளே?

"ஏம்மா? அதுக்குள்ளே கிளம்பறே... கொஞ்ச நேரம் கழித்து போகலாமில்லையா? இங்கே எல்லோரும் இருக்காங்களே?" என்று அக்கா சொன்னதற்கு,

"இல்லக்கா, வெளியே போறோம். அப்பா வீட்ல காத்திண்டிருப்பார். நான் சீக்கிரம் வந்திடறேன்னு சொல்லிட்டு வந்தேன்." என்று கூறியவளை நம்ப முடியாமல் நான் பார்த்துக்கொண்டிருந்தேன். சும்மா என்னை சீண்டிடத்தான் சொல்கிறாள் என்றே நினைத்தேன்.

"சரிம்மா.." என அக்கா அனுமதி கொடுக்க, அவள் அக்கா காலில் விழுந்து நமஸ்கரித்து எழுந்திருக்கும்போது என் கண் நோக்கி கண்களால் விடை கேட்டாள். நான் அவள் இப்போது கிளம்புவதில் எனக்கு உடன்பாடில்லை எனும் தோரணையில் அவளைப் பார்த்தேன்.

என் கண்கள் நல்ல பதில் தராததால்,

"கிளம்பறேன் அப்ப பார்க்கலாம்!" என்கிறாள் என்னைப் பார்த்து.

நான் அவள் சொன்னதை கவனிக்காததைப்போல குனிந்து மும்முரமாய் விண்ணப்பத்தில் எழுதிக்கொண்டிருப்பதைப்போல நடிக்க, "உன்னைத்தான் கேக்குறா. பதில் சொல்லேன்!" என அக்கா கூற வேறு வழியில்லாமல் நிர்கதியாய், நிராதரவாய், நிராசையாய் தலையசைத்து விடை கொடுத்தேன்.

அவள் புறப்பட்டாள்! நான் சங்கடம் கொண்டேன். சட்டென கண்ணில் நீர் திரள் யாரும் பார்க்காதிருக்க வகுப்புக்குள் சென்றுவிட்டேன். பார்க்கத்துடித்ததும், பேசத்துடித்ததும் நான் மட்டும் தானோ? இத்தனை நாள் சந்திக்க இயலாமல் வருத்தம் கொண்டது நான் மட்டும் தானா? எத்தனை தலை போகும் அவசரம் இருந்தாலும் என்னை சந்திக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பாழ் படுத்தி இப்படிச் செல்லவேண்டுமா?

"உங்கள் விளையாட்டு தீரவில்லையா" என அக்கா கேட்டதுதான் காரணமா? அது தான் காரணம் என்றால், அதையெல்லாம் ஒரு காரணம் ஆக்கலாமா? அக்கா ஒன்றும் கண்டிக்கவில்லையே, சாதாரணமாகத்தானே கேட்டார்கள். அதற்காக என்னை உதாசீனப்படுத்தி இப்படிப் போவது தகுமா? இங்கே என் ஆசை பாழாகுதே அது உனக்குப் பரவாயில்லையா? என்னை கையொழிந்தாயே நியாயமா?

அவளின் இச்செயல் என் தன்மானத்திற்கு நேர்ந்த இழுக்காக எனக்குத்தோன்ற எனக்கு என்மீதே கட்டுக்கடங்காத கோவம் வந்தது. அவளை பார்ப்பதோ பேசுவதோ இனி எந்த சந்தர்ப்பத்திலும் கூடாது என உறுதிகொள் என கட்டளைக்குரல் ஒன்று எனக்குள் ஒலித்தது.

விருப்பினையும் வெறுப்பினையும் பிரிக்கும் இடைவெளி ஒரு மயிரிழையளவுதான். அவள் மேலான என் விருப்பு இன்னும் வெறுப்பாகவில்லை. ஆனால், என்னளவு விருப்பு அவளுக்கு இல்லை என்பதை பறைசாற்றுவது போல அவள் புறப்பட்டுப்போன செய்கை அமைந்ததால், நான் அவளுக்கு முக்கியம் இல்லை என்பதாய் நான் உணர்ந்ததால், அவள் மேல் எனக்கிருந்த விருப்பம் குறைந்தது. ரஞ்சனி எனும் பதம் இனி என் இதயத்திற்குள் அதிர்வுகளை உண்டாக்காது!

~~~ 0 ~~~

காணத்தவிப்பதற்கு ஓர் காலம்! காணத்தவிர்ப்பதற்கும் ஓர் காலம்!

ரஞ்சனியை அதன் பிறகு நான் சந்திக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் சிலநேரம் சந்திக்க நேர்ந்திடும் என்பதால் அன்றைய தினத்தில் டியூஷன் போகாமலோ அல்லது தாமதமாகச் சென்றோ அவளைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களை தவிர்த்துவந்தேன்.

ஹிந்தி பரீட்சைக்கான ஹால் டிக்கெட் வந்தது. நாள் பார்த்து, நேரம் பார்த்து, பூஜை செய்து தான் அக்கா அதை எங்களிடம் வழங்குவார். வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை அதற்காக எல்லோரையும் வரச்சொல்லியிருந்தார் அக்கா.

அந்த வாரத்தில் ஒரு நாள், ரஞ்சனியின் batch-ல் படிக்கும் சாய்குமார் எனக்காகக் காத்திருந்தான். அவன் எனக்கான சேதி ஒன்றை ரஞ்சனியிடமிருந்து தாங்கி வந்திருந்தான்.

அவள் என்னை சந்திக்கவேண்டுமாம். வரும் ஞாயிறன்று அவளை நான் அவசியம் சந்தித்தே ஆகவேண்டுமாம். அதற்காக அக்கா சொன்ன நேரத்திற்கு சற்று முன்பாகவே நான் டியூஷன் செல்ல வேண்டுமாம். அவளூம் அன்று சீக்கிரம் வந்திடுவாளாம்!

ஆகட்டும் எனக்கூறி சாயிக்குமாரை அனுப்பிவைத்தேன். சாதாரணகதியில், இந்நேரம் நான் இறக்கை முளைத்து வின்னில் பறந்திருக்க வேண்டும். உணர்வுகள் இறந்திருந்ததால் அப்படி ஏதும் நடக்கவில்லை. தரை தொட்டே நிற்கின்றன என் கால்கள்.

அன்று, என் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் ஏதேதோ காரணம் கூறி என்னை தவிக்கவிட்டவளை நான் தவறாமல் அவசியம் சென்று சந்திக்கவேண்டுமாம். அவளைச் சந்திக்கக் கூடிவரும் நாளுக்காக காத்திருந்து ஆசையோடு வந்த என்னை நிராசை செய்து 'நான் ஒரு பொருட்டே அல்ல' என்பது போல போனவளை நான் கண்டிப்பாகப் போய் பார்க்கவேண்டுமாம். இதுவென்ன நியாயம்? அவளைச் சந்திக்கும் அவசியம் ஏதும் இல்லை என மனம் தீர்க்கமான ஒரு முடிவை எடுத்தது.

தவிப்பதற்கோர் காலம்! தவிர்ப்பற்கோர் காலம்!

ஞாயிற்றுக்கிழமை....,

என் முடிவில் மாற்றம் ஏதும் நிகழவில்லை. டியூஷனுக்கே அன்று போகவேண்டாம் என்றுதான் முதலில் நினைத்தேன் ஆனால், நேரம் காலம் பார்த்து ஹால் டிக்கெட் தருவதால், இன்று போகாவிட்டால் அக்கா கோபித்துக்கொள்வார். ஆதலால் மிகவும் தாமதமாகக் கிளம்பினேன் டியூஷனுக்கு.

அக்கா வீட்டிற்கு பின்பக்கமாக உள்ள தெருவழியாகச் சென்று, பின்பக்க மதில் வழியே அவளின் சைக்கிள் இருக்கிறதா என எட்டிப்பார்த்தேன். இல்லை! ஹால் டிக்கெட் வாங்க வந்திருந்தவர்களும் ஒவ்வொருவராகக் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். சைக்கிள் இல்லை, ஆதலால் ரஞ்சனி எனக்காகக் காத்திருந்துவிட்டு போய்விட்டிருக்கக்கூடும் என்பதை உணர்ந்த மனம் பூரிப்படைந்தது, வென்றுவிட்டேன்! அவளை வென்றுவிட்டேன் என கூக்குரல் ஒன்று எனக்குள் ஒலமிட்டது.

"அண்ணா! இங்கே என்ன பண்றீங்க?"

-- அந்தத் தெருவில் சாயிக்குமார் வந்துகொண்டிருந்தான்.

"பின்னால நின்னிட்டு என்னண்ணா பண்றீங்க?" டியூஷன் பின்புறச் சுவர் வழியாக உள்ளே எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த என்னை ஆச்சரியமாய் பார்த்து கேட்டான் அவன்.

"ஒன்னுமில்லேடா, என் friend வீடு இந்தத் தெருவுலதான் இருக்கு அவன் வீட்டிலருந்து வந்திட்டிருக்கேன்."

"ரஞ்சனி அக்காவ பாக்கலையா?"

-- என் பதிலை காதில் போட்டுக்கொள்ளாதவனாய்க் கேட்கிறான்.

"இல்லை டா லேட் ஆயிடுச்சுல்ல, போயிட்டாளா? பரவாயில்ல, இன்னொரு நாள் பார்த்துக்கலாம். நீ நாளைக்கு அவளைப்பார்த்தால் சொல்லிடு"

-- என்று கூறி நடக்கத்துவங்க,


"ஐயோ! அந்த அக்கா இனிமே வரமாட்டாங்க. அவங்க அப்பாக்கு டிரான்ஸ்பர் ஆயிடுச்சாம். அவங்க ஊரைவிட்டுக் கிளம்பறாங்க..."

-- என்றான் கிட்டத்தட்ட அலறும் குரலில்.

என் நெற்றிப்பொட்டில் ஏதோ அறைந்தார்போல இருந்தது,

"என்னடா சொல்றே? அவ என் கிட்டே ஒன்னும் சொல்லவே இல்லையே!"

-- என்றேன் பரிதாபமாக.

"அதுக்குதான் உங்கள பாக்கனும்னு சொல்லியிருப்பாங்க. டியூஷன்லயே ரொம்ப நேரம் காத்திருந்தாங்க, இப்ப நான் வரும்போது கூட முன்பக்க கேட் கிட்டே நின்னிட்டிருந்தாங்க சீக்கிரம் போய்ப் பாருங்க"

-- என்று சாயி சொல்லி முடிக்கும் முன் பறந்தேன் அங்கிருந்து!

'இனி அவளைப் பார்க்க முடியாதோ?' எனும் எண்ணம் என் கோவத்தைக் கரைத்தது! தலையிலிருந்து ஒரு வெப்பம் உடல்வழி இறங்கிப்போவதை என்னால் உணரமுடிந்தது.

கேட்டில் அவள் இல்லை! ஓடினேன் தெரு முனைக்கு....!

டிரான்ஸ்பர் விஷயத்தை ஏன் என்னிடம் சொல்லவில்லை? அது தெரிந்திருந்தால் ஓடோடி வந்திருப்பேனே...

தெருமுனையில் அவளைக் காணவில்லை! அவள் வழக்கமாய் வீட்டுக்குப்போகும் பாதையில் ஓடினேன்!

தேவையில்லாமல் உன்மேல் கோவம் கொண்டேனோ? ஏதோ ஒரு மனசங்கடத்தில் அன்று நீ கிளம்பிச்சென்றிருப்பாய், நான்தான் உன் நிலையை புரிந்துகொண்டு சாந்தமாகியிருக்க வேண்டுமோ?

அவள் தென்படவில்லை!

இன்னும் சற்று தூரத்தில் பள்ளிக்கூடம் வரும் அங்கிருந்து பார்த்தால் இந்தப்பாதை சற்று தொலைவு வரைத்தெரியும். முன்பு வாரநாட்களில் அவள் டியூஷனுக்கு வரும்போது இங்கிருந்து பார்ப்பதுதான் வழக்கம்....!

பள்ளியை நோக்கி என் ஓட்டத்தைத் தொடர்ந்தேன்!

நீ வரச்சொல்லியும் வராமல், காத்திருந்தும் என்னைக் காணாமல் எத்தனை துயர் கொண்டிருப்பாய் நீ? அந்த வேதனை எனக்குத் தெரியும். என்னாலேயே தாங்க முடியவில்லை. நீ எப்படித்தாங்கியிருப்பாய்?

ஓடுகிறேன்...!

ரஞ்சனி, ஒரு முறை ஒரே ஒரு முறை உன் அழகு முகத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா? அன்று நீ, நாம் ஒன்றாகப் பழகுவதை அக்கா தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது என நினைத்து அந்த நல்ல காரணத்துக்காகக் கிளம்பியிருந்திருப்பாய், ஆனால் நானோ இன்று உருப்படாத வெறும் கோவம் காரணமாக, என் வறட்டு கௌரவம் காரணமாக, தேவையில்லாத இருமாப்பு காரணமாக வேண்டுமென்றே உன்னை உதாசீனப்படுத்திட்டேனே?

ஓடுகிறேன்...!

அன்று என்னிடம் அதிகம் பேசாது போனதற்கு நிச்சியம் கவலை கொண்டிருப்பாய், நானோ இன்று உன்னை பார்ப்பதைத் தவிர்த்ததை எண்ணி எள்ளி நகையாடினேனே? கடவுளே! நான் ஏன் இப்படி ஆனேன்? ஆண்டவா, இக்காவியம் இப்படியா முடிவுறவேண்டும்?

ஓடுகிறேன்...!

நான் நல்ல நண்பனே அல்ல ரஞ்சனி. வெறும் சுயநலவாதி. என் உணர்வுகளுக்கு மட்டுமே அக்கறை கொண்டிருந்தேன். உனக்கு தாங்காய் இருக்கவில்லை. உன் உணர்வுகளுக்கு மதிப்பும் கொடுக்கவில்லை. என் ஏமாற்றத்திற்கு நம் நட்பையே காவு கொடுக்கத்துணிந்த காதகன் நான். அதற்கு உன்னை பார்க்க முடியாமல் போவதுதான் தண்டனையா பெண்ணே! தயவுசெய்து என் கண்ணில் தென்படு!

தென்படவில்லை....!

பள்ளிக்கூடத்திற்கு வந்து மைதானத்தில் நுழைந்து, மைதானத்தின் மறுபக்கத்தை ஓடி அடைந்து, பள்ளியின் காம்பவுண்டு சுவர் மீது ஏறிப் பார்த்தபோது வளைந்துசெல்லும் அப்பாதையின் மறு கோடியில் தூரத்தில் அவள் சைக்கிளில் போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. தூரத்தில் வெகு தூரத்தில் போய்க்கொண்டிருக்கிறாள். என்னை தாளாத துயரத்தில் ஆழ்த்தி போய்க்கொண்டிருக்கிறால். இனி ஓடியும் பிரயோஜனம் இல்லை. ஓடினாலும் அவளை அடைய முடியாது.... கடைசி முயற்ச்சியாய்!

ஆன மட்டும் சக்தியை திரட்டி கை தட்டி கத்தி அழைத்தேன்....,

"ரஞ்சனீனீனீ........"

அவள் திரும்பவில்லை! அவளுக்கு கேட்கவில்லை! சிவரஞ்சனி என் கண் எல்லையிலிருந்து மறைந்துபோனாள்!

தவிர்ப்பதற்கோர் காலம் பின்பு, தவிப்பதற்கோர் காலம்!

Tuesday, September 29, 2009

வானவில் பூக்கள்! [ஒரு ஆரிய பூ!]

"யே ஆயே ஹோ?"

எனக்கு நான் மட்டுமே துணையாய், வகுப்பறையில் என் இடத்தில் தனியே அமர்ந்து ஜன்னல் வழியே வெளியே எங்கோ எதையோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த ஒரு இண்ட்டர்வல் சமயத்தில் என் செவியில் விழுந்த ஹிந்தித்தேனைச் சிந்தியது யார் என அதிர்ந்து திரும்ப, அங்கே என் அருகே பூத்திருந்தது ஆரிய பூ ஒன்று!

"புதுசா?" என்று தான் அவள் கேட்டிருக்கவேண்டும் என ஊகித்து "ஆம்" என்ற பதிலாய்த் தலையாட்டினேன் திராவிடப் பணிவுடன்.

"மதறாஸ் கே ஹோ?" -- மீண்டும் தூற்றினாள் தேனினைச் செவியினில்!

ஆம் என்பதை இலகுவாய் "ஹாம்!" என்றேன். என் பதில் ஹிந்தியாய் மாறி அவளைச் சென்றடைந்த வேளையில் மனம் "இவள் யாராக இருக்கக்கூடும்?" என்பதை அகழ்வாராய்ச்சி செய்யத்துவங்கியது. அவளோ அகழ்வாராய்ச்சியில் என்னை மூழ்கவிடாமல் அடுத்த தேனினைச் சுரந்தாள் என் மீது தெளிக்க!

"மதறாஸ் மேம் கிதற் கே ஹோ? டமிள்நாடு யா பிர் கேரள்?"
-- தெளித்திட்டாள் அவள் சுரந்திட்ட தேனினை!


ஹிந்தி ஒத்துழையாமை இயக்கம் நடத்தும் என்பதால், நான் தமிழ் பாதி, கேரளம் பாதி எனும் கதையெல்லாம் கதைக்காமல் அளவாய் அழகாய்,

"தமிழ்நாடு கா ஹும்!" என பெருமூச்சு வாங்கினேன்!


இவள் கேட்ட இந்த கேள்விக்காக, "அட, பரவாயில்லையே இவள்!" - என மனம் இவளைப் போற்றியது. காரணம், மளையாளிகள், ஆந்திராக்காரர்கள், கர்நாடகா வாசிகள், தமிழர்கள் என இவர்கள் அனைவருமே "மதறாஸி" தான் இந்த ஹிந்தி காரர்களுக்கு.

எந்த ஊர் என்ற கேள்விக்குப் பதிலாக தென்னகத்தின் எந்த இடத்தைக் கூறினாலும் "மதறாஸி" என்று வகைப்படுத்தி விடுவார்கள். தென்னகத்தைப் பற்றிய அறிவும் அக்கறையும் இவர்களுக்குக் கொஞ்சம் கூட இல்லையே என நான் வருத்தப்படுவதுண்டு. ஆனால் இப்பூவோ, அந்த அறிவும் அக்கறையும் கொண்டிருக்கிறாள். ஆதலால் மனம் இவளைப் போற்றிப் பாராட்டியது.


"சர் நேம் க்யா ஹை?" -- குடும்பப் பெயர் கேட்டாள். நான் குடும்பப் பெயர் கூறினேன். இதைத்தொடர்ந்து குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயரையும் வரிசையாய்க் கேட்டாள். அதும் போதாதென்று குடும்பத்தார் என்னை அழைக்கும் செல்லப் பேர் என்ன என்றும் கேட்கிறாள்?

வெட்கத்தோடு நானும் அதைக் கூறினேன் நகம் கடிக்காமல்!

"உன்னை நாங்கள் எப்படி அழைக்க வேண்டும்? இயற்பெயரிலா இல்லை குடும்பத்தார் அழைக்கும் செல்லப்பெயரிலா?" -- என்றவள் கேட்டதற்கு,

"நீ எப்பெயர் அழைத்தாலும் அப்பெயர் நற்பெயரே!" என மனதில் நினைத்து. "உங்கள் வசதிப்படி அல்லது உன் விருப்பப் படி எப்படி வேண்டுமென்றாலும் அழை" -- என்றேன் ஓட்டை ஹிந்தியில்.

" T K " -- என்றாள். இது ஆங்கில "ok" யின் ஹிந்தி வார்ப்பு!

"அபேஹ் ஓஹ் மதறாஸி!" என்பதே என் வகுப்புத் தோழர்கள் பெரும்பாலும் என்னை விளிக்கும் விதம்.

இதைத்தவிர நான் கொஞ்சம் (கொஞ்சமா?) குண்டாய் இருந்ததால். "மோட்டூ [குண்டன்]!" என்றும், "டமாட்டர் [தக்காளி]" என்றும், "ஆலூ [உருளைக்கிழங்கு]" என்றெல்லாம் கூட என்னை என் சம்மதம் பெறாமலேயே அழைத்து வந்தனர் தோழர்கள்.

முதல் முதலாய் இவள் தான் பெயர் சொல்லி அழைக்கவா? செல்லப் பெயர் சொல்லி அழைக்கவா? எனக்கேட்கிறாள். இவள் மீது எனக்குள்ள மதிப்பு கூடாது போனால் தானே அது அதிசயம்?


இவள் யாராக இருக்கக்கூடும் எனும் கேள்விக்கு விடைதேடி மனம் நடத்திய அகழ்வாராய்ச்சியில், க்ளாஸ் லீடர் ஒரு பெண் என்றும் உடல் நிலை மோசமாக உள்ளதால் அவள் இன்னும் வகுப்புக்கு வந்த பாடில்லை என்றும் என் வகுப்பு நண்பர்கள், அவர்களின் அரட்டைக்கிடையே, முன்பு எப்போதோ பேசிக்கொண்டி ருந்ததில், ஆங்காங்கே புரிந்த ஓரிரு வார்த்தைகளைக் கோர்த்து, நான் அரை குறையாக புரிந்துகொண்டிருந்தது ஞாபகம் வந்தது.

இவள் தான் அந்த க்ளாஸ் லீடரோ?

"அச்சா மில்தே ஹை!" -- என்று கூறி கை கூப்பினாள். அச்சப்படாது வணக்கம் கூறச்சொல்கிறாளோ? நானும் கை கூப்பி வணக்கம் கூறி விடை பெற்றேன்.

அழகாய் இருக்கிறாள். கரிசனமாய் பேசுகிறாள். கிளாஸிலேயே அழகான பெண் இவள் தான் என்பதிலும் இரு வேறு கருத்து இருக்க வாய்ப்பில்லை.

பிங்க் நிறத்தில் வெள்ளை கட்டம் போட்ட டாப்ஸ், வெள்ளை நிற பேண்ட் கொண்ட சல்வார்தான் எங்கள் பள்ளியின் பெண்கள் சீருடை. அவளின் மெலிந்த தேகத்திற்கு அந்த உடையும், அவளின் தும்பை நிறத்திற்கு உடையின் நிறமும் கனக்கச்சிதமாய்ப் பொருந்தியது. துப்பட்டாவால் தலையில் முக்காடு இட்டிருக்கும் அவளைப் பார்க்கையில் மனதுக்குள் அமைதியும் உற்ச்சாகமும் பிறந்தது.


சாதாரண சந்திப்பு தான் இது. மனதெல்லாம் தித்தித்தது.

இல்லை இல்லை, நீங்கள் புரிந்துகொண்டிருப்பது தவறு...
அது காதல் அறியா வயது என்பதால், காதல்வயப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் மனது மகிழ்ந்திருந்தது!

~~~ 0 ~~~

போபாலில் [மத்திய பிரதேசம்], பள்ளிகளில் காலை ஏழரைக்கெல்லாம் வகுப்பு ஆரம்பித்துவிடும். முதல் வகுப்பு ஆங்கிலம். Shingulu என்றொரு ஆங்கிலோ இந்திய வயதான கண்டிப்பான பெண்மணிதான் இங்கிலீஷ் டீச்சர்.

கொஞ்சமேனும் புரியும் வகுப்பு இது ஒன்று தான். இது இங்கலீஷ் மீடியம் பள்ளியாக இருந்தாலும், இந்த ஒரு வகுப்பு தாண்டினால் மற்ற ஆசிரியர்கள் பெரும்பாலும் ஹிந்தியிலேயே மற்ற பாடங்களை நடத்துவ தால் என் கவனமெல்லாம் நீண்ட மணியோசை எப்போது ஒலிக்கும்? எப்போது வீடு போய்ச்சேரலாம்? எனும் எதிர்பார்ப்பிலேயே ஓடும்.
வகுப்பில் எனக்கு நண்பர்கள் இருக்கவில்லை.

"மதறாஸி" என்று அழைக்கப்பட்டு கேலிக்குள்ளாக்கப்படுவதால் உண்மையில் யாரோடும் ஒட்டவும்
முடியவில்லை! சலீம் என்றொருவனும், ரஷீத் என்று மற்றொருவனும் என்னோடு அனுசரனையாக நடந்து கொண்டாலும், சரளமாய் ஹிந்தி பேச வராததால் அவர்களோடும் ஒன்றிட இயலவில்லை. ஆதலால் நான் என்னை மட்டுமே என் நண்பனாக்கி என்னுடன் மாத்திரமே தனிமை இனிமை கண்டு இருந்திருந்தேன்.

மற்ற நண்பர்கள் ஒன்று கூடுவார்கள். கூட்டத்தில் தனியாய் நானும் அங்கிருப் பேன்.
அரட்டை அடிப்பார்கள், அரட்டை புரிந்தவரைக்கும் அல்லது புரிந்தார்போல ஒரு சிரிப்பை மட்டும் முகத்தில் ஒட்ட வைத்து, நானும் அவர்களது அரட்டையில் கலந்து வைப்பேன்.

பதினொரு மணிக்கெல்லாம் நல்ல சூடு சமோசாக்கள் மணக்கத்துவங்கும். பள்ளிக்கூடத்தின் பிரதான வாயிலில் உள்ள பெரிய இரும்புக் கதவின் மறு பக்கத்தில் சமோசா வண்டி வந்து நிற்கும். இண்டெர்வல் சமயத்தில் மாணவர்கள் சமோசாவோ அல்லது கச்சோரியோ அல்லது சோலாடிக்கியோ வாங்கிச் சாப்பிடுவார்கள். வட இந்தியாவில் பெரும்பாலன மக்கள் காலை உணவாக உண்பது அவலும், ஜிலேபியும்!

இண்டெர்வல் சமயத்தில், மணி அடித்ததும் ஓடிச்சென்று சுடச்சுட கமகமக்க்கும் சமோசா வாங்கி உண்பது ஒரு ஆனந்தமான செயல். அந்த சமோசாக்களின் சுவையே அலாதி!


வகுப்புகளில் எனக்கு எப்போதும் கண்டம் இந்த ஹிந்தி வகுப்பு தான். வெள்ளை பைஜாமா குர்தா அணிந்த சிரிக்காத ஆசான் இறுகிய முகத்தோடு முறைக்காத குறையாக வகுப்புக்குள் நுழைந்து ஆக்ரோஷமாய் ஹிந்தி எடுப்பார். அவருக்குப் பொழுது போகாவிட்டால் என்னை எழ வைத்து ஹிந்தி வாசிக்கச்சொல்லி அழ வைப்பார்.

எனக்கோ ஹிந்தி வேகமாய் வாசிக்க வராது. நான் தட்டுத் தடுமாறி
திக்கித்திணறி வாசிக்க, நான் படிக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் வகுப்பில் சிரிப்பொலி எழும். குர்த்தா ஆசிரியர் ஒரு வெறுப்போடு என்னை பார்ப்பார். பிறகு, "நீ படித்த அழகு போதும்" எனும் பாவனையோடு சைகை காட்டி அமரச்செய்வார். அப்போது வகுப்பே என் பக்கம் திரும்பி பரிதாபமாகவோ, கேலியாகவோ என்னைப் பார்த்துக்கொண்டிருக்கும். நான் வெறுமையாய் உட்கார்ந்திருப்பேன். இதைத் தொடர்ந்து உருது வகுப்பு. அதில் எழுத்து கூட்டிக் கூட ஒன்றும் வாசிக்கத் தெரியாது. அப்போதும் வீசும் அனுதாப அலை.

இப்படி ஒவ்வொரு நாளும் கடினமாகிக் கொண்டிருக்க, மீண்டும் பாட்டி ஊருக்கே சென்று புரியும் பாஷையில் படிப்பினைத் தொடர்வதே எனக்கும் ஹிந்திக்கும் நல்லது என்று தோன்றியது. ஆனால், அப்பா அம்மாவை விட்டு மீண்டும் பிரிந்து இருக்க என்னால் முடியாது. நல்ல நண்பர்கள் இருந்தாலேனும் ஒரு ஆறுதல் இருந்திருக்கும். அதுவும் இல்லை.

வேறுபட்ட நிலத்தில் நடப்பட்ட என் வேர் பட்டுப்போனது! வேறுபாடுகள் ஈடுபாட்டினைக் குறைக்க, நாளுக்கு நாள் நான் மக்கு மாணவனாக உருக்குலைந்து கொண்டிருந்தேன்.

பிடிப்பில்லாது இப்படி தவித்துக்கொண்டிருந்த வேளையில் தான் என் முன்னே பூத்து செந்தேன் தூற்றி என்னுள் "பிடிப்பு" உண்டாக்கினாள் இப்பூ!

~~~ 0 ~~~

Hazala - அப்பூவின் பெயர். என் க்ளாஸ் லீடர்!

வகுப்பில் ஒரே ஆறுதல் இவள் என்றானாள். கூட்டத்தினின்று விலகி தனியே என் உலகில் ஆழ்ந்து போயிருக்கும் சமயங்களில், அதை கவனித்து என் அருகே வந்து பேச்சுக்கொடுப்பாள். "ஹிந்தியிலேயே பேசு அப்போதுதான் ஹிந்தி வசப்படும்" என்பாள். ஒவ்வொரு நாளும் என் ஹிந்தி சிறக்கின்றது என்று கூறி என்னை ஊக்குவிப்பாள். ஹிந்தி வசப்பட்டதோ இல்லையோ, நான் அவள் வசப்பட்டேன்!

Shingulu மேடத்தின் வகுப்பில் ஒரு நாள் திடீரென மேடம் என்னை எழவைத்து ஆங்கிலப் புத்தகம் எடுத்து உரக்க வாசிக்கச் சொன்னார்கள். நான் என் பை கட்டைத் தடவினால் அதில் எல்லா புத்தகமும் இருந்தது ஆங்கிலப் புத்தகம் தவிர. நிலமையைச் சமாளிக்க பக்கத்து நண்பனிடம் புத்தகம் கேட்டேன், அவன் தர மறுத்துவிட்டான். இதை கவனித்த மேடம் என் அருகே வந்து என்ன விஷயம் என வினவினார். புத்தகத்தைக் கொண்டு வரவில்லை என்று கூறினேன். அடுத்த வினாடி, "பொளேர்" என பொறி பறக்க என் கன்னத்தில் விட்டார் ஒரு அறை. நான் நட்சத்திரங்கள் எண்ணினேன். அடித்தும் அடங்காத கோவத்தில் ஏதேதோ இன்னும் கூறி என்னை திட்டிவிட்டு அமரச்செய்தார் Shingulu மேடம்.

வகுப்பு முடிந்ததும் Hazala என் அருகே வந்தாள். நான் தலையை குனிந்தே இருந்தேன். டெஸ்க்கில் என் கண்ணீர் துளிகள் குளம் கட்டியிருந்தது. அவள் என்னை அழைத்தாள், நான் தலை நிமிரவேயில்லை. பிறகு அவளே தன் கை கொண்டு என் தாடையை பிடித்துத் தூக்கினாள். என் கன்னத்தில் காங்கிரஸ் சின்னம் பதிந்திருந்தது கண்டு அதிர்ந்தாள்.

புத்தகம் கொண்டுவரவில்லை அவ்வளவுதானே! அதற்குப்போய் விரல் பதியும் அளவுக்கு இப்படியா அடிப்பது? எனும் பொருள் பட அவள் ஹிந்தியில் ஆதங்கப்பட்டாள். பிறகு என்னைச் சமாதானப்படுத்தும் விதமாக,

"அந்த மேடம் அப்படித்தான் திடீரென கோவம் வந்திடும் நீ கவலைப்படாதே"
-- என்று ஆறுதல் கூறியவள், என் அருகில் உட்கார்ந்திருந்த, எனக்குப் புத்தகம் தராத, அந்த நண்பனை எனக்கு புத்தகம் தர மறுத்ததற்காக கோபித்துத் திட்டினாள்.

"பரவாயில்லை விடு" என நான் கூறியும் கேட்காமல் அவனோடு சண்டை யிட்டாள். பிறகு, அவனை அங்கிருந்து வேறு எங்கேனும் போய் உட்கார் என உத்தரவிட்டுவிட்டு [கிளாஸ் லீடர் அல்லவா அவள்க்கு இந்த அதிகாரம் இருந்தது] அன்று முழுதும் அவள் என் அருகிலேயே என்னோடு அமர்ந்திருந்தாள். [போபால் பள்ளிகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி இடம் என்பது கட்டாயம் இல்லை, கலந்தும் அமர்ந்துகொள்ளலாம்]!

எனக்கு மிகவும் ஆறுதலாய் இருந்தது அவள் எனக்காக என் அருகே வந்து அமர்ந்தது. இவள் தோழமை எனக்கு வேண்டும் என்று மனம் விரும்பியது. அவளின் மிக நெருங்கிய தோழனாய் நான் ஆகவேண்டும் என்று ஒரு ஆசையும் பிறந்தது.

~~~ 0 ~~~

நான் பள்ளிக்குப் பேருந்தில் போய் வருவேன்! ஒரு நாள் என் பேருந்து நிறுத் தத்தில் நான் காத்திருக்க, எதிர் திசையில் செல்லும் பேருந்துக்காக சாலையின் மறுபுரத்தில் உள்ள நிறுத்தத்தில் அவள் நின்றிருப்பதைக் கவனித்தேன். அப்போது தான் தெரியும் அவளும் பேருந்தில்தான் பள்ளிக்கு வந்துபோகிறாள் என்று. அன்றிலிருந்து நாங்கள் இருவரும் ஒன்றாகவே பஸ் நிறுத்தம் வரைச்செல்வது வாடிக்கை ஆகிப்போனது.


ஒரு நாள் நான் என் பேருந்துக்காகக் காத்திருந்த வேளையில் ஒருவன் என் அருகே வந்து அவனாகவே அவனை என்னிடம் அறிமுகப்படுத்திக் கொண்டான். நாங்கள் படிக்கும் பள்ளியிலேயே மேல் நிலை வகுப்பில் படிக்கும் பையன் அவன்.

Hazala-வுடன் அவனுக்கு நட்பு வேண்டுமாம். அவளுக்கு நான் நண்பன் என்பதால், நான் அவனுக்காக அவளிடம் சிபாரிசு செய்ய வேண்டுமாம். அவனுக்காக தூதும் போகவேண்டுமாம்.


அவனின் நடை, உடை பாவனை எதுவுமே எனக்குப் பிடிக்கவில்லை. அதோடு அவன் அவளோடு நட்பு வேண்டும் என்றும் கூறக்கேட்டது என்னை சினம் கொள்ளச்செய்தது. நான் ஒன்றும் பேசாது அவனை விட்டு விலகி நின்றும் என்னை விடாது தொந்தரவு செய்தான்.

"உஸ்க்கோ போல்னா, முஜ்சே தோஸ்த்தி கர்னே கேலியே!"
-- என்று அவன் நச்சரித்துக்கொண்டிருக்க,


"மே நஹி போல் சக்தா" என்று திட்டவட்டமான என் மறுப்பினைத் தெரிவித்தேன் கோவமாக!

அவன் முகம் சிவந்தான், ஸ்வரம் மாற்றினான், பிறகு,

"அபே கதே [கழுதை], சாலே [மச்சான்], மோட்டே [குண்டன்], மதறாஸி [தமிழன்டா]!"
-- என ஆரம்பித்து ஹிந்தியில் ஏதேதோ தூற்றினான். நல்லவேளையாக என் பேருந்து அந்நேரத்தில் வர நான் அவனை சட்டை செய்யாது பேருந்தில் ஏறி இடத்தைக் காலி செய்தேன்.


அதன் பிறகு, நானும், அவளும் பள்ளி விட்டு ஒன்றாக வரும்போதெல்லாம் அவன் எங்களைப் பின் தொடர்ந்து வந்து எங்களை நோட்டமிட்ட்டுக் கொண் டிருப்பான். அவன் Hazala விடம் ஏதும் கலாட்டா செய்யக்கூடாது என்பதற்காக, அதுமுதல், அவளை பஸ் ஏற்றி அனுப்பிய பிறகே நான் புறப்படுவதை வழக்கமாக் கிக் கொண்டேன். பஸ் நிறுத்தத்தில் என்னை எப்போது பார்த்தாலும் முறைத்துக் கொண்டே இருப்பதை அந்த மேல் வகுப்பு அண்ணனும் வழக்கமாக்கிக் கொண்டிருந்தான்.

வகுப்பில், நண்பர்களின் அரட்டையிலும் அடிக்கடி அவள் பெயர் அடிபடுவதை கவனித்தேன். என்னவென்றறிய காதைத் தீட்டினேன்! பலப்பொழுதும் அவளைப்பற்றி கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தார்கள். நாகரீகமில்லாத கமெண்ட்ஸ் அவை.

அந்த நண்பர்கள் மீது கோவம் வந்தது, அவர்களால் அவளுக்கு ஏதேனும் தொல்லை வருமோ என்று பயமும் இருந்தது. அவளை எப்படி எச்சரிப்பது? நேரடியாகச் சொல்லும் அளவு துணிச்சல் இல்லை. ஆதலால் ஒரு நாள் வகுப்பு முடிந்து எல்லோரும் வீட்டுக்குப் போன பிறகு அவள் டெஸ்க்குக்குச்சென்று சாக்பீஸால் "ஜாக்கிரதையாய் இரு" என்று எழுதி வைத்தேன்.


நான் அவள்க்கு காவலாக வேண்டும் என்று தோன்றியது. அதற்காகவேனும் அவளின் நெருங்கிய தோழனாய் ஆகவேண்டும்.

~~~ 0 ~~~

டைவேளையில் சமோஸாக்கள் மற்றும் பலகாரங்கள் வாங்க பெண்களூக்கு வகுப்பில் உடன் படிக்கும் பையன்கள் உதவி செய்வது வழக்கமாக இருந்தது. பையன்களிடம் காசு கொடுத்துவிட, பையன்கள் பெண்களுக்குப் பலகாரம் வாங்கித்தருவார்கள். அதும் எங்கள் வகுப்பு முதல் மாடியில் இருந்ததால் படியிறங்கச் சோம்பல்கொண்டு பெரும்பாலும் பெண்கள் பையன்களிடம் இந்த உதவியை பெற்றுவந்தார்கள்.

எங்கள் வகுப்பில் பெண்கள் பக்கம் உள்ள ஜன்னலில் திண்டு இருக்கும். இடைவேளைகளில் பெண்கள் இந்த திண்டில் ஏறி அமர்ந்துகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள். எங்கள் வகுப்பின் ஒரு பக்கம் வராந்தாவும், மறு பக்கம் கீழே செல்லும் படிக்கட்டும் இருக்கும். வராந்தா வழியாக வகுப்பினைச் சுற்றிச்சென்று படி வழியாக கீழே இறங்கிச் செல்லவேண்டும். பெண்கள் பக்கமுள்ள ஜன்னல் வழியே பார்த்தால் இந்த மாடிப்படி தெளிவாய்த் தெரியும்.

Hazala என்னிடம் பைசா தருவாள். நான் அவள்க்கு பலகாரம் வாங்கிக் கொடுப்பேன். இப்படி அவள் என்னோடு நெருங்கிப் பழகுவது என் ஹிந்தி நண்பர்களிடையே ஒரு எரிச்சல் அலையை கிளப்பியிருந்தது. போயிம் போயும் ஒரு மதறாஸியிடம் பள்ளியிலேயே அழகானப் பெண் நெருங்கிய நட்பு பாராட்டுவதா? என்று ஒரு கும்பல் என் மேல் கோபம் கொண்டு திரிந்தது. நான் இதை உணராதவனாய் இருந்திருந்தேன்.

ஒரு நாள் இடைவேளையின் போது வழக்கம் போல் அவள் காசு தர, நான் எனக்கும் அவளுக்கும் சேர்த்து பலகாரம் வாங்க வகுப்பிலிருந்து வெளியேறி, வராந்தா வழியாக, வகுப்பின் பின்புறம் வந்த போது என் வகுப்பு நண்பர்கள் சிலரும், மேல் வகுப்பு அண்ணாக்கள் சிலரும் என்னை சூழ்ந்துகொண்டார்கள். ஒருவன் என் சட்டையைப் பிடித்தான், நான் புரியாமல் விழித்தேன்.

"கையிலிருக்கும் காசை கொடுடா" -- என்றான் என் வகுப்பில் படிக்கும் என்னை விட குண்டான நண்பன்!

"எதுக்கு?" -- என கேட்டேன் அவனிடம். ஹிந்தியில் இதை கேட்பது சுலபம் "க்யூ?"!!

"அவளுக்கு நாங்கள் பலகாரம் வாங்கிக் கொடுத்துக்கொள்கிறோம். நீ போகவேண்டாம்" என்றவர்கள் என் கையிலிருந்த பணத்தையும் பிடுங்க முயன்றார்கள். நான் முறுக்கிப்பிடித்து முரண்டு பிடித்தேன்.

"மதறாஸியான உனக்கு இத்தனை திமிறா? மகனே மிதிபடுவாய்" என்றார்கள். மறத்தமிழனான எனக்கோ கட்டுக்கடங்காத கோவம் வந்தது. அனைவரையும் தூக்கிப்பந்தாடிட வேகம் வந்தது. ஆனாலும் விவேகம் [அல்லது இயலாமை] அதை தடுத்தது நிறுத்தியது.

"இனி அவளிடம் நீ பேசவோ பழகவோ அறவே கூடாது" என்றார்கள். அப்போது தான் மனோகரா போல் பொங்கி எழுந்தேன். "எனக்கும் அவளுக்கும் இடையில் நீங்கள் யாரடா" என்று அரைகுறை ஹிந்தியில் சீறி என் எதிரே நின்றிருந்தவனை எட்டி விட்டேன் ஒரு உதை.

"அபேஹ்.. தூனே முஜே மாரா?" என்று ஹிந்தி வில்லன் போல் சீறி எழுந்தவன் முஷ்டியை முறுக்கி என் முகத்தினை தாக்க ஓடி வந்தான். நான் கண்மூடி குத்து வாங்கத் தயாரானேன் ஆனால் குத்து விழவில்லை. கண் திறந்த போது என் அருகே Hazala நின்றிருந்தாள். அவள் முகம் கோவத்தில் சிவந்திருந்தது.

வழக்கமாய் அவள் தன் தோழிகளோடு ஜன்னல் திட்டில் தான் அமர்ந்திருப்பாள். அன்று பலகாரம் வாங்க புறப்பட்ட நான் வெகுநேரமாகியும் மாடிப்படி பக்கம் வராதிருந்ததால் என்ன ஆயிற்று என, என்னைத் தேடி வந்திருக்கிறாள்! அவளைக்கண்டதும் அண்ணன்கள் அடிதடியை நிறுத்திவிட்டார்கள்.

அவள் ஒன்றும் பேசவில்லை. என் கையை பிடித்து "ஆவோ மேரே சாத்" என்று கூறி சர சரவென இழுத்துக்கொண்டு படி இறங்கிச்சென்றாள். இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்தோம். கோவம் அடங்கவில்லை அவளுக்கு. "பொறுக்கிகள்!" என்று அவர்களை திட்டிக்கொண்டே இருந்தாள்.

"கொஞ்சம் நாளாகவே என்னை வம்பிழுத்துக்கொண்டிருக்கிறார்கள். நான் பொறுமையாய் இருந்தும் என்னை சீண்டுகிறார்கள். என்னைப்பற்றி தெரியாது அவர்களுக்கு...." -- அந்த அழகு முகம் சிவந்தது. கோவத்தில் கோவைப்பழ இதழ்கள் துடித்தது! இத்தனை கோவம் வருமா இவளுக்கு? ஆச்சரியமாகவும் இருந்தது.

"நீ கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும், அதுவும் அந்த மேல் வகுப்பு பையனிடம். உன் friendship வேணும் நு அலையாய் அலையறான். என்னை தூது வரச்சொன்னான். நான் மறுத்துவிட்டேன். அந்த கோவத்தை ஆள் வைத்து இன்று என்னிடம் இறக்கிவைக்கப் பார்த்தான்...."
-- என்று நான் கூறி முடிக்கும் முன் அவள் தொடர்ந்தாள்,


"எனக்கும் தெரியும். அவன் ஒரு நாள் என்னிடமே வந்து வம்பும் செய்தான்! எனக்கு விருப்பம் இல்லையென்று சொன்னபிறகும் தொந்தரவு செய்தான். உன்னையும் என்னையும் சேர்த்து ஏதேதோ உளறினான். இனியும் தொந்தரவு செய்தால் அவன் நல்ல பாடம் படிப்பான்!"
-- என்றாள். அவள் வார்த்தைகளில் அக்னி!


இருவரும் வகுப்புக்கு திரும்பினோம்.

"என்னால் தேவையில்லாமல் உனக்குப் பிரச்சினை வந்தது!"
-- என்றாள் கவலையோடு! [மேரே வஜே சே தேரே கோ பி பரிக்ஷான்!]


"உனக்கேதும் பிரச்சினை வரக்கூடாது அதுவே என் கவலை இப்போது!"
-- என்றேன் அக்கறையோடு! [துஜே குச் தக்லீப் நஹி ஹோனா வஹி மேரா பரிக்ஷான்!]


வராந்தாவில் என்னை தாக்கவந்த கும்பல் நின்றுகொண்டிருந்தது. அவர்களை சட்டை செய்யாது நடந்தோம். அவள் என் கைகளோடு அவளின் கை கோர்த்துக் கொண்டாள்! அன்றும் பள்ளி முடியும் வரை வகுப்பில் என் அருகில்தான் அமர்ந்திருந்தாள்!

~~~ 0 ~~~

வளையை மயங்க வைத்து அதன் கை காலில் பின் குத்தி "dissect" செய்வார்கள் உயிரியல் மாணவர்கள். திடீரென மயக்கம் தெளிந்து தவளை குதித்து ஓடும். அதை பார்க்கும் மாணவிகள் பயந்து அலறுவார்கள். இது ஒரு தமாஷ் என்று நான் அதைப் போய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன்.

அன்றும் நான் அதுபோல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது ஓர் அலறல் கேட்டது. தவளை ஏதும் தாண்டவில்லை பிறகேன் இந்த அலறல் என அலறல் வந்த திசை நோக்கியபோது மேல்வகுப்பு அண்ணனின் வகுப்பில் கைகலப்பு நடப்பது தெரிந்தது.

என்ன பிரச்சினை என ஓடிச்சென்று பார்க்கையில், மூன்று ஆஜானுபாகுவான நபர்கள் அண்ணனை பிடித்து இழுத்து வருகிறார்கள். அதில் ஒருவன் அண்ணனின் முடியினை பிடித்து இழுக்க கொத்தாக கொஞ்சம் முடி அவன் கையோடு வந்தது. Hazala-விடம் வம்பு செய்த மேல் வகுப்பு அண்ணன் தரையில் வீழ்த்தப்பட்டு மிதிக்கப்பட்டு நன்றாய் உதையும் வாங்கிக்கொண்டிருக்கிறான்.


அடித்தவர்கள் அவனிடம், "இனி எந்தப் பெண்ணிடமும் உன் வாலை ஆட்டாதே" என்று எச்சரித்து அவனை எறிந்துவிட்டுச் சென்றார்கள். அடிக்க வந்தவர்கள் இந்த பள்ளி மாணவர்கள் அல்ல வெளி ஆட்கள் என்று புரிந்தது. அடி வாங்கிய அண்ணன் ஏதுமே நடக்காதது போல எழுந்து சிரித்துக்கொண்டே வகுப்புக்குள் நுழைந்தான். அதைப்பார்த்ததும் எனக்கு அவன் மேல் வந்த கொஞ்சம் அனுதாபமும் இல்லாது போனது.

"இனியும் தொந்தரவு செய்தால் அவன் ஓர் பாடம் படிப்பான்!" என்று ஹஜாலா கூறியிருந்தது ஞாபகம் வர, இந்த சம்பவத்தில் அவளுக்குத் தொடர்பு இருக்குமோ என எனக்குச் சந்தேகம் வந்தது.

நான் வகுப்புக்கு ஓடினேன். அங்கே நடு நாயகமாய் ஹஜாலா அமர்ந்திருக்க அவளைச்சுற்றி தோழிகள் பட்டாளம். அவள் அருகே சென்றேன். என்னை பார்த்தாள்! அவளூக்குத் தொடர்பு உண்டு என்பதை உணர்த்தியது அவள் பார்வை.


"திரும்பவும் தொல்லை கொடுத்தான். நேற்று மிகவும் கொச்சையாகப் பேசி என்னை அவமானப் படுத்திவிட்டான். அதுதான் என் அண்ணன்களிடம் செல்லிவிட்டேன்" -- என்றாள்.

அந்த ஆஜானுபாகு நபர்கள் இவள் அண்ணன்களா? ஆடிப்போனேன்!


"என்னை மட்டுமல்ல, இவனையும் வம்பிழுத்திருக்கிறான் பத்மாஷ். என்னிடம் தூது செல்ல வற்புறுத்தி தொல்லை கொடுத்திருக்கிறான். அப்போதே இவன் என்னிடம் அதைக்கூறி என்னை ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னான்!" -- என்று மேல் வகுப்பு அண்ணன் சிபாரிசுக்கு வந்ததையும் நான் அவனிடம் கோவப்பட்டதையும் தோழிகளிடத்து கூற,

"யார்? இந்த மதறாஸியா? அவன் மிரட்ட இவன் மறுத்தானா?" -- என ஆச்சர்ய குரல்கள் எழுந்தன.

"அவுர் நஹி தோ க்யா? வைசே பி பெஹன் கோ குச் பரிக்ஷான் ஹை தோ கோன் தேக்கே ரஹ் சக்தா ஹை?" [என்ன இருந்தாலும் சகோதரிக்கு ஒரு தொல்லை என்றால் யாரால் தான் பார்த்துக்கொண்டிருக்க முடியும்?] --என்று அதற்கு Hazala பதிலும் கூறினாள்.

தொல்லை கொடுத்தவனை அடித்துவிட்டுச் சென்ற அண்ணன்களை குறிப்பிடு கிறாளா? இல்லை என்னைத்தான் குறிப்பிடுகிறாளா எனும் குழப்பத்தை "சகோதரி" எனும் சொல்பதம் உண்டாக்கியது. அந்த குழப்பம் இன்றும் எனக்குத் தீர்ந்தபாடில்லை.

~~~ 0 ~~~

து எவ்வாறாயினும் ஆடிய வால்கள் அடங்கின! எங்கள் நட்பு அதே போல் தொடர்ந்தது. கால ஓட்டத்தின் வேகத்தில் பள்ளிக்காலமும் முடிவுக்கு வந்தது.

Sendoff-ன் போது அம்மாவிடம் கூறி அனைவருக்கும் இட்லியும் சாம்பாரும் எடுத்துச் சென்றிருந்தேன். முன்பு பல முறை கூறியிருக்கிறாள் "சவுத் கா சாம்பார் ரொம்ப பிடிக்கும்" என்று. அவள் ரசித்து சாப்பிட்டாள். கிட்டத்தட்ட ஒவ்வொரு வாய்க்கும் என் அம்மாவுக்கு "சுக்ரியா" கூறச்சொன்னாள்.

"ஆண்ட்டி ஜி கோ போல்னா... சாம்பார் பஹுத் படியா தா!" -- என அவள் என் அன்னையை ஆண்ட்டி என்று நெருக்கம் காட்டியது எனக்குப் பிடித்திருந்தது.

எல்லோரும் விடைபெற்றுக் கொண்டோம். அவளும் நானும் வழக்கம் போல் for one last time ஒன்றாக பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் துவங்கினோம். மனதில் இனம் புரியாத பரவச வேதனை. அவளுக்கும் அப்படித்தானா என தெரியவில்லை. இருவரும் பேசவில்லை, மவுனமாய் நகர்கிறோம்.

"அடுத்த வருடம் மேல் வகுப்புக்கு இந்த பள்ளியில் தானே வருவாய்?" -- மவுனத்தை உடைத்தாள்!

"இல்லை. அப்பாவுக்கு தமிழ்நாட்டிற்கு மாற்றல் ஆகிற்று. அங்கே போய்விடுவேன்" -- என்று நானும் சேர்ந்து உடைத்தேன் மவுனத்தை.

"அப்படியா?" -- என்று ஆச்சர்யமாய் கேட்டுக்கொண்டாள் சாதாரணமாக. இதற்கும் மேல் ஏதும் ரியாக்ஷனை அவளிடமிருந்து எதிர் பார்த்திருந்தேனா என்பது பற்றி தெளிவான சேதிகள் மனதில் பதிந்திருக்கவில்லை.

"யஹ் தேரேலியே! மேரி தரப் சே!" -- அப்பாவுக்கு யாரோ பரிசளித்திருந்த அழகான டைரி ஒன்றை அம்மாவிடம் சண்டை போட்டு எனக்கு வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கி வைத்திருந் தேன். அதை "என் ஞாபகமாய் வைத்துக்கொள்!" என்று கூறி அவளிடம் நீட்டினேன்.

"அச்சா ஹை!" -- என்று அதை ஆர்வமாய் வாங்கிக்கொண்டாள். அவள்க்கு அது உண்மையிலேயே பிடித்திருந்ததாக அவளின் முகபாவம் பறைசாற்றியது.

"இதைப் பார்க்கும் போதெல்லாம் உன் ஞாபகம் வரும்!" -- என்றாள். அதற்காகத்தான் கொடுத்தேனோ?


மீண்டும் மவுனம். அவள் அந்த டைரியை புரட்டிக்கொண்டே வருகிறாள். ஏதும் தேடுகிறாளோ? அவள் விலாசம் வாங்கி அவளோடு எக்காலத்தும் ஓர் கடிதத் தொடர்பு வைத்திருக்கவேண்டும் என்று மனம் ஓர் தீர்மானத்தை முன்மொழிந்தது. அதற்காக விலாசம் கேட்க வேண்டும்.

தற்போது ஏனோ ஏதும் பேச முடிய வில்லை. தொண்டையை ஏதோ அடைத்தது. சரி, பேருந்து நிறுத்தத்தில் பஸ்ஸுக்குக் காத்திருக்கும் வேளையில் அவள் விலாசத்தைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் என தீர்மானத்தை ஒத்தி வைத்தேன்.


நிறுத்தம் வந்தது. நின்றோம். என் பேருந்து எப்போது என கேட்டாள். அது பற்றி கவலையில்லை உன் பேருந்து வந்து உன்னை ஏற்றி விட்டுப் பிறகு செல்கிறேன் என்றேன். "சரி" என்று சம்மதித்தாள்! இன்னும் ஓரிரு நிமிடங்களில் அவள் பேருந்தும் வந்துவிடும். அதற்குள் அவளிடம் நிறைய விஷயங்கள் எனக்குச் சொல்ல வேண்டியிருந்தது.

அவள் தோழமைதான் நான் இந்த வருடம் முழுதும் இங்கேயே படிக்க காரணம் என்பதையும், இவள் மாத்திரம் தான் எனக்கு அமைந்த ஒரே தோழி என்பதையும், இவள் தோழமை எனக்கு என்றும் வேண்டும் என்பதையும், கடிதத் தொடர்பு வைத்திருக்க விரும்புகிறேன் என்பதையும், இப்படிச் சொல்ல வேண்டிய விஷயங்கள் யாவும் ஒரே நேரத்தில் கிடைத்த பல ரேடியோ ஸ்டேஷன் போல கூச்சல் போட்டுக்கொண்டிருக்க,

அவள் பேருந்து வந்தது!

"அச்சா!" -- என்று சிரித்து கை கொடுத்தாள். கைபற்றி நானும் விடை கொடுத்தேன். அவள் பேருந்தில் ஏறி டாடா காட்டி சிரித்த முகத்தோடு விடை பெற்றுச் சென்றாள். அந்த பேருந்து மறையும் வரை நானும் இமைக்காமல் வழி மேல் விழி வைத்து விடை கொடுத்தேன்!

இல்லை இல்லை, நீங்கள் புரிந்துகொண்டிருப்பது தவறு...
அது காதல் அறியா வயது என்பதால் காதல் வயப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் மனது வலித்திருந்தது!

[இன்னும் நுகர்வேன்!]

Friday, September 4, 2009

வானவில் பூக்கள் [ மொட்டுமலர்கள்! ]!

வானவில் பூக்களை அறிமுகப்படுத்துகிறேன்!

என் வாழ்க்கை பயணத்தில் ஆங்காங்கே பூத்து மணம் பரப்பிய இப்பூக்களை, மீண்டும் கொஞ்சம் முகர்ந்து பார்க்க, என் நந்தவனத்துக்குள் மீண்டும் ஒரு உலா போகப்போகிறேன். பலமுறை நான் தனிமை உலா நடத்தியிருந்தாலும் இம்முறை உங்களையும் என்னோடு அழைத்துச்செல்வதில் ஆனந்தம் கொள்கிறேன்.

வாழ்க்கைப் பாதையில் இதுவரை உள்ள பயணத்தில் ஆங்காங்கே சில பூக்கள் என் வாழ்வை வசந்தமாக்கியிருந்தன. வலி உண்டாக்காத பூக்கள் இவை, காயம் தந்ததில்லை, வேதனை தரவில்லை, இதயத்தினை சற்றே தீண்டிச்சென்ற தென்றல் பூக்கள் இவை!

வானவில் போல் திடீரெனத் தோன்றி, அழகினை இரசிக்கவைத்து, இரசித்து முடிக்கும் முன்னமே மறைந்து போனதாலும், சில பூக்களை நானும் பின்னர் மறந்து போனதாலும் தான் இப்பூக்கள் வானவில் பூக்கள்!

வண்டின் தோள் ஏறி வாருங்கள். அங்கே என் வானவில் பூக்கள் உங்களை வரவேற்றிட காத்திருக்கின்றது.

~~~ 0 ~~~

னக்கிடங்கை திறந்து, நினைவுக் கடலில் குதித்து மூச்சடக்கி முடிந்த வரையில் அடி ஆழம் வரை செய்திட்ட பயணத்தில் கிடைத்த முதல் முத்துப்பூ, ரோஜா நிற சட்டையும், பச்சை நிற பாவாடையும் அணிந்த என் முதல் வகுப்பு தோழிப்பூ!

அவள் முகம் எனக்கு நினைவில்லை ஆனால் அவள் மணம் இன்னும் என் நினைவில் நீங்காது அப்படியே இருக்கிறது. அவள் நிஜப்பெயர் தெரியாது. "கெஜா" என்று செல்லமாய் அழைப்பது போல் லேசாய் ஓரு ஞாபகம்.

கட்டிப்புரண்டு சண்டையிட்டதும் [விரசம் சேர்க்காதீர்கள்! நாங்கள் இருவரும் அப்போது ஒன்றாம் வகுப்பில் தான் படித்துக்கொண்டிருக்கிறோம்!], பிறகு அவள் அழுதபோது கண்ணீரை துடைத்துவிட்டதும் என் நினைவுப் படத்தில் அவள் அணிந்திருக்கும் பாவடையின் நிறம் போல பசுமையாய் நினைவிருக்கிறது.

கீறல் விழுந்த காட்சியாய் தெளிவில்லாது நிகழ்வுகள் நிழலாடினும் இது ஒரு காவியம். என் முதல் தோழியே, உனக்கு என்னை நினைவிருக்கிறதா? உன் முதல் வகுப்பு தோழனான இந்த குண்டு பையனை நீயும் நினைவில் கொண்டுள்ளாயா? நீ இப்போது எங்கிருக்கிறாய்? எப்படி இருக்கிறாய்? என்றேனும் சந்திக்க வழி உண்டா? சந்தித்தாலும் நமக்கு நம்மை அடையாளம் தெரியுமா? அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையக் கிட்டுமா?

என் தோட்டத்து முதல் பூவே! உனக்கு இக்கட்டுரையை சமர்பிக்கிறேன்!

~~~ 0 ~~~

ப்பாவுக்கு வடநாட்டிற்கு இடமாற்றம். என்னை கேரளாவில் பாட்டியிடம் விட்டு விட்டு அப்பாவும், அம்மாவும் தங்கையும் மத்தியபிரதேசத்துக்கு சென்றனர். நான் கேரளாவில் ஒரு பள்ளியில் சேர்க்கப்பட்டேன். எட்டாம் வகுப்பு!

அசோக் குமார், புருஷோத்தமன், இராமநாதபிள்ளை, இசைக்கிராஜா இவர்களோடு நானும் சேர பஞ்ச பாண்டவர்களாய் வகுப்பில் உலா வந்த அற்புத நாட்கள் அது. கிட்டதட்ட பத்து பெண்கள் எங்கள் வகுப்பில். அதில், எப்போதும் வகுப்புக்கு லேட்டாக வந்து திட்டு வாங்கி கட்டிக்கொண்டு அழுதுவிட்டு, அதை தொடர்ந்து இரண்டு நாள் பள்ளிக்கு வராதிருக்கும் ஒரு முஸ்லிம் பெண்ணை ஞாபகம் இருக்கிறது.

அது தவிர முக்கியமாக "ராஜ ராஜேஸ்வரி" எனும் என் வகுப்பு தோழியை நன்கு ஞாபகம் இருக்கிறது. தோழி என்று அவளை இங்கே நான் கூறினாலும் எங்களுக்குள் தோழமை இருந்திருக்கவில்லை. அவளிடம் ஒரு முறையேனும் பேசியது கூட இல்லை. அசோக்கும், புருஷோவும் பேசுவார்கள். அவள் நல்ல படிப்பாள், பயங்கர வாயாடி! அவளிடம் எனக்கு பேச சந்தர்பம் கிடைக்கவும் இல்லை, நானாக பேச முயலவும் இல்லை. பெண்களோடு பேசுவதற்கு வெட்கம் கொண்டிருந்த காலம் அது.

ஆனாலும், அவளின் அதட்டலான குரலும், கலகலப்பான பேச்சும் எனக்கு பிடித்திருந்ததால் அவள் என் தோழி!

~~~ 0 ~~~

"ரீஸஸ் இண்டர்வல்" -- விடுகையில், வகுப்புக்கு வெளியே வந்து நின்றிருப்போம். பக்கத்து வகுப்பு பெண்களை பற்றி புருஷோவும், இராமநாதபிள்ளையும் எப்போதும் கமெண்ட் அடித்துக் கொண்டிருப்பார்கள். நானும் அசோக்கும் அதை இரசித்துக் கொண்டிருப்போம். எங்களுக்கு கமெண்ட் அடிக்கும் அளவுக்கெல்லாம் தைரியம் கிடையாது.

ஒருநாள் இண்டர்வல் சமயம். வழக்கம் போல நாங்கள் வகுப்புக்கு வெளியே நின்றிருக்க இராமநாதபிள்ளை என்னை ஆழமாய் நோண்டினான்.

"என்னடா?" என்றேன் அவன் கையை தட்டி விட்டவாறு.

"அந்த பொண்ண பாரு அவ உன்னத்தான் பாக்கா!" -- என்றான் நாகர்கோவில் பாஷையில்!

"யாரு?" -- நம்பிக்கையில்லாமல் கேட்டேன்!

"தோ! அவ தாம்லே!" -- இரகசியமாய் கூறி அவள் வரும் திசையில் கண்ணால் காட்டி சைகை செய்தான். அவன் காட்டிய திசையில் பல பெண்கள் வந்துகொண்டிருந்ததால் அவன் சுட்டிக்காட்டிய பெண் எது என்று தெரியவில்லை.

"அன்னா வருதா பாரு, தலைய துணி போட்டிட்டு, அவதாம்லே! உன்னத்தான் பாக்கா" -- என்று புருஷோத்தமன் அவளை கண்டுபிடித்து அவளை எனக்கு காட்டித்தந்தான்.

நானும் கவனித்தேன். ஒரு நாணப் புன்னகையை உதட்டில் ஒட்டி அவள் ஓரக்கண்ணால் என்னை பார்க்கத்தான் செய்கிறாள். எனக்கு உள்ளம் பதறியது! பயம் வந்தது!

அவள் என்னை பார்த்தது தற்செயலா இல்லை வேண்டுமென்றே பார்க்கிறாளா என கவனிக்கத் துவங்கினோம். அவள் உண்மையில் என்னைத்தான் பார்க்கிறாள் என்று உறுதியானது! இது உறுதியானதும், இண்டர்வலில் ஒரு முறை பார்ப்பது என்பது மாறி மதியநேர சாப்பாட்டு இடைவெளியில், காலையில் வகுப்பு துவங்கும் முன் என அவள் எப்போதெல்லாம் வகுப்பை விட்டு வெளியே வந்தாலும் இந்த பயல்கள் என்னையும் அழைத்துக்கொண்டு அவள் முன்னே அவளை தாண்டி செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார்கள்.

அப்படி ஒருமுறை அவளை அருகிலே பார்த்தபோதுதான் அவள் காதணியை கவனித்தேன். காதில் அவள் அணிந்திருந்த கம்மல் என் அம்மா அணிந்திருக்கும் கம்மல் போன்று இருந்தது. ஒரு வளையத்தில் முத்துக்கள் தொங்கும் அழகிய கம்மல் அது.

அன்றெல்லாம் இன்று போல செல் போனும் இல்லை ஈமெயிலும் இல்லை, ஏன் ·போன் கூட இல்லை. கடிதம் மட்டுமே ஒரே தொடர்பு சாதனம். அம்மா ஞாபகம் வரும் நாட்களில், அம்மாவை பார்க்கவேண்டும் எனும் ஏக்கம் வருகையில் அந்த பெண்ணின் கம்மல் மட்டுமே எனக்கு ஆறுதல். அம்மாவின் கம்மல் போன்ற கம்மல் அணிந்திருந்ததால் அவளை எனக்கு பிடித்திருந்தது!

ஒரு Sports day! ஓட்டப்பந்தையம் நடக்கிறது. Track ன் ஒரு பக்கம் என் தோழர்களோடு நான், மறு பக்கம் வராந்தாவில் தோழிகளோடு அவள். எல்லோரும் விளையாட்டை கவனித்துக் கொண்டிருக்க, அவள் தைரியமாய் வைத்த கண் வாங்காமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். நானோ, அவள் கண்ணோடு கண் சேர்க்க முடியாமல் விலகிக்கொள்கிறேன். அவள் அதை இரசிப்பது போல் சிரிந்துக்கொண்டே வம்படிக்கும் மீண்டும் மீண்டும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். ஓட்டப்பந்தையத்தில் ஓடியவர்கள் சும்மா இருக்க எனக்குத்தான் மூச்சு வாங்கி வியர்த்து வழிந்தது.

அன்று தான் அவளை கடைசியாய் பார்த்தேன். என்னை பார்த்து சிரித்து வம்பு செய்துகொண்டிருந்தவள் திடீரென கூட்டத்தில் மறைந்து போனாள். அதன் பிறகு அவளை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பரீட்சை வந்தது, விடுமுறை வந்தது, அடுத்த வருடம் அதே பள்ளியில் படிக்கவில்லை. நானும் அப்பா அம்மாவுடன் மத்தியபிரதேசத்துக்கே சென்றுவிட்டேன்.

அம்மாவை பிரிந்திருக்கும் ஏக்கம் குறைக்க இறைவன் அனுப்பிய தேவதையோ அவள் என்று பல முறை நான் நினைத்ததுண்டு!

~~~ 0 ~~~

பின்னொரு நாளில்,

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம். ஒரு முறை ஊருக்கு போயிருந்த சமயத்தில் பஸ்நிறுத்தத்தில் இறங்கி பாட்டி வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருக்க எதிரே ஒரு பெண் வந்துகொண்டிருந்தாள். அருகில் வந்தவள் என்னை பார்த்து சிரிக்கிறாள். நானும் என் மாமாவின் மில்லில் வேலை பார்க்கும் பெண்ணாய் இருக்கக்கூடும் என்று நினைத்து பதிலுக்கு சிரித்துவிட்டு அவளை கடந்துசெல்கையில்,

"நல்லாயிருக்கியா?"
-- என்று கேட்டாள் அவள். நான் நின்றேன். புரியாத குழப்பத்தோடு,

"நல்லாயிருக்கேன்" -- என்றேன்.

"காலேஜ் ல எல்லாம் சேந்துட்டியா?"

"ஆமா.."
-- என்றேன். குழப்பம் இன்னும் தீரவில்லை. மாமாவின் மில்லில் வேலை பார்க்கும் ஒருத்தி இத்தனை விவரங்களை கேட்பதாவது?

"அடையாளமே தெரியலயே.. ரொம்ம மாறி இருக்கே!"

"......" -- யாரிவள்?

"என்னை அடையாளம் தெரியல இல்ல?" -- கேட்டாள்

"ஆமா.. தெரியல... நீங்க.."

"எனக்கு புரிஞ்சது... உனக்கு என்னை அடையாளம் தெரியலன்னு. நான் ராஜேஸ்வரி உன் கூட எட்டாம் கிளாஸ் ஒன்னா படிச்சவ." -- அவள் கூறிக்கேட்ட நான் ஆச்சர்யத்தில் உறைந்து போனேன்.

அந்த வாயாடி ராஜேஸ்வரியா? வகுப்பிலேயே நல்லா படிக்கும் அந்த ராஜேஸ்வரியா? அவளா இவள்? அவள் தான் இவள் என்றால் ஏன் இப்படி வாடிய கோலம்? என் தோழியையா மில்லில் வேலை செய்யும் வேலைக்காரி என்று நினைத்தேன்?

"நீங்க என்ன பண்றீங்க? எங்கே படிக்கறீங்க?" --என கேட்டேன்.

அவள் பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லையாம், என் மாமாவின் மில்லில் இல்லை ஆனால் மற்றொரு ரைஸ் மில்லில் தான் வேலை பார்க்கிறாளாம். அடிக்கடி என் பாட்டி வீடு தாண்டி போகையில் நான் அங்கே நிற்பதை பார்ப்பாளாம், பேச வேண்டும் என்று தோணுமாம் ஆனால் எனக்கு ஞாபகம் இருக்காது என்று விட்டிடுவாளாம். இன்று ரோட்டில் எதிரே வந்ததால் பேசினாளாம்.

என்னால் ஏதும் பேச முடியவில்லை. சரி பார்க்கலாம் என்று கூறி அவளை விலகி நடக்கத் துவங்கினேன். மனம் முழுதும் கனத்திருந்தது. ஏதோ ஒரு கோவமும் தலைக்கேறியது. அவள் என்னை விட படிப்பில் பல மடங்கு கெட்டிக்காரி. இருந்தும் ஏன் அவள்க்கு இப்படி ஓர் நிலை? படிக்கும் காலத்தில் சரிக்கு சமமாய் இருந்து இன்று ஓர் ஏற்றத்தாழ்வு ஏன்? என்று பல கேள்விகள் ஏன்? ஏன்? ஏன்? என்று என்னை குதறி எடுத்தது. எதற்கும் பதில் தான் கிட்டவில்லை.

வாழ்க்கை, சமூகம், மனிதர், மனிதம், ஏற்றம், தாழ்வு, ஏழ்மை, விதி என்று பல விஷயங்கள் என் மண்டையை குடைந்தன. எல்லாம் விட்டெறிந்து ஓடிய சித்தார்தன் போல் எங்கேனும் ஓடிவிடத் தோன்றியது. ஏனோ என்னால் அவளை அந்த கோலத்தில் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆனால் அதுதான் வாழ்வின் எதார்த்தம் இல்லையா? அதை எனக்கு புரிய வைத்துச் சென்றாள் என் பள்ளித்தோழி ராஜேஸ்வரி.

மீண்டும் ஒருமுறை அவளை சந்திக்கவேண்டும். அன்று அவள் தான் என் வகுப்பு தோழி என்று அறிந்து அதிர்ந்து நின்றதில் சரியாக பேச முடியாது விக்கித்து நின்றிருந்தேன், அதை அவள் நான் அவளிடம் பேச விரும்பவில்லை என்று எடுத்திருக்கக் கூடும். அதற்காக அவளை இன்னும் ஒரு முறை சந்திக்க வேண்டும், பழைய வகுப்புத் தோழனாய் சரளமாய் அவளிடம் பேசிடவேண்டும்.

இப்போதும் பாட்டி வீட்டுக்கு போகும் போதெல்லாம் வழி நீள என் விழிகள் தேடிக்கொண்டு தான் இருக்கின்றன அவளை, என் தோழியை, ராஜ ராஜேஸ்வரியை.

[இன்னும் நுகர்வேன்]
sillvandu@gmail.com

Monday, February 23, 2009

ஆஸ்கர் வாங்கினேன்!

" I come from a country and a civilization that given the universal word. That word is preceded by silence, followed by more silence. That word is 'Ohm.' So I dedicate this award to my country."

- Sound Mixing காக ஆஸ்கர் வாங்கிய ரெசூல் பூக்குட்டி யின் ஏற்புரை இது. ஒலி தொடர்பான தொழிலில் ஒலியின் ஆதாரமான "ஓம்" எனும் ஓங்காரத்தை இவர் குறிப்பிட்டு பேசியது மிகப்பொருத்தம்.

"ஓம்" என்பது ஒரு எழுத்து, இது அ, உ, ம எனும் ஒலிகளை உள்ளடக்கியது. சூரியன், சந்திரன், அக்னி எனும் ஒளி வடிவங்களும் இதனுள் அடங்கும். ஓம் எனும் பிரணவத்திலிருந்தே எல்லா ஒலி, ஒளி வடிவங்களும் உண்டாயின.

ஓங்காரம் எனும் பிரணவத்தினை, உலகினை தன்னுள் அடக்கிய, அமைதியாலும் பேரமைதியாலும் சூழப்பட்ட ஒலியினை, உலகுக்கு வழங்கிய நாட்டிலிருந்து, நாகரீகத்திலிருந்து வந்திருப்பவன் என்று தன்னை அறிமுகப்படுத்திய விதம் கண்டு ஓர் இந்தியனாய் பெருமிதம் கொள்கிறேன்.

"ஓம்" - என்பது ஒலியின் ஆதாரம் என்பதனையும் தாண்டி அது இந்து சமயத்தின் புனித குறியீடு. உலக அரங்கில் அப்புனித ஒலியை உலகுக்கு அளித்த சமுதாயத்திலிருந்து, நாகரீகத்திலிருந்து வந்திருப்பதாக பெருமைபட கூறிய இவர் இஸ்லாம் மதத்தை சார்ந்தவர். இதுவல்லவோ பாரதத்தின் சிறப்பு?

இச்சிறப்பின் இறப்புக்கு கங்கணம் கட்டும் சில தீயோரின் தீய சக்திக்கு எதிராக நல்ல உணர்வினை, நாட்டு பற்றினை, நல்லோர் மனதில் உண்டாக்கும் விதமான இந்த பேச்சுக்கு தலை வணங்குகிறேன்.

பூக்குட்டி உங்களுக்கு என் இதயப் பூக்களால் கோர்க்கப்பட்ட பூங்கொத்தினை பரிசாக்குகிறேன். எனக்கு முதல் ஆஸ்கார் வாங்கித்தந்ததற்காக!

பொதுவாக எனக்கு ஆங்கில பாடல்கள் பிடிப்பதில்லை. ஏனென்றால் என்ன பாடுகிறார்கள் என்று புரிவதில்லை. புரியாத விஷயமாக இருந்ததால் அதன் மீது ஓர் வெறுப்பினை வளர்த்திருந்தேன். இசை என்பதன் இலக்கணம் இந்தியருக்கே தெரியும் என்றொரு தலைக்கணம் கொண்டிருந்தேன். ஆங்கில இசை இலக்கணப் பிழை என்று எனக்கோர் எண்ணம்.

இப்படியெல்லாம் பிழையாய் எண்ணங்கள் கொண்டிருந்த நான் அன்றெல்லாம் ஓர் பக்குவப்பட்ட இசை இரசிகனாய் இருந்திருக்கவில்லை. இசையை விடவும் அதிகமாய் இளையராஜாவை இரசித்துக்கொண்டிருந்த காலம். இளையராஜாவை இரசிப்பது என்றால் மற்ற இசையமைப்பாளர்களை மட்டம் தட்டுவதே என்று தானாக ஓர் சட்டம் இயற்றி அதை செயல்படுத்திக் கொண்டிருந்த ஓர் செவிட்டு இரசிகனாய்தான் நான் இருந்தேன்.

திரைப்படங்களில் நல்ல பாடல்களுக்கு பஞ்சம் வர, திடீரென டி.வி விளம்பர பாடல்கள் சில அனைவரின் கவனத்தையும் ஈர்க்கத் துவங்கியது. அப்படி சில பாடல்கள் நாம் அறியாமலேயே நம்மை முணுமுணுக்கவும் வைத்தது.

அப்படியிருந்த காலத்தில் ஓர் நாள், 1992ம் வருடம் என்று நினைக்கிறேன். கோயம்பத்தூர் ஸ்ரீ லட்சுமி காம்ப்ளெக்ஸ் உள்ளே வேடிக்கை பார்த்து நடந்துகொண்டிருந்த போது, ஒரு கேசட் கடையிலிருந்து வந்த இசை என்னை ஈர்த்தது. மேற்கத்திய இசைபோல் இருந்தாலும்.. அற்புதமாக இருந்த அந்த இசை என்னை சுண்டி இழுக்க எங்கும் நகராது அங்கேயே நங்கூரம் பாய்ச்சி நின்றிருந்தேன், ஆங்கில வார்த்தைகளில் பாடல் ஆரம்பிக்கும் என்று எதிர்நோக்க என்னை ஆச்சர்யத்தில் தள்ளிவிட்டு தமிழில் பாடல் வரி துவங்கியது...

"புது வெள்ளை மழை இங்கே பொழிகின்றது" - என்று துவங்கிய அந்த பாடலிலிருந்து பொழிந்த அந்த தேனிசை மழையில் நனைந்துருகிய நான் அப்படியே அந்த கேசட் கடைக்குள் நுழைந்து "இது எந்த படத்து பாடல்? யார் இசை?" - என்று வினவினேன்.

"மணிரத்தினத்தின் அடுத்த படம் ரோஜா! யாரோ ஒரு புது பையன் போட்டிருக்கான் பாட்டெல்லாம் வித்தியாசமா இருக்கு... அருமையா இருக்கு" -- என்று கடைக்காரர் கூற, அப்போதே ஒரு கேசட் குடுங்க என்று கேட்டு வாங்கி நேராக வீட்டிற்கு வந்தேன்.

"சின்ன சின்ன ஆசை", "புது வெள்ளை மழை", "ருக்குமணி.. ருக்குமணி", "காதல் ரோஜாவே", "தமிழா தமிழா" - என ஒவ்வோர் பாடலும் அற்புதம், அத்தனை ஆனந்தம். "சுண்டி இழுக்கும் இசை" - என்பார்கள், உண்மையில் என்னை சுண்டி இழுத்தது ரஹ்மானின் இசை.

இப்படி அறிமுகமான இந்த ரஹ்மான் தான், எனக்கு இரண்டு ஆஸ்கார் விருது வாங்கித்தருவார் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. இன்று இந்தியாவில் ஒவ்வொரு இசை இரசிகரும் ஆஸ்கர் வாங்கி இருக்கிறோம். அந்த கலைஞன் வாங்கிய விருது அவனுக்கு மட்டும் சொந்தம் அல்லவே, அவன் இரசிகர்களுக்கும் தானே... ஆகவே ஒவ்வோர் இசை இரசிகனும் இன்று ஆஸ்கர் வாங்கியவனே! ஆகவே உங்களுக்கும் எனக்கும் சேர்த்து என் வாழ்த்துக்கள்!

திரைபடத்தினை பொருத்தவரை ஆஸ்கர் பெரிய விஷயம் இல்லை, பெரிய விருதும் இல்லை என்பது விவரம் அறிய வந்த போது நான் அறிந்துகொண்டது. அனைத்து அமெரிக்க படங்களுக்கு நடுவில் ஒரே ஒரு "சிறந்த வெளி நாட்டு படம்" -- எனும் ஒரு விருது, அது மட்டுமே உலக சினிமாவுக்கு, மற்றவை அனைத்தும் அமெரிக்க படங்களுக்கு எனும் போது இது எப்படி உலகிலே உயர்ந்த விருதாகும்? ஆஸ்கர் ஹாலிவுட்டுக்குத்தான் தேவதை, நம் படங்களுக்கு அது தேவையில்லை!

ஆயினும், இப்போது நமக்கு கிடைத்திருக்கும் இந்த விருது சிறப்பானதும் பெருமைக்குரியதும் ஆகும் காரணம், ரஹ்மானும், பூக்குட்டியும் ஓர் அமெரிக்க படத்தில் வேலை செய்து அதில் சிறந்தவர்களாய் அமெரிக்கர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டிருப்பதால், இவ்விருது சிறப்பு வாய்ந்தது மட்டுமல்ல நமக்கு பெருமையும் தேடித்தருவதும் ஆகும்.

அமெரிக்கப் படங்களின் இசை வரிசையில் சிறந்த இசையாக, ஓர் இந்தியனால், இந்திய தனித்தன்மையோடு அமைக்கப்பட்ட இசை, சிறந்த இசை என்று அமெரிக்கர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் விஷயமே இங்கே சாதனை ஆகும்.

மற்றபடி, உலக அங்கீகாரம் கிடைக்காது போனாலும், பல சாதனைகளை ரஹ்மானும், இளையராஜாவும், இரவீந்திரனும், பர்மனும், நெளஷாதும், எம்.எஸ்.விஸ்வநாதனும், மஹாதேவனும், குமாரும், பாபுராஜும் இன்னும் எண்ணற்ற கலைஞர்களும் செய்து கொண்டேதான் இருந்திருக்கிறார்கள்....இருக்கிறார்கள்.

"ஜெய் ஹோ" - பாடல் சிறந்த பாடல், ஆனால் அது தலை சிறந்த பாடலன்று. இது எல்லா பக்குவமான இரசிகர்களும் ஒத்துக்கொள்ளும் விஷயம். பம்பாய் - படத்தின் தீம் மியூசிக், கருத்தம்மாவில், "சின்ன உசிரை முடிச்சிடு" - என அந்த பச்சிளங் குழந்தையின் தந்தை கூற, கள்ளி வெடித்து பால் வர, பிண்ணனியில் மனதை உருக்கும் குரலில் "காக்கா எளப்பார" -- என துவங்கும் பாடல்களை விட சிறந்ததில்லை "ஜெய ஹோ!" ஆயினும், அமெரிக்கரை திரும்பி பார்க்க வைத்த விதத்தில் அது சிறந்தது.

"சிறப்பு" என்பதற்கு நமதான வரையரை இதற்கும் பன்மடங்கு மேல் எங்கோ நம்மால் வரையறுக்கப் பட்டுள்ளது. ஆகவே, இது சாதனையின் உச்சமல்ல. ரஹ்மானும், பூக்குட்டியும், இன்னும் திறமை வாய்ந்த நம் கலைஞர்கள் அனைவரும் அடையவேண்டிய உச்சம் இன்னும் இருக்கிறது.

கொடைகானல் அற்புத அழகு நிறைந்த இடம், கொடைக்கானல் போகும் வழியில் ஏதேனும் ஒரு கொண்டை ஊசி வளைவில் ஒரு அருமையான இயற்கை காட்சி தென்படும், வண்டி நிறுத்தி நாமும் பத்து நிமிடம் அதை இரசித்து போகலாம். அப்படி ஒரு கொண்டை ஊசி வளைவு இன்பமே இந்த ஆஸ்கர். கொடை யின் அழகு எனும் ஆனந்தம் இன்னும் மேலே இருக்கிறது, இந்த கொண்டை ஊசி அற்புதத்தில் திருப்தியடைந்து வண்டியை வீட்டுக்குத் திருப்பிடக் கூடாது.

அத்தனை பிரபலங்கள் கூடியிருந்து உலகமே பார்த்துக்கொண்டிருக்கும் ஓர் நிகழ்ச்சியின் மேடையில் நம் தாய் மொழி தமிழும், தேச மொழி ஹிந்தியும் ஒலித்தது கூடுதல் சிலிர்க்க வைத்த சிறப்பு.

பூக்குட்டியையும், ரஹ்மானையும் மனதார வாழ்த்தி பாராட்டுவோம். ஒவ்வோர் இந்தியனுக்கும் பெருமை இன்று. பெருமை கொண்ட ஒவ்வோர் இந்தியனும் மகிழ்ந்திருப்பான், ஒவ்வோர் இந்தியனும் மகிழ்வதால் நாடே மகிழ்ச்சியில் திகழ்கிறது, மகிழ்வான நாடு சுபிக்ஷமாய் இருக்கும். நாட்டை சுபிக்ஷமாக்கிய இவ்விருவருக்கும் மீண்டும் நன்றியும் பாராட்டுகளும்.

இந்த அற்புத தருணத்தில் இரசிகர்களாகிய நாம் ஒரு படியேனும் மேலே உயர்வோம். ஒருவரை தாழ்த்துவதன் மூலம் மற்றவரை உயர்த்தும் ரசனையை கை விடுவோம். ஒரு கலைஞனின் இரசிகன் எனும் பெயரில் மற்றோர் கலைஞன் தரும் அற்புத படைப்பினை உதாசீனப்படுத்தும் இயல்பினை களைவோம். கலைஞன் மேல் மரியாதை மாத்திரம் வைத்து கலைக்கு மாத்திரம் தீவிர ரசிகர் ஆகுவோம்.

இசையை பொருத்தவரை, நம்மை இசையச்செய்யும் எந்த ஓசையும் அற்புத இசையே! அப்படி ஓர் இசைக்கு ரசிகராய் இருப்போம்.

ரெசூல் பூக்குட்டிக்கும், ரெஹ்மானுக்கும், அனைத்து இந்தியருக்கும் இரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள்.

வாழ்க பாரதம்... வளர்கிறது பாரதம்!

Friday, January 2, 2009

புத்தாண்டு வாழ்த்து!


பழைய வருடங்கள் போதித்த பாடங்கள்
புதிய வருடத்தில் பண்பெற வழிகாட்டி!

பழைய வருடத்தில் ஏமாற்றம் வலித்திருக்கும்
புதிய வருடத்தில் [வலியுறா] பக்குவம் வளர்!

பழைய வருடத்தின் மகிழ்ச்சியின் தருணத்தை
புதிய வருடத்தின் துயர் நேர மருந்தாக்கு!

பழைய வருடத்தில் நண்மைகள் புரிந்தாய்
புதிய வருடத்தில் பழக்க மென்றாக்கு!

பழைய வருடத்தில் தீதும் செய்தாய்
புதிய வருடத்தில் தொடராது தவிர்!

பழைய வருடத்தில் தவறுகள் நேர்ந்தது
புதிய வருடத்தில் எண்ணிக்கை குறை!

பழைய வருடத்தின் வேண்டாத கசப்புகள்
புதிய வருடத்தில் காணாமல் செய்!

பழைய வருடத்தில் தோல்விகள் கண்டாய்
புதிய வருடத்தில் பயில் முயல்!

பழைய வருடத்தின் வெற்றிகள் பற்றி
பஞ்சாங்கம் பாடாது எண்ணிக்கை கூட்டு!

பழைய வருடத்தின் நிறைவேறா கனவு
புதுவர்ணம் பூசி புதிதாக காண்!

பழைய வருடத்தின் தன்னம்பிக்கை எல்லாம்
புதிய வருடத்தில் பன்மடங்காக்கு!

பழங்காலம் தந்த நட்புகள் சிறந்தவை
காலம் உண்டாக்கும் உறவுகள் உயர்ந்தவை
எக்காலாத்தும் இதனை பேணி நீ காத்திடு!

கசப்பான வாழ்விலும் மாறாத புன்னகை
தன் நிலை பாராது உதவிக்கு ஒரு கை!
புது வருடத்தின் கொள்கையாய்
இவற்றினை கடைபிடி!

அனைவருக்கும் சில்வண்டின்,

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Monday, December 29, 2008



சில்வண்டின்..,
முதற்காதல் - பதினாறாம் நினைவு !

ன்
முத
ற் காதலே!

ஆண்டுகள்
பதினாறு
ஆயிற்று
இன்றோடு!

நீ இறந்து!

உன்மேல் காதல்
எனக்கு பிறந்து!

--- 0 ---

மதிபோல்
மலர் முகம்
என்
மதியில்
மகரந்தம் தூவ!

மயங்கி
மருகி!
ஊடுறுவி
உருகி!

இமை கொட்டாது
உன் முகம்
பார்த்தேன்!

உணர்வுகளின்
ஊற்று!
உற்பத்தியாயிற்று!

--- 0 ---



--- 0 ---

அங்கங்கள்
ஒவ்வொன்றும்
அழகுக்கு
அர்த்தங்கள்!

அங்கங்கு
தங்கி நான்
ஆராய்ந்தேன்
அதில்
ஆழ்ந்தேன்!

செவி தந்தால்
ஒன்றிரண்டு
இரகசியமாய்
சொல்லிடுவேன்!

பூத்தார்போல்
புன்னகைப்பாய்!
அவ் வழகுக்காய்
விழைகின்றேன்!

--- 0 ---

ஒரு புருவம் மேலுயர்த்தி
வினாக்குறி என்றாக்கி
ஆராய்ந்த தென்னவென்றா
கண்ணாலே கேட்கின்றாய்?

குறும்பே!
அத்தனையும் கூறிவிடின்
வெட்கத்தில் வெளறிடுவாய்!
"ச்சீ " - யென்று பொய்யாக
சினம் கொண்டு சிவந்திடுவாய்!

உன் ரசிப்பை
நான் ரசிக்க
ஒன்றிரண்
டு உரைத்திவா?

--- 0 ---

பாற்கடல் சூழ
கருங்கடல் கொண்டு
அழகு சேர்த்திடும்
ஆழி இரண்டு!

அலையாய் இருள்
அலையாய் இடை
சாடும் நீர்வீழ்ச்சி!

பழம் முந்தி
வரும் விதையாய்
வனப்பாய்...
இரு
வாசல் குகை ஒன்று!

ரசம் தன்
ஈரப்பதம் நிறை
கீறி வெடித்த செங்கனி!
அதில்
பக்கவாட்டு
மின்னல் கீற்று!

பட்டாடை
போர்த்தி
பொதிந்து வைத்த
பஞ்சு மெத்தை
ரெண்டு பக்கம்!

என நான்
கண்டதெல்லாம்
அருங்காட்சி!
என் கண்களெல்லாம்
அதன் சாட்சி!

--- 0 ---

நான் கூறும்
எழில் யாவும்
உன் அழகில்
சொச்சம் மட்டும்!

நீ
அறிய
இவை போதும்!
மிச்சமெல்லாம்
எனக்கு மட்டும்!

அநியாயம்
என்றெல்லாம்
அங்கலாய்ப்பு
தேவையில்லை!

அழகெல்லாம்
உனதாயினும்
ரசனை யாவும்
எனதன்றோ?

--- 0 ---

தாரகையாய்
மேல் நின்று
இப்போதும்
புன்னகைப்பாய்!

என் காதல்
உணர்ந்தாயா
என கேட்டால்
நீ சிரிப்பாய்!

பாதி கிணறு
தாண்டிவிட்டேன்
மறு பாதி ஓடிவிடும்!

விரைந்தோடி
வந்திடுவேன்!
உன்
கன்னத்தில்
ஆழ் முத்தம்
பதித்தெடுக்க!
December 29, 2008

Tuesday, November 20, 2007

போக்கிரி வண்டு!


வணக்கம்!

பசித்திருந்த ஒரு மதிய வேளையில் இசை கேட்டிருந்தது வண்டு!

"போக்கிரி" படத்தின் "டோலு டோலு தான் அடிக்கறா" என்ற பாடலை கேட்டுக் கொண்டிருந்த போது சாப்பாடு வாசம் எங்கிருந்தோ வந்து மூக்கினை தாக்க.. இந்த மெட்டுக்கு பொருந்துமாறு சில வரிகள் வந்து விழுந்தது...!

"வாசம் வாசமா வருகுதா - என்
சுவாசம் மொத்தமும் மணக்குதா
வயிறும் காஞ்சு தான் கிடக்குதா - கொஞ்சம்
கஞ்சி கேட்டு தான் துடிக்குதா?

சில வகைகள் மட்டும் தான் கிடைத்திடுமே வீட்டில்
பல வகையில் பண்டங்கள் கிடைக்குமிடம் ஹோட்டல்!

ஊத்தி அவிச்சது இட்லியா - அதை
பரப்பி சுட்டது தோசையா!
பொறித்து எடுப்பது பூரியா - அந்த
உருளை கிழங்கு Gas தொல்லை!

அடடா அடடா அட அடை இது தாண்டா!
குடுடா குடுடா நீ சுட சுட போண்டா!
இடுடா இடுடா வடை ரசத்தினில் இடுடா
ஊறி திளைக்கும் அது ரசவடை தாண்டா! "

இப்படி சில வரிகள் பல்லவிக்கு வந்து விழுந்த நிலையில் இந்த பாடலை முழுமையாக்க நினைத்த வண்டு எழுதிய சரணங்கள் கொஞ்சம் காதல் சில்மிஷத்துடன் அமைந்திட்டது.

சில்மிஷ சரணத்துடன் பசி பல்லவி ஒட்டவில்லை. பசியின் அவதியை விட காதல் சில்மிஷங்கள் சுகம் தானே? ஆகையால் அந்த சரணத்தோடு ஒட்டாமல் இருந்த இந்த பல்லவியை மாற்றி கொஞ்சம் காதல் சில்மிஷம் கொஞ்சம் அறிவுரை என்பது போல் இப்பாடலை வடிவமைத்தது வண்டு!

இனி பாடல்...!

பல்லவி 1:

ஆ: [டாலு டாலு போல் இருக்கிறா..]
Doll-லு Doll-லு போல் இருக்குறா - புது
Feel-லு Feel-லு தான் கொடுக்குறா!
Sugar ஏற ஏறத்தான் சிரிக்கிறா - இந்த
பிகரு ஆளையே உருக்குறா!

பெ: இந்த பாவை பூவுடல் பூத்திருக்கும் சோலை!
அந்த பூவை வாடாது காத்திருக்கும் சேலை!

குழு: பூக்கள் வாசம் தான் சிறந்ததா - இந்த
பெண்கள் வாசம் தான் சிறந்ததா?
சகவாசம் இவளுடன் தோன்றினால்
சுகவாசம் கிடைத்திடக் கூடும்!

ஆ: அழகு அழகு இவள் அசைவது அழகு
பழகு பழகு நீ பரிவுடன் பழகு
இறகு இறகு மனம் மெல்லிய இறகு
இறங்கு இறங்கு நீ இதயத்தில் இறங்கு!


சரணம் 1:

பெ: பொழிந்திடும் மழையில் நனைந்திடும் பொழுதில்
சுட சுட தேநீர் சுகம் தானே!
கொதித்திடும் வெயிலில் வறண்டிடும் பொழுதில்
இளநீர் இதம் தானே!

ஆ: வியர்வையின் மழையில் விரல்களுக் கிடையில்
சிறு தொடல் சுகம் தானே!
கொதித்திடும் மனதில் தகித்திடும் உணர்வில்
இதழ் நீர் இதம் தானே!

பெ: நீ அனைத்தும் எடுக்க!
நான் அளந்து கொடுக்க!
முன்பு வழுகி விலக!
பின்பு பழகி பருக!

சரணம் 2:

ஆ: தாளிக்கும் வாசம் பரவிடும் போது
பசித்திடும் எண்ணம் வரும் போலே!
தாவணி பெண்ணை பார்க்கையில் காதற்
பசி அதை கண்டேனே!

பெ: உலையினில் அதிகம் இருந்திடும் சாதம்
குழைந்திடும் அது போலே!
நிலையினில் நில்லா திருந்திடும் பருவம்
பிழையென்று ஆகிடுமே!

விளைவு அறிந்து!
இடை வெளியில் பழகு!
நீ சமயம் அறிந்து!
தீ அணைத்துப் பழகு!

[இந்த பாவை பூவுடல் பூத்திருக்கும்....]


சில்வண்டு!
Nov 20, 2007