அந்த காலத்திலே, எங்க காலேஜுலே..!!
MCA Second Year க்ளாஸுக்கு அது தோஷமான காலம்.
பேர் கொஞ்சம் ரிப்பேர் ஆகியிருந்துச்சு. Why? – இருந்தது சில பல காரணங்கள்.
தென்னைமர ஓலையில பீப்பி செய்யறது எத்தனை மகத்தான கலை? அந்தக்கலையில தேறின ஒருத்தன் ஓலையில பீப்பீ செஞ்சு காலையிலே க்ளாஸுக்கு கொண்டாந்திருந்தான். சின்ன வயசுல ஊதினது. எத்தனை காலம் ஆச்சு? ஆசை ஆசையா அத வாங்கி ஆர்வமா ‘பீப்பி’க்கிட்டிருந்தோம்.
அது மலர்விழி மேடத்தோட க்ளாஸ்….!
இ ருங்க! மேம்போக்கா, “அது மலர்விழி மேடத்தோட க்ளாஸ்” னு சொல்லிட்டு என்னால சும்மா கடந்து போயிட முடியாது. நான் மலர்விழி மேடத்தப்பத்தி கொஞ்சம் சொல்லியாகணும்…!
Recent ஆ, நான் பாத்து ரொம்ப ரசிச்ச ஒரு மளையாள சினிமா “PREMAM”. அந்தப் படத்துல ஒரு கதாநாயகி காலேஜ் lecturer. அந்த கதாபாத்திரம் எனக்கு மலர்விழி மேடத்த ஞாபகப்படுத்திடுச்சு. அந்த ஹீரோயின் சிரிக்கறது அப்படியே மலர்விழி மேடம் சிரிக்கறது மாதிரித்தான் இருக்கும். அதும், அந்தப் பொண்ணு தலையாட்டுறது அப்படியே மலர்விழி மேடத்தோட மேனரிசம். same to same…
ditto! படத்துல அந்த கேரக்டரோட பேர் கூட “மலர்” தான்!
Second Year ல தான் lecturer ஆ எங்க காலேஜ்ல Join பண்ணாங்க மலர்விழி மேடம். அவங்க படிச்சு முடிச்சு இதுதான் அவங்களுக்கு first job. எளிமையான கிராமத்து அழகு மலர்விழி மேடம். கோவப்படாத சிரிச்ச முகம். எங்களை விட ஒன்னு ரெண்டு வருஷம் சீனியரா இருக்கணும். வயசு வித்தியாசம் கூட அவ்ளோதான் இருக்கும். Class எடுக்கற நேரம் போக மத்த நேரங்கள்ல ரொம்பவும் friendly யா பழகுவாங்க அவங்க!.
மலர்விழி மேடம் கொஞ்ச நாள் தான் எங்களுக்கு க்ளாஸ்
எடுத்தாங்க. அதனால மத்த லெக்சரர்ஸ் மாதிரி இவங்கள prominent ஆ எல்லாருக்கும் ஞாபகம் இருக்க வாய்பு இல்ல. எனக்கு
இவங்கள நல்லா ஞாபகம் இருக்கறதுக்கு ஒரு காரணம் இருக்கு.

ஒருத்தருக்கொருத்தர் மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு திரியும் அந்த சண்டை நாட்கள்ல ஒரு நாள், காலேஜ் பஸ்ல நான் உட்கார்ந்திருந்தேன். காலேஜ் இன்னும் விடாததால பஸ்சுல அதிகம் பேர் இல்ல. கொஞ்ச நேரத்துல என் சண்டைத் தோழியும்
அவளோட தோழிகளும் பஸ்ஸுக்கு வந்தாங்க. பஸ்ல என்னைப் பாத்ததும் என் தோழி அவ மூஞ்சிய திருப்பிக்கிட்டு
வேற பக்கமா போய் உக்காந்துட்டா! பெண் தோழிகள்கிட்டே சண்டை போட்டா அவங்களை சீண்டணும், வம்புக்கிழுக்கணும், அப்படி செஞ்சாதானே சண்டைல ஒரு சுவாரஸ்யம் இருக்கும்? அதனால, நான் அவளை indirect ஆ டீஸிகிட்டிருந்தேன்.
மலர் மேடமும் பஸ்ல இருக்காங்கன்னு அப்ப நான் கவனிக்கல…! மூஞ்சியை தூக்கிவச்சுக்கிட்டு
“உம்” முன்னு இருக்கும் என் தோழிய திரும்பத் திரும்பக் கூப்பிட்டு அவளை என் பக்கமா
திரும்பவைக்க பிரம்ப பிரயர்த்தனம் பண்ணிட்டிருந்தப்பத்தான் மலர் மேடத்த கவனிச்சேன்.
நான் அந்தப் பொண்ண வம்பிழுக்கறத சிரிச்சுகிட்டே பாத்துகிட்டிருக்காங்க….!
மேடத்த பாத்ததும், அசடு வழிய வாலை சுருட்டிக்கிட்டு சட்டுனு சமத்துப் பையனா மாறி அமைதியா உக்காந்துட்டேன். நொடிப்பொழுதுக்குள்ள நல்ல பிள்ளையா மாறிட்ட என் வேகத்தை பாத்து மலர் மேடமே ஆச்சரியப்பட்டுப் போனாங்க.
திடீருன்னு அவங்க என் தோழி பக்கமாகத் திரும்பி, “ஏய் பொண்ணு…! அவர் இத்தனை தடவ கூப்பிடறாரே உனக்கு கேக்குதா இல்லையா?” ன்னு அவள கேக்கறாங்க….
ஆனா, அவ இருக்கிறாளே என் தோழி, மேடம் கூப்பிட்டது காதுலயே விழாதமாதிரி இருந்துட்டா. மலர்விழி மேடம் திரும்பவும் அவள பேரச் சொல்லி கூப்பிட்டும் அவ திரும்பாம இருக்க, பாவம் மலர்விழி மேடத்துக்கு என்னவோ போல ஆயிடுச்சு. எனக்காக அவள கூப்பிடப்போக, மேடத்துக்கு என்னால இப்படி
ஒரு அவமானம் ஆயிடுச்சேன்னு எனக்கும் வருத்தமா போச்சு. என் தோழி மேல என்னக்கு கோவம்
வந்து சுர்ர்ர்ர்ர்ருன்னு மண்டைல ஏறுச்சு. நேரா எந்திரிச்சு அவ கிட்ட போயி,
“யாரு கிட்டே எப்படி behave பண்ணறதுன்னு ஒரு மரியாதை இல்லே? அவங்க என்ன உன் friend னு நெனச்சுகிட்டிருக்கியா? அப்படி என்னடி உனக்கு ego?” ன்னெல்லாம் நான் அவளைப் பாத்து சத்தம்போட, அவ உடனே கண்ணுல கண்ணீர் குளத்தக் கட்ட ஆரம்பிச்சுட்டா. அழுகை அஸ்திரத்த எடுத்த அவ கிட்டே இனிமே பேசிப் பிரயோஜனம் இல்லைன்னு நானும் பேசாம உக்காந்துட்டேன்.
அவ என் தோழிங்கறதுனால, அவ சார்பா நான் மலர் மேடம் கிட்ட, அவ அவங்கள அவமானப் படுத்தினதுக்கு, மன்னிப்பு கேட்டுக்கிட்டேன். ஆனா, மலர்விழி மேடம் என்னன்னா, நான் அவள சத்தம் போட்டதுக்காக என்னை கோவிச்சுக்கிறாங்க...,
“அவ அப்படி behave பண்ணினது தப்புதான். ஆனா நீங்க அதுக்காக அவளை எல்லார் முன்னாடியும் அப்படி சத்தம் போட்டது அதை விட பெரிய தப்பு…! நீங்க மன்னிப்பு கேக்கவேண்டியது, அந்த பொண்ணு அப்படி behave பண்ணிணதுக்கு இல்ல, அதுக்கு நீங்க react பண்ணீங்கள்ல… .சண்டை போட்டு….. அதுக்குத்தான்….” னு சொல்றாங்க!
நான் அமைதியா உக்காந்திருந்தேன். மலர்விழி மேடம் இறங்கும் இடம் வந்துச்சு. அங்கேயிருந்து வேற பஸ் பிடிச்சுதான் அவங்க வீட்டுக்கு போகனும். நானும், மேடம் இறங்குற இடத்துலேயே அவங்களோட இறங்கிட்டேன்.
“Sorry” சொன்னேன்!
“நான் சொன்னதுக்காக சொல்லறீங்களா? இல்ல, நீங்க செஞ்சது தப்புதான்னு உணர்ந்து சொல்றீங்களா?” – ன்னு மேடம் கேக்க, “நீங்க சொல்லும்போது
நான் செஞ்சதுல ஏதோ தப்பு இருந்திருக்குன்னு புரியுது மேடம். அதப் புரிஞ்சு தான் சொல்றேன்”
னு நான் சொல்ல, மலர் மேடம் அவங்க அழகை கூட்டிக்காட்டும் அந்த trade mark சிரிப்பை மீண்டும் உதிர்க்கறாங்க.
அதைத்தொடர்ந்து மலர்விழி மேடம் போகவேண்டிய பஸ் வரும் வரைக்கும் அவங்ககிட்டே பேசிக்கிட்டிருந்த அந்த பத்துப் பதினைந்து நிமிஷங்கள், அதுல, ஏதோ என் நீண்ட
கால ஸ்நேகதியப்போல, அவங்க எனக்குச் சொன்ன சில அறிவுரைகள், அந்த சாயங்கால நேரத்து மஞ்சள் வெயில், ஈரப்பதமே இல்லாம வீசிக்கிட்டிருந்த வறண்ட காத்து.., சாலையோர பேரிரைச்சல்…,. இப்படி, அந்த நிமிஷங்கள் எல்லாம், சிம் கார்டில் பதியவச்ச வீடியோவ போல அப்படியே எம் ஹார்ட்டில் பதிஞ்சுபோனது.
இன்னைக்கும் நான் மலர்விழி மேடத்த என் ஞாபகத்துல வச்சிருக்கக் காரணம் அவங்களோட செலவழிச்ச மகத்தான அந்த பத்து நிமிஷங்கள்தான்.
அந்த அற்புத நிமிஷங்களுக்கு நன்றி மலர்விழி மேடம்!!!
இ ந்த மலர்விழி மேடத்தோட க்ளாஸ்லதான், தென்னை ஓலை பீப்பி செஞ்சு அத நாங்க ஆனந்தமா ஊதிக்கிட்டிருந்தோம். அந்த நேரத்துல rounds வந்தார் எங்கள் பிரின்ஸிபால்…, “சேஷன்” னுன்னு தான் அழைக்கப்படுறத ரொம்பவும் விரும்பும் Major. Aravandi sir.
அவர் மாடிப்படி இறங்கி வந்திட்டிருக்கறத பாத்துட்டு ஜன்னலோரம் உக்காந்திருந்த நண்பன் எங்களை அலறியடிச்சுக்கிட்டு ‘alert’ செஞ்சான். நாங்க உடனே அலர்ட் ஆகி அமைதியாயிட்டோம். அரவாண்டி சார், எங்க கிளாஸைத் தாண்டி casual ஆ போய்விட, ‘அப்பாடா… நல்லவேளை அவர் கிட்டே மாட்டிக்கலை’ ங்கற சந்தோஷத்துல எவனோ ஒருத்தன் “வெற்றி… வெற்றி” அப்படீங்கறத “பீப்பீ… பீப்பீ” ன்னு ஊதி வச்சான். அவன் ஊதிகிட்டிருக்கும்போதே சட்டுன்னு கிளாசுக்குள்ள நுழைஞ்சாரு மேஜர் சார்.
மொத்த கிளாஸையும் பத்து நாளைக்கு சஸ்பெண்ட் செஞ்சு,
பத்து நிமிஷத்துக்குள்ல நாங்க காலேஜ் காம்பவுண்ட விட்டே வெளியே போகனும்னு சொல்லி அவர்
மொத்தமா ஊதிட்டு போயிட்டாரு.
Casual ஆ எங்க class ஐ cross பண்ணின மனுஷன் அங்கேயே காத்து நின்னிருக்கிறார். அது தெரியாம “வெற்றி பீப்பீ”
ஊதப்போக கையும் பீப்பியுமா நாங்க மாட்டிக்கிட்டோம். வெற்றி “பீப்பீ” ஊதுனவன் இப்போ
சோகமான ட்யூன்ல “பீப்பீ” ஊத, நாங்க நாடுவிட்டு போகும் அகதியப்போல க்ளாச விட்டு வெளியே
போனோம்.
கொஞ்சம் சோகமாத்தான் இருந்துச்சு. ஏன்னா, நாங்க அப்போ second year students! Second year is a very crucial year you know? நோ நோ…! Classes miss ஆறதால படிப்பு கெட்டிடுமேங்கற அக்கறைல சொல்லல...,
அப்பத்தான், class—ல நாங்கெல்லாம் ஒரு குரூப்பா form ஆகி, ஒரு gang ஆ செட் ஆகி, நட்போட உச்சத்தில மெதந்திட்டு இருந்தோம். கெடைக்கற கேப்புல லீவு போட்டுட்டு ஊருக்குப்போற பழக்கமெல்லம் கொறஞ்சு, காசு கொறஞ்சா மட்டும் ஊருக்குப் போகும் மனநிலைக்கு மாறியிருந்த காலம் அது. கிராமத்தையும் தாண்டி, குக்கிராமமும் அல்லாத ஒரு பொட்டல் வெளியில இருந்த எங்கள் காலேஜ்ல எங்களுக்கு entertainment டே எங்க class ம் அதுல நாங்க செய்யும்
சேட்டைகளும் தான். நாங்க அத இழக்க விரும்பல…!
எங்க class எப்பவும் சந்தோஷமும் சிரிப்புமா அவ்ளோ lively யா இருக்கும். “Masters” ங்கறதுனால, எல்லா பையன்களும் ரொம்ப பக்குவமாக இருப்பாங்க, UG போல fun எல்லாம் இருக்காதுன்னு நெனச்சதுண்டு. ஆனா, fortunately எங்க class ல பெரும்பாலும் எல்லோருமே jovial guys.
டிபன் பாக்ஸ் ல கல்லப்போட்டு நிரப்பி வைக்கறது. பெஞ்சுக்கடியில
புகுந்து ரெண்டு கால்ல போட்டிருக்கிற ஷூ லேசை பிடிச்சு ஒன்னா கட்டி வைச்சுட்டு, சம்மந்தப்பட்டவன
கூப்பிட அவன் கால் தடுக்கி விழறதை வேடிக்கை பாத்து சிரிக்கறது. யாரோடவாவது நோட் புக்கை
எடுத்து அதுல “உபயம்” னு எல்லார் பேரையும் எழுதி கையெழுத்துப் போட்டு வைக்கறது, lab log புக்ல, front page ல ஒட்டியிருக்கும் போட்டோக்கு கீழே, “Wanted this notorious
criminal” னு எழுதிவைக்கறதுன்னு, சின்னப்பசங்க விளையாட்டையும்
செஞ்சுக்கிட்டிருப்போம்.
T.ராஜேந்தர் மாதிரி சொல்லனும்னா…, “சா….ர்ர்ர்ர்ர்…, அந்த நாட்கள்ல நாங்க கொண்டிருந்தது நகைச்சுவை உணர்வின் உச்சம், அது இல்லாமல் இருந்தவங்க கணக்குப்பாத்தா கம்பேரிட்டிவ்லி சொச்சம்! எங்க தலையில ஏறாம இருந்திருக்கலாம் பாடம்…. ஆனா எங்க மனசுல ஏராளமா இருந்தது பாசம்!”
இப்படிப் பாசக்கார பய புள்ளைகளா நாங்க நேசத்த வளத்து காலேஜ் வாழ்க்கைய ருசிகரமாக ஆக்கத் தொடங்கியிருந்த சமயத்திலதான் இப்படி பீப்பீ ஊதி சஸ்பென்ட் ஆயிப்போனோம்.
அந்த சமயத்துல எங்க Second MCA க்ளாஸ் மேல எல்லா staff க்கும் ஒரு கோவம் இருந்துச்சு. அதுக்கு காரணம் மேனேஜ்மென்டுக்குப் போன ஒரு மொட்டை கடுதாசு. யாரும் சரியா க்ளாஸ் எடுக்கறதில்ல அப்படீங்கற ஏக (உண்மையான) குற்றச்சாட்டோட ஒரு மொட்டைக் கடிதத்தை யாரோ அனுப்பியிருக்க, அதை அனுப்பினது யாருன்னு குறிப்பா யாரையும் கண்டுபிடிக்க முடியாததால மொத்த க்ளாசையுமே ரெண்டாம் பட்சமா நடத்திட்டிருந்தாங்க.
ஏற்கனவே இப்படி ஒரு நிலமை இருக்க, பீப்பீ ஊதி சஸ்பெண்ட் வேற ஆனது க்ளாஸ் பேர ரிப்பேர் ஆக்கிடுச்சு. க்ளாஸுக்கே தோஷமான காலம் அது. இப்படி தோஷத்தோட இருந்தப்பத்தான் எங்க காலேஜ்ல College day வந்துச்சு….! கல்லூரிதினம்!!!
As a protest for being treated
indifferently, we will boycott the college day! ன்னு தான் மொதல்ல தீர்மானம் போட்டோம். “பாய காட்டிடவேண்டியதுதான்” னு சிலரும், “அதப்போய் காட்டுவானேன்” னு சிலருமா கருத்து வேறுபட, முழு ஆதரவு அந்தத் தீர்மானத்துக்குக் கெடைக்காம போயிடுச்சு.
அதுவும் சரிதான். நாம கலந்துக்காட்டி யாருக்கு என்ன நஷ்டம்? ஒன்னு பண்ணலாம், எல்லா events க்கும் பேர் கொடுக்கலாம், மேடைக்கு நம்மள கூப்பிடும்போது, மேடை ஏறி எங்களை சரியா treat பண்ணாததுனால நாங்க கலந்துக்கலைனு சொல்லலாம் ன்னு தீர்மானத்தை மாத்தினோம்.
எல்லா events க்கும் பேரையும் கொடுத்தோம். பின்னாலயே இன்னொரு circular வந்துச்சு. பேர் கொடுத்துட்டு participate பண்ணாம இருந்தாலோ, இல்ல withdraw செஞ்சாலோ ஒரு சில நூறுகள் fine கட்டணும்னு சொல்லுச்சு circular. ஆக, நாங்க வசமா மாட்டிகினோம். அதனால, ஏற்கனவே மாத்தியிருந்த தீர்மானத்துல திரும்பவும் இன்னொரு திருத்தத்த கொண்டுவந்தோம். “ஒவ்வொரு event லயும் participate செஞ்சு, மேடைல ஏறி கலாட்டா செஞ்சு, சூப்பரா சொதப்பி, நம்ம எதிர்ப்பத் தெரிவிக்கலாம்!” அப்படீங்கறதுதான் கடைசியா போட்ட தீர்மானத் திருத்தம்.
இப்படியிருக்கும்போது ஒரு சம்பவம் நடந்துச்சு.
எங்க காலேஜ், கரகாட்டம் டீம் யூனிவெர்ஸிட்டி வரை போய் பல பரிசுகள் வாங்கியிருக்கு. They are quite famous. அவங்க எங்க காலேஜின் பெருமை. Obviously, அவங்க group ம், College day
competition ல பங்கெடுத்துக்குது. அதுல, பிரபாவதின்னு ஒரு பொண்ணு. நல்ல dancer. M.Sc batch. Group dance க்கு பேர் கொடுத்திருந்த லிஸ்ட்ல எங்க பேரை பாத்தவ, சிரிச்சா சிரிச்சா அடக்கமாட்டாம அப்படி சிரிச்சா.
“நீங்களா? டான்ஸா? என்ன ஆடப்போறீங்க?” அப்படீன்னெல்லாம் அவ எங்கள கேலி செய்யுறா. அவ ஏதோ தமாஷுக்கு விளையாட்டா கிண்டல் செஞ்சாலும், எனக்கென்னமோ அவ இப்படி எங்கள கேலி செய்யறது அவ்வளவா ரசிக்கல. அவ, இப்படியெல்லாம் கிண்டல் செஞ்சப்போ எனக்குள்ளே தூங்கிட்டிருந்த தன்மானம் தூக்கத்த கலைக்க விரும்பாம நெளிய ஆரம்பிச்சது.
“ஏன் உங்களுக்கு, (உங்களுக்குன்னா எங்க க்ளாஸ் பசங்களுக்கு) இந்த வேண்டாத வேலை? நாங்களும் competition ல இருக்கோம்னு தெரியும்ல, consolation prize கூட கிடைக்காது. பேசாம சொதப்பாம வாபஸ் வாங்கிக்கோக்க…” ன்னு அவ சொல்ல, சுள்ளுன்னு விட்டேன் ஒரு அறை…! No No, அவளை இல்ல, நெளிஞ்சிட்டுருந்த என் தன்மானத்ததான் அறைஞ்சேன். அறை வாங்கின வேகத்துல தூக்கத்த கலச்சுட்டு என் தலையில ஏறி உக்காந்துச்சு என் தன்மானம்.
கிட்டத்தட்ட அண்ணாமலை ரஜினிகாந்த் போல ஆகி, தொடையைத் தட்டாத குறையா (என் தொடையைத்தான்) அந்த பொண்ணுகிட்டே ஒரு சவால் விட்டேன்!
“பிரபா… ஒத்துக்கறேன்… எங்களுக்கு consolation prize கூட கிடைக்காதுதான்… agreed! ஆனா, Crowd applaus…, கைதட்டல் ஓசை, உங்க group ஐ விட, ஏன் எந்த group ஐயும் விட, எங்களுக்குதான் அதிகமா இருக்கும்… பாக்கலாமா?” ன்னு கேட்டேன்!
“பாக்கலாம்… பாக்கத்தானே போறோம்….!” னு அவளும் சொல்லுறா.
நாங்க பொங்கி எழுந்தோம்! ஒரு வேகத்துல பொங்கி எழுந்தவரை Ok தான். ஆனா, பொங்குனதுக்கு அப்புறம் மேற்கொண்டு என்ன செய்யறதுன்னு தான் எங்களுக்குத் தெரியல. எங்க யாருக்குமே dance தெரியாது. இதுக்கு மேல ஒரு உணர்ச்சி வேகத்துல கத்துக்கலாம்னு பாத்தாலும் வளையுற உடம்பா இதல்லாம்? ஆனாலும், ஏதாவது செஞ்சே ஆகனுமுன்னு ஒரு உந்துதல் இருந்துச்சு. ஏன்னா, அந்தப் பொண்ணு எங்கள அவமானப் படுத்தறப்போல அப்படி சிரிச்சுட்டா!
மெய்யநாதன்…, ரொம்ப சுலபமா கோவப்படும், வேகப்படும், உணர்ச்சிக் கொந்தளிப்பானவன். அவன் கைய சொடுக்கி… “What a… what a.. what a…” ன்னு சொல்லிக்கிட்டே எங்க ரூம்ல குறுக்கும் நெடுக்குமா நடந்துகிட்டே அடுத்து என்ன செய்யறதுன்னு யோசிக்கறான், யோசிக்கறதோட நின்னுடல, செயல்லயும் இறங்கினான். அவன் ஊருலயிருந்து ஒரு Dance Master ஐயே இறக்குமதி செஞ்சு எங்கள ஆச்சர்யத்துல ஆழ்த்திட்டான்.
Dance Master கிட்டே எங்க பிரச்சினையையும், சவாலையும் சொல்லி அவர் கிட்டே சரண் அடைஞ்சோம்.

ரஜினி டான்ஸ் ரொம்ப ஈஸி, கொஞ்சம் ரஜினி ஸ்டைல் சேத்து ஆடினா செமையா கை தட்டல் கிடைக்கும்னு யாரோ சொல்ல, ஒரு ரஜினி பாட்டையும் இன்னொரு கிராமிய பாட்டையும் செலெக்ட் பண்ணினோம்.
ஒன்னு, ரஜினியின், “ஆட்டோக்காரன்… ஆட்டோக்காரன்” இன்னொன்னு, “கடலையின்னா கடல இது கரிசக்காட்டு கடல” னு ஒரு கிராமிய பாட்டு. ரெண்டுல எதுக்கு நல்லா ஆட வருதோ அதை காலேஜ் டே அன்னிக்கு
ஆடிடலாம்னு முடிவு செஞ்சோம்.
எந்த மகராசன் சொன்னான்? ரஜினிகாந்த் dance ஈஸின்னு? ரஜினி அசைக்குறதப் போல இடுப்ப வெட்டி வெட்டி அசைக்க சொல்றார் டான்ஸ் மாஸ்டர். அப்படி இப்படி இடுப்ப அசைச்சா அங்கே இங்கே சுளுக்கத்தான் செய்யுதே தவிர ஒரு ஸ்டெப்பும் வரல. சரின்னு, கிராமிய பாட்டுக்குத் தாவினோம்.
அங்க மட்டும் என்ன வாழுச்சு? “இஞ்சியின்ன இஞ்சி இது நான் குடுத்த இஞ்சி.. ஏய் இஞ்சி… ஏய் இஞ்சி” னு ஒரு லைன். அந்த இஞ்சி போர்ஷனுக்கு, அந்த மாஸ்டர் சொல்லிக்கொடுத்தார் பாருங்க ஒரு ஸ்டெப்பு, இஞ்சு இஞ்சா உடம்புல ஒவ்வொரு இஞ்சும் வலியெடுக்க, நாங்க மாஸ்டர கெஞ்ச ஆரம்பிச்சுட்டோம்.
ஒன்னும் ஒத்துவரல. ஒடம்பும் ஒத்துழைக்கல. மனசும் தளர்ந்து போச்சு. முக்கல் முனகலோட ஆளாளுக்கு ஒவ்வொரு மூலையிலே செவுத்த பிடிச்சிட்டு நிக்கவும் முடியாம தவழ்ந்திட்டு இருந்தோம். மாஸ்ட்டருக்கு நம்பிக்கை மொத்தமா போயிடுச்சு. மெய்யநாதன் மட்டும் இன்னும் விடாம பல ரஜினி ஸ்டைல செஞ்சிட்டிருக்கான். ஆனா. அந்த ஸ்டைல் எல்லாம் டான்ஸுக்கு நடுவுல செய்யவேண்டியது… இங்கே டான்ஸே உடான்ஸ் ஆயிடுச்சுன்னு அவனுக்குப் புரியல.
சுவாமிநாதன் கிட்டே பேசிட்டிருக்கும்போது விரக்தியா நான் சொன்னேன்….,
“சாமி…. பேசாம ‘பருவமே புதிய பாடல் பாடு’ ங்கற பாட்ட போட்டுட்டு, அந்தப்பாட்டுல மோகனும், சுஹாசினியும் ஓடுற மாதிரி நாமளும் ஸ்டேஜ்ல ஓடிட்டே இருக்கலாம்….கலாட்டா செய்யணுங்கறதுதானே நம்ம நோக்கம்?” முன்னு நான் சொல்லி முடிக்கறதுக்குள்ள..,
“டேய்…. இது நல்ல ஐடியாடா….” ன்னு சாமி புதுத் தெம்போட சொல்ல, விளையாட்டுப்போக்கா சொன்ன இந்த ஐடியாவால திரும்பவும் மீண்டெழுந்து வந்து எங்கள தழுவிக்கிச்சு புது உற்சாகம்.
இந்த ஐடியாவ develop செஞ்சோம். அந்த ஒரு பாட்டோட நிக்காம, இதுபோல “Something
different or something special” ஆ இருக்கும் songs ஐ யோசிக்க ஆரம்பிச்சோம்.
“ஜென்டில்மேன் – பாக்காதே பாக்காதே பஞ்சாங்கத்த பாக்காதே”, பாட்டுல ரெண்டு பேர் அப்பப்ப குறுக்க நெடுக்க பொயிட்டிருப்பாங்க. அது! அப்புறம்,
“ஓரம்போ… ஓரம்போ ருக்குமணி வண்டி” பாட்டுல சைக்கிள் ஓட்ட கத்துக்கும்
ஹீரோ!.
“இதயத்தை திருடாதே – ஓம் நமஹா…” பாட்டுல, பாட்டு முழுக்க கேமரா ஹீரோவையும் ஹீரோயினையும் சுத்தி வர, lip lock kissing….!
முந்தானை முடிச்சு - “கண்ணத்தொறக்கணும் சாமி…” பாட்டுக்கு ஒருத்தன் சாமியாக இன்னொருவன் மேனகையா வந்து தவத்தை கலைப்பது போல… னு, bunch of songs ஐ list out செஞ்சோம்.
ராத்திரி கடை மூடப்போற நேரத்துல, ஒரு ரெக்கார்டிங் சென்டர் ஓனரை தாஜா பண்ணி லிஸ்ட்டை கொடுத்து ஒவ்வொரு பாட்டுலயும் கொஞ்சம் கொஞ்சமா ஒரு கதம்பமா ஒரு sequence ல, ரெக்கார்ட் செய்யச்சொல்லி வாங்கினோம்.
பெண் வேஷம் போடணும்னு எனக்கு ரொம்ப நாளாக ஆசை. So, நான் பெண் ஆனேன். Rehearsals ஆரம்பிச்சது. J. செந்திலும், D. சுரேஷும் கலக்குறாங்க. சுரேஷோட ஒவ்வொரு expression னும், அத்தனை cute. அந்த முகபாவங்களுக்கு யாராலயும் சிரிக்காம இருக்கவே முடியாது. Plus, கிக்கேத்தும் என்னோட female movements. ரிஹர்ஸல் சமயத்திலே நாங்களே விழுந்து விழுந்து சிரிச்சிட்டிருந்தோம். We knew it is shaping up well. இதை மேடையேத்தறதுக்கு ஆர்வத்தோட காத்திருந்தோம்.
இ து சந்தோஷம்தான். ஆனால், இதுவே எங்களுக்கு இன்னொரு சிக்கல உண்டாக்கிடுச்சு. பிரபாவதி கிட்டே சவால் விட்டதால டான்ஸ் நிகிழ்ச்சிய ஒரு form க்கு கொண்டுவந்தாச்சு. இத மட்டும் பிரமாதமா செஞ்சிட்டு, மத்த ஐட்டங்களை எப்படி சொதப்பறது? தவிர, Competition ல முதல் நாள் முதல் நிகழ்ச்சி Skit. முன்னமே முடிவு செய்திருந்ததுபோல மேடை ஏறி கலாட்டா செஞ்சா, மற்ற நிகழ்ச்சிகள்ல எங்களை பங்கேற்க விடாம செஞ்சிடவும் வாய்ப்புண்டு. அப்படி செஞ்சுட்டா இத்தனை கஷ்ட்டப்பட்டு உருவாக்கின இந்த நடன நிகழ்ச்சிய அரங்கேத்த முடியாம போயிடும்.
டான்ஸ் புரோகிராமை அரங்கேத்துறது அதிமுக்கியம். அதனால, Skit ல நாங்க கலாட்டா பண்ணக்கூடாது, அதானால skit க்கான ஐடியா புடிக்க, எங்க கவனத்தை skit மேல திருப்பினோம்.
மெய்யநாதன் நல்லா கதை எழுதுவான். அர்த்தராத்திரில அவனுக்கு பொறி தட்டினாலும் எந்திரிச்சு உட்கார்ந்து கதை எழுத ஆரம்பிச்சுடுவான். அவன் ஒரு skit எழுதித்தர சம்மதிச்சான். சம்மதிச்சது போலவே எழுதவும் செஞ்சான். வேலையில்லா திண்டாட்டத்தை மையமா வச்சு, ஒரு அருமையான script ஐ எழுதினான் மெய்.
படிப்பு முடிச்சு வேலையில்லாதிருக்கும் இரண்டு நண்பர்கள். ஒருத்தன், வேலை கிடைக்கலைன்னு புலம்பிப் புலம்பி angry young man ஆ இருக்கான். அடுத்தவன், இப்படி புலம்பாம அவனாவே சுயமாக சின்னதா ஒரு தொழில் தொடங்கி வாழ்க்கையில முன்னேறி, மாநிலத்திலேயே நம்பர் ஒன் தொழிலதிபரா ஆயிடறான். தோல்வியில துவண்டிடாம, வேலை தேடி சம்பாதிச்சாதான் ஆச்சுன்னு நெனைக்காம, சுயமாக போராடி முன்னேறனும் அப்படீங்கறது தான் Skit சொல்ற மெசேஜ்.
சீரியஸான script தான். ஆனா இத்தனை சீரியஸா யார் நடிக்கறது? நாங்க சீரியஸா நடிக்கறத கற்பனை செஞ்சா எங்களுக்கே சிரிப்புதான் வருது. அதனால, இந்த சீரியசான ஸ்கிரிப்டோட கருவ சிதைக்காம, காட்சிகளை எங்களுக்கு தகுந்த மாதிரி லைட்டா வடிவமச்சோம்.

No 1 தொழிலதிபரா முன்னேற்றம் காணும் கதாபாத்திரமா பிரகாசம். அவனோட அப்பா நாட்டாமையா ஜெ. செந்தில். தொழிலதிபர் பிரகாசத்துக்கு விருது வழங்க வரும் தொழில்துறை அமைச்சரா சுவாமிநாதன். அமைச்சருக்கு கெத்து சேக்க கேரக்டர் பேருக்கு ஏகப்பட்ட
இனிஷியல்ஸ் சேத்து “க.கா.கி.கீ.கு.கூ.கே. சுவாமிநாதன்” னு பேர் சூட்டினோம்.
Casting பக்கா ஆனது. செந்திலுக்கு மட்டும் அப்பா லுக் கொண்டுவர, முடியை நரைக்கவைக்க என்ன செய்யறதுன்னு தெரியாம கடைசியில சாக்பீஸை இடிச்சு பொடியாக்கி அதை முடியில் தடவி நரைக்கச் செஞ்சோம்.
College day competitions தொடங்குச்சு. முதல் நாளில் எங்க Skit.
மேடைல அருமையா புலம்பினான் மெய்யநாதன். பொதுவாவே நிறுத்தி நிதானமாக பேசும் பிரகாசத்தின் குரலும் body language ம் அவன் கதாபாத்திரத்துக்கு அம்சமா பொருந்துது. செந்தில், கோயம்பத்தூர் கொங்கு பாஷை slag ல நாட்டாமையாக வெளுத்து வாங்கினான். நாட்டாமைங்கற அவனோட காதாபாத்திரத்துக்காக “நாட்டாம தீர்ப்பை மாத்தி சொல்லு” ன்னு அப்போ பிரபலமா இருந்த வசனத்தை நுழைக்கணுங்கறதுக்காகவே மெய்யநாதன் ஒரு சீன் எழுதியிருந்தான். அந்த சீன்ல தான் முதல் கைத்தட்டல் எங்களுக்கு கெடச்சது. செந்திலோட ஒவ்வொரு வசனத்துக்கும் அதுக்கப்புறம் கைத்தட்டல் கிடைச்சிட்டிருந்தது.
பிரகாசத்துக்கு விருது வழங்க தொழில்துறை அமைச்சரா சுவாமிநாதன் மேடையேற, நாங்க எல்லோருமே கொஞ்சம் அசந்துதான் போனோம். வேஷ்டி, வெள்ளை சட்டை, தோள்ல பச்சைத்துண்டு, கண்ணுல கருப்பு கண்ணாடின்னு அந்த அரசியல்வாதி வேஷப்பொருத்தம் சுவாமிக்கு கனக்கச்சிதமாக பொருந்தியிருந்துச்சு. அதுவும், மைக்க பிடிச்சு கரகரக்குரல்ல “என் உயிரினும் மேலான….” ன்னு ஒரு தேர்ந்த அரசியல்வாதியப்போல பேசத்தொடங்க விசில் சத்தங்கள் காதைக்கிழிச்சது.
அமைச்சர் மேடையேறினதும், அவருக்கு 18 வது வட்டத்தின் சார்பா ஒரு மாலைய போடுற ஒரு சின்ன ரோல் எனக்கும் இருந்துச்சு. அவசரத்துல மாலைய எடுக்காமலேயே நான் மேடையேறிட்டேன். அமைச்சரான சுவாமிநாதன் என்னைப் பாக்க, நான் வெறும் கைய வீசிக்கிட்டு என்ன செய்யறதுன்னு தெரியாம முழிக்கறேன். இறங்கிப்போய் மாலையை எடுத்துட்டு வரவா முடியும்? ஆதனால, “மாண்புமிகு தொழில்துறை அமைச்சருக்கு ஏதோ ஒரு வட்டத்தின் சார்பாக இந்த ‘சும்மா’ மாலையை அணிவிக்கிறேன்” ன்னு சொல்லி, மாலை போடுற மாதிரி வெறும் கையால ஆக்ஷன் மட்டும் செஞ்சேன். நல்லவேளையா ஆடியன்ஸ் இதை ரசிச்சு சிரிக்க எங்க நாடகம்
சொதப்பலாகாமல் தொடர்ந்தது.
தொழில்துறை அமைச்சராக சுவாமிநாதன் பேசிய வசனங்கள் அப்படியே ஒரு அரசியல்வாதி பேசறதைப் போலத்தான் இருந்துச்சு. “தம்பி பிரகாசத்தை சிறுவயது முதலே நான் அறிவேன். பிரகாசத்தை ஆங்கிலத்தில் brightness என்பார்கள்….” ன்னு சாமி வசனமுதிர்க்க, கரகோஷம் விண்ணைப் பிளந்தது.
மொத்தத்துல போரடிக்காத ஜனரஞ்சகமான skit ஆ அமஞ்சது அது.
Skit க்கு கிடைத்த பாராட்டும் கரகோஷமும் எங்களுக்கு தெம்பா இருந்துச்சு. அடுத்த நாள் எங்க டான்ஸ் அரங்கேற்றம். எல்லாம் ரெடி ஒரே ஒரு விஷயத்தைத் தவிர.
பெண்வேஷம் போடப்போகும் எனக்கு இன்னும் costume அமையல. அந்த கிராமத்துல யார் கிட்டே போய் பெண்ணுக்கான dress ஐ கடன் வாங்கறது? கடைசில வேற வழியில்லாம ஹாஸ்டலுக்கு போன் செஞ்சு என் க்ளாஸ் மேட் கண்மணிகிட்டே கெஞ்சி கூத்தாடி “எப்படியாவது எனக்கு நாளைக்கு ஒரு dress வேணும். எனக்கு பொருந்துறமாதிரி என் சைஸ்ல இருக்கும் யார் கிட்டேயிருந்தாவது ஒரு dress ரெடி செஞ்சு கொண்டு வா… ப்ளீஸ்!” ன்னு சொல்லி, என் பாரத்தை அவ தலையில போட்டுட்டேன்.
அடுத்தநாள் கண்மணி கோவமா வந்து ஒரு pack ஐ கொண்டுவந்து தந்தா. கண்மணி தந்த அந்த pack ல ஒரு கருப்பு மிடி, ரோசாப்பு நிறத்தில பூக்கள் போட்ட top, ஒரு lipstic, கொஞ்சம் மல்லிகைப்பூ. இத்தனையும் இருந்தது. கோவத்துல கொண்டுவந்திருந்தாலும் பூ, லிப்ஸ்டிக் னு தேவையான விஷயங்களையும் நான் கேக்காமலேயே கொண்டுவந்திருந்தா.
“யார் கிட்டேயிருந்து வாங்கியாந்தே?” ன்னு கண்மணிகிட்டே கேட்டேன். அவ கோவம் இன்னும் ஜாஸ்தி ஆச்சு.
“நான் யார் கிட்டே போய் கேக்குறது? அதும் நீங்க அவ்வளோ லேட்டா கூப்பிட்டு சொல்லறீங்க. நான் போய் ஒவ்வொருத்தர் ரூமையா தட்டி கேக்கவா முடியும்? இந்த டெரெஸ் தான் என் கிட்டே இருந்தது…” ன்னு கண்மணி சொன்னதும்.
“இது உன்னோடதா?” ன்னு நான் கேக்க, கண்மணி “ஆமா” ன்னு சொல்ல, எனக்கு கிட்டத்தட்ட தலை சுத்திப்போச்சு. என் உயரம் அவ உயரத்தவிட
கால் மடங்கும், என் அகலம் அவளை விட ஒன்னேமுக்கால் மடங்கும் அதிகம். எனக்கு எப்படி கண்மணியோட
டிரெஸ் சேரும்? போச்சு, எல்லாம் சொதப்பலாயிடுச்சு. பெண் வேஷம் போட முடியாது!
பெண் கதாபாத்திரத்த வச்சுதான் ஒவ்வொரு sequence ஐயும் உருவாக்கியிருந்தோம். Highlight டே “லிப் லாக்” கிஸ்ஸிங்
sequence தான். இதை எப்படி பெண்
வேஷம் கட்டாம பண்ணுறது?
சரி, ஆகறது ஆகட்டும்னு அந்த pack ல இருந்த டிரெஸ்ஸை எடுத்து போட்டேன். நல்லவேளை, நான் பயந்தது போல ஆகல, கொஞ்சம் tight ஆ இருந்துச்சு அவ்வளவுதான், ஆனா, tight ஆ இருந்ததே கவர்ச்சியாவும் ஆயிடுச்சு!
மேக்கப் போடும்போது லிப்ஸ்டிக்கை எடுத்த மகேந்திரன் “மச்சி லிப்ஸ்டிக் பச்சைக்கலர்ல இருக்டா..!” ன்னு சொல்லி அலறினான். அது லிப்ஸ்டிக் தானா இல்ல வேற ஏதாவதான்னு நாங்க டோட்டலா குழம்பிப்போயிட்டோம். ஒரு சந்தேகத்தோடதான் அதை பூசிப்பாத்தோம்,
நல்லவேளையா செகப்பாதான் பூசுச்சு. நிம்மதி பெருமூச்சு விட்டோம். நான் பெருமூச்சு விடாம கவனமா இருந்திட்டேன். ஏன்னா, நான் போட்டிருக்கும் ட்ரெஸ் அத்தனை tight. இழுத்து பெருமூச்சு விட்டா சட்டை பட்டன் தெறிச்சுப் போய் விழும்!
ஒருநாள் கூத்துக்கு மீசை மழிச்சுட்டான்னு பேர் வந்திடக் கூடாதுங்கறதுக்காக மீசைய மழிக்கல. மீச மேல யாருக்கும் கவனம் போகவுமில்ல. அந்த அளவுக்கு colorful ஆ எடுப்பா இருந்தது அந்த டிரெஸ். பெண் வேஷம் போட்டு மேடைக்கு வரும் வழியிலேயே பல பாராட்டுக்கள் கெடச்சது. வேஷம் ஹிட் ஆயிடுச்சு.
எங்களுக்கு முன்னதா டான்ஸ் ஆடின UG பொண்ணுங்க, என் பெண் வேஷத்தைப் பாத்து பாராட்டி எனக்கு அவங்க டான்ஸுக்கு யூஸ் பண்ணிண மாலை, வளையல், காதுக்கு (pressing type) கம்மல் னு கொஞ்சம் jewells தந்து என்னை பெண்ணா இன்னும் கொஞ்சம் அழகா ஆக்கினாங்க.
எங்க ஆட்டம் ஆரம்பமாச்சு….!
“நினைவோ ஒரு பறவை” பாட்டுக்கு நானும், செந்திலும் slow motion –ல ஓடிவரும்போதே கரகோஷமும் விசில் சத்தமும் பறக்க ஆரம்பிச்சுட்டது. “பாக்காதே பாக்காதே” பாட்டுல பிரகாசமும் மத்த நண்பர்களும் என் கிட்டே
சில்மிஷம் செய்ய, செந்திலும், சுரேஷும் குறுக்க நெடுக்க நடக்க, ஒரே சிரிப்பு சத்தம். பிரகாசம், T-shirt போட்டு, அதக்குமேல Shirt ஐ பட்டன் போடாமல் மாட்டிக்கிட்டு, கண்ணுல கூலிங்கிளாஸ் சகிதம் பாக்குறதுக்கு அத்தனை handsome and stylish ஆ ரோமியோ போல இருந்தான். அதுவும், உதட்டை கடிச்சுகிட்டு என்னை இடுப்புல கிள்ளுறதும், என்னை என் back ல தட்டுறதுமா என் கிட்டே செஞ்ச சில்மிஷங்கள் எல்லாம் பெண்கள் மத்தியிலே பெரும் ரசனையையும் வரவேற்பினையும் அடஞ்சது!
Then came Swaminathan. சட்டை போடாத ‘கொழு கொழு’ போலி முனிவரா, காவி, கமண்டலம் னு மேடை ஏற, நான் மேனகையா முனிவரை அங்கே இங்கே உரசி மயக்க, முனிவரின் கமண்டலம் தெறிச்சுப் போய் விழ, ஒரு கண்ணை மட்டும் திறந்து ரகசியமா முனிவர் மேனகைய பாக்க வேண்டிய இடத்துல, ஒரு கண்ணை மட்டும் திறந்து உடம்பை ஒரு குலுக்கு குலுக்கி முனிவர் சுவாமிநாதன் பார்த்த பார்வையில் அத்தனை சபலம்…! கைத்தட்டல் ஓசைல அத்தனை பலம்!
முன்னமே சொன்ன மாதிரி “ஓம் நமஹ..” பாட்டுக்கான lip lock kissing sequence தான் இந்த டான்ஸோட Highlight டே!
செந்தில் ஹீரோ, நான் ஹீரோயின், சுரேஷ் எங்களை சுத்திவரும் கேமரா! சுரேஷை கேமரான்னு
காட்ட அவன் சினிமா டைரக்டர்ஸ் கையால ஆங்கிள் பாக்குற மாதிரி கையை வச்சிருப்பான். நானும் செந்திலும் லிப் கிஸ் கொடுக்கறதைப் போல போஸ் கொடுக்கும்போது, கேமரா எங்களை சுத்தி வருதுன்னு காட்ட அவனை ரெண்டு பேர் தூக்கிட்டு எங்களை சுத்தி வரணும். சுரேஷ் கேமராவா இருந்தாலும் இந்த கிஸ்ஸை பாத்து கொந்தளிக்கறது மாதிரி ஒரு எக்ஸ்பிரஷன் கொடுத்தான் பாருங்க…, The crowd went
crazy!!! கரகோஷமும், விசில் சத்தமும் பந்தலைக் கிழிச்சு காயப்போட்டுடிச்சு.
இதுக்கப்புறம் நான் மட்டும் solo வா ஆடும் ஒரு சல்லாப நடனம். நம்மவர் படத்துல ஒரு பாட்டுக்கு இடையில வரும் படுகா டான்ஸ் மீயூசிக்குக்கு, இடுப்பை வளச்சு கிட்டத்தட்ட ‘சில்க்’ போல நான் ஆட அதை crowd எந்த அளவுக்கு ரசிச்சு கைதட்டுதோ அந்த அளவுக்கு கை தட்டி இரசிச்சு சிரிக்கறாங்க முன் வரிசைல உக்காந்திருந்த எங்க பிரின்ஸிபால், கரஸ்பான்டன்ட், Chief guests and
all the staff members!
எங்க டான்ஸ் முடிஞ்சதுக்கு அப்புறமும் கைதட்டல் ஓசை
நிக்கல. ஆடி முடிச்சு மேடையிலயிருந்து இறங்கினதும் மொதோ ஆளா வந்து பாராட்டினா பிரபாவதி.
“கலக்கிட்டீங்க…. பிரமாதமா பண்ணிட்டீங்க…. ரொம்பவே நல்லா இருந்தது…. Congrats” ன்னு சொல்லுறா. அவ கிட்டே சவால்ல ஜெயிச்ச பெருமையெல்லாம் இல்லை! எங்களுக்கு முதல் தடவையா இவ்வளவு பிரம்மாண்டமா கிடைச்சிட்டிருக்கற கைதட்டல் ஓசய நாங்க ரசிச்சிட்டிருந்தோம்.
“Thanks பிரபா…. நீ மட்டும் அன்னைக்கு challenge பண்ணலைனா இது இப்படி நடந்திருக்காது. So, இந்த சக்ஸஸ் ல உனக்கும் பங்கு உண்டு” ன்னு சொல்லி அவளுக்கு நன்றி சொன்னேன்.
The program was a HUGE HUGE HUGE hit!!. Vice Principal மதியழகன் சார் பிரத்யேகமா பாராட்டினார். “என்னோட அடுத்த க்ளாஸ்ல I am going talk about this program for half an hour” என்றார். அரவாண்டி சார் எங்களை கூப்பிட்டு பாராட்டு மழை பொழிஞ்சார். இன்னும் பல ஆசிரியர்களும் பாராட்டினாங்க.
எங்க Correspondent என்கிட்டே, “டான்ஸ் ரொம்ப நல்லா இருந்தது ஆனா கொஞ்சம் லூஸான டிரெஸ் போட்டிருக்கக்கூடாதா? இப்படி ‘சிக்’ குன்னு போட்டிருக்கியே…” ன்னு கேக்க அதக்கேட்டு chief guests எல்லாரும் சிரிக்க உண்மையிலேயே ஒரு பெண்ணுக்கு உண்டாகும் வெக்கத்த என்னால அப்போ உணர முடிஞ்சது.
College day – வோட மூணாவது நாள் நிகழ்ச்சிகள் பொதுமக்களுக்காக நடக்கும். இந்த நிகழ்ச்சில எங்க dance program ஐ ஊர் மக்களுக்காக திரும்பவும் அரங்கேத்தச் சொன்னாங்க. இன்னும் கொஞ்சம் improvise செஞ்சோம். இந்த தடவ என்னோட சேர்ந்து மணிமாறனும் பெண் வேஷம் போட, எனக்கும் மணிக்கும் ஒரு போட்டி நடனம் கூட இருந்துச்சு. ஊர் மக்களும் எங்க ஆட்டத்தை கொண்டாடினாங்க. எங்க டான்ஸ் ஆரம்பிச்சதும் ஆரம்பமான சிரிப்பு சத்தம் முடியறவரைக்கும் அடங்கல.
ஊர் மக்களிடையே பிரபலம் ஆனோம். அவங்களுக்கு அடையாளம் தெரியும் நபர்களானோம். நாங்க மட்டுமா? ‘ஓரம்போ’ பாட்டுக்கு மேடையேறின “N. பாலமுருகன்” னின் சைக்கிள் கூட பிரபலம் ஆயிட்டது. வழக்கமா நாங்க டீ குடிக்கும் பெட்டிக்கடை ஆச்சி, பெண் வேஷம் கட்டின எனக்கு கண் பட்டிருக்கும் னு எனக்கு திருஷ்டி சுத்திப் போட்டது என்னை ரொம்பவும் நெகிழ வச்சிடுச்சு. கிராமத்து சுத்தமான் அன்பு அது!
மொத்தத்துல கலக்கிட்டோம். காலேஜ் மொத்தமும் M.C.A 2nd year பத்திதான் பேச்சு. மொட்டைக் கடிதாசி மேட்டர், அதனால லெக்சரருக்கு எங்க
க்ளாஸ் மேல இருந்த கோவம் இதெல்லாம் அதுக்கப்புறம் காணாம போயிட்டது. எங்களுக்கு ஒரு தனி மதிப்பு இருந்தது. ஜூனியர்ஸ் எங்களை ஹீரோவா பாத்தாங்க… சிலர் என்னை ஹீரோயினாவும்
பாத்தாங்க!
இப்படி எங்க க்ளாஸ பிடிச்சிருந்த தோஷம் விலகி சந்தோஷம் மட்டும் நிலையாச்சுது.
ச
ந்தோஷமான, இந்த நிகழ்ச்சிகளை
சொல்லறப்போ, ஒரு சோகத்தையும் நான் சொல்லியாகணும்.
எங்க நண்பன் “அருள்மொழி”!
அதிகம் பேச மாட்டான். தானுண்டு தன் வேலையுண்டுன்னு இருப்பான். அவன் பேசற சொற்ப ஆட்கள்ல நானும் ஒருத்தன்.
ஒரு நாள் உடம்புல ஏகப்பட்ட காயத்தோடு வந்தவன். “பஸ்லருந்து விழுந்துட்டேன்” னு சொன்னான். “எப்படிடா விழுந்தே?” ன்னு கேட்டதுக்கு, “படில தொங்கிட்டு வந்தேன் காத்துல தொப்பி பறந்துச்சு, ரெண்டு கையாலயும் தொப்பிய பிடிக்கப்போனேன் விழுந்திட்டேன்”
ன்னு
சொல்லி
எங்களின் கேலிக்கு ஆளானான்.
நாங்க எல்லோருமே தனியா ரூம் எடுத்து தங்கியிருக்க, அவன் மட்டும் ஹாஸ்டல்ல தங்கியிருந்தான். அதனால, மதிய சாப்பாட்டுக்கு
ஹாஸ்டலுக்கு போயிட்டு வரணும். ஹாஸ்டல் பஸ் ஒரு மணிக்கு கிளம்பும். எங்க MCA Class 1.30 க்குதான் முடியும். அதனால அவனுக்கு ஒரு மணிக்கே போறதுக்கு special permission கொடுதிருந்தாங்க.
அதனால, ஒரு மணி ஆனா, டாண் னு எந்திரிச்சு
நின்னுடுவான். சில நாட்கள்ல, லெக்சரர் அர்த்த சிரத்தையா க்ளாஸ் எடுத்திட்டிருக்கும்போது இவன் எந்திரிச்சு நிக்க, இவன் சந்தேகம் கேக்கதான் எந்திருச்சு நிக்கறான்னு அவங்க தப்பா நெனைச்சுட்டு “என்ன சந்தேகம்” னு அவங்க கேக்க, “சாப்பிட போணும் பஸ்ஸுக்கு நேரமாச்சு” ன்னு இவன் சொல்ல க்ளாசே சிரிக்கும். ஆனாலும் அவன் அதப்பத்தியெல்லாம் கண்டுக்கறதே இல்லை.
இவன், ஏதோ காரணத்திற்காக
தன் உயிரை தானே மாச்சுகிட்டான். இது பெரும் சோகம். “நம்ம காலேஜ் காலத்து சந்தோஷமான நிகழ்ச்சிகள நெனச்சுப்பாக்கும்போது உன் மறைவையும் நெனச்சுப் பாக்கறோம் நண்பா. உன் ஆன்மா சாந்தியடையட்டும்!”
இந்தப் பதிவு உனக்கு சமர்ப்பணம்!
====================================================================
சில்வண்டின்.... நெஞ்சாங்கூட்டில்
ஆகஸ்ட் 20, 2015
===========================================================================================
Comments
Good attempt.Continue