பதினாற்றுச்சோலையின் குறிஞ்சிப்பூ!

ந்ததிலிருந்து தேடிக்கொண்டிருக்கிறேன். அவளைக்காணவில்லை. அக்காவிடம் கேட்கவும் தயக்கமாக இருந்தது. அவள் சைக்கிள் இருக்கிறதா எனப்பார்த்து அவள் வந்திருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம் என நினைத்து வெளியே வந்திடக் கதவு திறந்தால் என் எதிரே தரிசனம் தந்து நிற்கிறாள் சிவரஞ்சனி.

அன்றுதான் முதன் முதலாய் அவளைப் பார்ப்பதுபோல் எனக்குள் ஒரு ஜில்! பொங்கல் புத்தாடையாய் பட்டுப்பாவாடை சட்டை அணிந்து அன்று அவள் நின்றிருந்த கோலம் இன்றுவரை என் நினைவில் பளிச்!

எப்போதும் இவள் அழகுதான் என்றாலும் இன்றைக்கு ஒரு பிரத்யேக அழகோடு காட்சி தருகிறாள். ஏதேது? அழகிடமிருந்து பொங்கல் போனஸ் ஏதும் பெற்றாளோ!? அவளது அழகில் மிளிர்கிறது பண்டிகைப்பொலிவு!

அடர் நீலத்தில் பட்டுப்பாவாடை, ஆகாய நீலத்தில் பட்டுச்சட்டை, கை நிறைய கண்ணாடி வளையல், தலையாட்டிப்பேசும் அவள் இயல்புக்கு ஈடுகொடுத்து தனித்தாடும் புது ஜுமிக்கி, ஒளிக்கீற்றை உள்வாங்கி மின்னல்கீற்றாய் எதிரொளிக்கும் ஒற்றைக்கல் மூக்குத்தி, தலை நிறைய அவள் சூடியிருக்கும் மல்லிகைப்பூ! என அவள் அணிந்திருந்த அனைத்தும் அவளால் அழகு பெற்றுக்கொண்டிருந்தது.

என் சுவாசத்தில் அவள் வாசத்தின் ஸ்பரிசங்கள்! கண்கொட்டாமல் அவளையே பார்த்துச் சிலையாய் நின்றிருந்த என்னைப் பார்த்து சிரிக்கிறாள் சிவரஞ்சனி! என்ன காரணம் என்றறியேன், என் கண்களில் கொஞ்சம் நீர் திரண்டது. அவள் கவனிக்கும் முன்பே, அவள் கவனிக்காத விதம், கவனமாகக் கண்ணீர் துடைத்தேன்!

"பொங்கல் எடுத்துக்கோங்கோ!"

-- என் முன்னே அவள் நீட்டிய பாத்திரத்தில் சக்கரைப்பொங்கல்!

"நானே செய்தது. சாப்பிட்டு நன்னாயிருக்கான்னு சொல்லுங்கோ !"

-- அந்தப் பொங்கலில் மட்டுமல்ல, சக்கரை, அவள் குரலிலும் கலந்தேதான் இருந்தது. எத்தனை நாள் ஆயிற்று அவளின் குரல் கேட்டு? கை நீட்டினேன், கொஞ்சம் பொங்கல் எடுத்து என் உள்ளங்கையில் இட்டாள். உண்டேன்!

அவளின் குரல் ஏற்கெனவே செவிப்புகுந்து என் மனம் முழுதினையும் இனிக்கச் செய்திட்டதாலோ ஏனோ? அவள் தந்த சக்கரைப்பொங்கல் அப்படியொன்றும் இனித்திடவில்லை எனக்கு.

"எப்படி இருக்கேள்?" -- கேட்டாள்

"நல்லாயிருக்கேன்! நீங்க?"

-- 'நீ ' என்று ஒருமையில் தான் அவளை அழைத்திருந்தேன். ஆனால் இன்று அவளோடு ஒருமையில் பேசிட இயலவில்லை. சந்திக்க இயலாத நீண்ட நாட்கள் எங்களுக்குள் உண்டாக்கியிருந்த இடைவெளியோ?!

"நன்னாயிருக்கேன்!" -- 'நீ ' என விளிக்காமல் 'நீங்க' என விளித்ததற்காக அவள் கோபித்துக் கொள்ளவுமில்லை, சண்டைக்கும் வரவில்லை. நிச்சியமாக இது, சந்திக்க இயலாத நீண்ட நாட்கள் எங்களுக்குள் உண்டாக்கியிருந்த இடைவெளியேதான்.

"சாப்பிடுங்கோ நான் எல்லாருக்கும் கொடுத்திட்டு அக்காவ பாத்திட்டு வந்திடறேன்."

-- எனக்கூறி ரஞ்சனி டியூஷன் அறைக்குள் சென்றாள். நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

இதோ, இதே அறையில், இதே இடத்தில் தான் அவளை நான் முதன்முதலாய்ச் சந்தித்தேன். அகன்ற விழி இன்னும் அகலமாய் விரிய அதிர்ந்து நின்ற கோலத்தில் அன்று அவள் நின்றிருந்தது இன்றும் என் கண்களிலேயே அழியாது நிலை கொண்டுள்ளது!

~~~ 0 ~~~

டைந்து போன ஒரு பழைய அழுக்கு கூடையின் ஒரு பக்கத்து மரக்கட்டையைப் பெயர்த்து எடுத்து கிரிக்கெட் விளையாட ஒரு மட்டை தயார் செய்திருந்தேன். வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் நாடார் அண்ணாச்சி கடையில் ஒரு ரூபாய்க்கு சின்ன ரப்பர் பந்து கிடைக்கும். பந்தினைச் சுவரில் எறிந்து, சுவரில் பட்டு திரும்ப வரும் பந்தை மட்டையால் அடித்து, அடித்த பந்து சென்று படும் இடத்திற்கேற்ப 'ரன்' நிர்ணயித்து வீட்டுக்குள் கிரிக்கெட் விளையாடுவேன். லீவு நாட்கள் என்றால் நான் ஒத்தை ஆளாக ஒரு டூர்ணமெண்டே நடத்திவிடுவேன்!

விளையாடுகையில் உணர்ச்சிவசப்பட்டு ஓங்கி அடிக்கும் சில பந்துகளுக்கு 'டைனிங் டேபிள்' மீது இருக்கும் கண்ணாடிக் குவளைகள், ஊறுகாய் ஜாடி, பூ ஜாடி, என சில பொருட்கள் அவ்வப்போது இரையாகிவிடுவதால் அம்மாவின் கைவிரல்கள் என் முதுகில் பதிவது வாடிக்கையாகிப்போனது. ‘வீட்டுக்குள் விளையாடாதேடா' என சொல்லியும் அடித்தும் ஏதும் பிரயோஜனம் இருக்கவில்லை என்பதால், என் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த நினைத்த அம்மா அதன் பிறகு எனக்கு பந்து வாங்க காசு தருவதை நிறுத்திவிட்டாள்.

Necessity is the mother of all inventions அல்லவா? நானும் கண்டுபிடித்தேன் ரப்பர் பந்துக்குப் பதிலாக, எனக்கு விளையாட உதவக்கூடிய, மற்றொரு மாற்றுப் பந்தினை.

நாங்கள் வசித்திருந்தது ஒரு வாடகை வீட்டின் மாடி போர்ஷன். மாடியில் சமையல் அறையை ஒட்டி டைனிங் அறையும், டைனிங் அறையில் உள்ள கதவு திறந்தால் மொட்டைமாடி போன்ற திறந்தவெளி ஒன்றும் இருக்கும். இந்த திறந்தவெளியினைக் கடந்து தான் குளியலறைக்குச் செல்லவேண்டும். குளியலறைக்கும், டைனிங் அறைக்கும் இடைப்பட்ட இந்த திறந்தவெளிதான் என் விளையாட்டு மைதானம்.

பந்து வாங்கக் காசு தர அம்மா மறுக்க, விளையாடப் பந்து இல்லாமல் பரிதாபமாக நான் அந்த மொட்டை மாடியின் சுவரில் சாய்ந்து சோகமே உருவாக அமர்ந்திருந்தேன். அப்போதுதான் வீட்டை ஒட்டி நிற்கும் கொய்யா மரம் எனக்கு ஞானம் அருளியது.

அந்த மாடியின் மடியில் எப்போதும் உரசிக்கொண்டிருக்கும் கொய்யாமரத்துப் பிஞ்சுக் காய்கள் என் ஞானக்கண்ணுக்குப் பந்தாகத்தெரிய "யுரேகா... யுரேகா" என கூவிக்கொண்டே நிர்வாணமாய் ஓடாதக் குறையாகக் கண்டுபிடித்தேன் பந்திற்கான மாற்றுப்பொருளை.

மரத்திலிருந்து உதிர்ந்து வெயிலில் உலர்ந்து கடினமாகியிருக்கும் கொய்யாக்காய்களைச் சுவற்றில் எறிந்தால் அது தரையில் பட்டு பந்து போல எம்பி எழும். ரப்பர் பந்து போல சீரான புற பரப்பு இல்லாத காரணத்தால், சுவற்றில் பட்டு திரும்ப வரும் ‘கொய்யாப்பந்து’ தரையில் பட்டு எந்தப்பக்கம் spin ஆகும் என்பதைக் கணிக்க முடியாது. கணிக்க இயலாதவாறு பந்து எழும்பி வருவது ஆட்டத்தின் சுவராஸ்யத்தைக் கூட்டியது.

கொய்யாப்பந்துகள் உடைந்துபோனாலோ, அல்லது பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் விழுந்து தொலைந்து விட்டாலோ இன்னொரு காய் உதிர்ந்து உலரும் வரையில் காத்திருக்க முடியுமா என்ன? ஆதலால், பச்சைக் காயையே சுவற்றில் எறிந்து விளையாட ஆரம்பித்தேன். இதனால் சுவரெல்லாம் பச்சை நிறக் கறை படிந்து போனது. இதைப்பார்த்த அம்மா கண்சிவந்தாள்.

"இவன் வயசுப் பயல்கள் எல்லாம் வெளியில் போய் விளையாடிட இவன் வீட்டுக்குள்ளேயே அடஞ்சு கிடக்கிறான். வீட்டுக்குள்ளே இவன் பண்ணும் அநியாயம் தாங்க முடியலே!"

-- என அப்பாவிடம் புகாரும் செய்து, கறை படிந்த சுவரின் கோலத்தையும் அப்பாவுக்குக் காட்டிக்கொடுத்தாள் அம்மா.

வீட்டுக்குள் என் தொல்லையைக் குறைக்கும் நோக்கத்தில், என்னை மாலை நேரங்களில், ஹிந்தி பயில, ஹிந்தி டியூஷனில் சேர்த்துவிடலாம் என்று அப்பாவும் அம்மாவும் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றினார்கள். இப்படியாகத்தான் நானும் போய்ச்சேர்ந்தேன் ஹிந்தி டியூஷனுக்கு, ஹிந்தி படிக்க!

~~~ 0 ~~~

நான் டியூஷன் சேர்ந்த சமயத்தில், டியூஷனில் படித்துக்கொண்டிருந்த பிள்ளைகள் எல்லோரும் இன்னும் ஒரு மாதத்தில் வரப்போகும் பரீட்சைக்குத் தயாராகிக்கொண்டிருந்ததால், அவர்களோடு சேர்த்து எனக்குக் கிளாஸ் எடுக்க இயலாது எனவும், ஆகையினால், அவர்களுக்குப் பரீட்சை முடியும் வரை எனக்கு ரெகுலர் டியூஷன் முடிந்த பிறகு தனியாக கிளாஸ் எடுப்பதாகவும் கூறியிருந்தார் அக்கா.

அக்கா - எனக்கு டியூஷன் எடுக்கும் ஹிந்தி டீச்சர்.

அக்காவின் வீடுதான் எங்கள் டியூஷன் செண்டர். பங்களா போன்ற பெரிய வீடு அது. பின்புறம் அழகான தோட்டமும் தோட்டத்தை ஒட்டி ஒரு பெரிய வராந்தாவும் வராந்தாவை ஒட்டி ஒரு பெரிய அறையும் உண்டு. இந்த அறைதான் எங்களின் டியூஷன் வகுப்பு. எனக்குத் தனியாக டியூஷன் என்பதால் நான் டியூஷனுக்குச் செல்லும் நேரங்களில் பொதுவாக வகுப்பறையில் வேறு பிள்ளைகள் யாரும் இருப்பதில்லை. ஆனால், அன்றைய தினம் நான் அறைக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்தால், அறைக்குள் ஒரு பெண், அதும் அழகான ஒரு பெண்னொருத்தி அமர்ந்திருக்கிறாள்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தவள் உள்ளே நான் நுழைவதைக் கண்டதும் அதிர்ச்சியடைந்து தடாலென எழுந்து நின்றாள். அப்படி அவள் எழுந்திருக்கையில், அவள் கையிலிருந்த பேனா நழுவிக் கீழே விழுந்தது. அவள் என்னைப் பார்க்க, நான் அவளைப் பார்க்க, என்ன பேசுவது எனத் தெரியாமல் இருவரும் திண்டாடி நின்றிருந்தோம்.

அவளைக் கண்டதிர்ந்து நின்ற நிலையிலிருந்து வெளியேற நான் பெரும் போராட்டமே நடத்திக்கொண்டிருக்க எனக்கு முன்பே சுதாகரித்து இயல்பு நிலைக்கு வந்தவளாய் அவள் என்னிடம் கேட்டாள்,

"நீங்க... நீங்கதான் அந்த புதுப்பையனா?"

"ஆமாம்" என்று தலையாட்டினேன். டியூஷனுக்குப் புதிதாய்ச்சேர்ந்த பையனா என்றுதான் அவள் கேட்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டேன். நான் புதுப்பையன் என்று இவளுக்கு எப்படித்தெரியும்? அக்கா சொல்லியிருப்பாரோ? அக்கா எங்கே? அங்கே அக்காவைக் காணவில்லை! ஆதலால் அவளிடம் கேட்டேன்,

"அக்கா எங்கே?"

"உள்ளே ஆத்துல இருக்கா! யாரோ விசிட்டர்ஸ் வந்திருக்காங்களாம், இப்ப வந்திடுவாங்க..." என்று கூறி கை நழுவிய பேனாவை எடுத்து பென்சில்பாக்ஸில் வைத்து அவள் இடத்தில் அமர்ந்தாள்.

அவள் பேச்சுநடையில் ஐயர் வாசனை. நானும், நான் வழக்கமாய் அமரும் இடம் சென்று என் புத்தகத்தையும், நோட்டினையும் வைத்தேன். என் ஓரக்கண் அவளை அவளறியாமல் நோட்டமிட்டது!

அவள் அணிந்திருந்த பள்ளிச்சீருடை அவள் கான்வெண்டில் படிக்கும் பெண் என்பதைப் பறைசாற்றிக்கொண்டிருந்தது. இவள் பேச்சு மென்மை! இவள் வார்த்தைகளை உச்சரிக்கும் விதம் கேட்பதற்குப் பெரும் சுகம். நிலவு இவள் முகம். அடடே! இதுவென்ன? நிலவுக்குப் பொட்டாக மூன்றாம் பிறையா? அவள் முன்நெற்றியில் பிறை வடிவில் நெற்றிப்பொட்டு! முதல் பார்வையிலேயே என்னைத்தாக்கி நிலைகுலைய வைத்த ஆயுதங்கள், அவளின் கண்கள்!

கயல் விழி அல்ல, கயல் வாழும் கடல் விழி என்னைக் களவாடும் இவள் விழி!

அவளைப் பார்த்த படபடப்பு எனக்குள் இன்னும் அடங்காது இருக்க, என்னை பார்த்த பரபரப்பின் சுவடே இல்லாமல் அவள் நோட்டுப்புத்தகம் எடுத்து ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறாள்.

வேறு என்னதான் அவளும் செய்வாள் பாவம்? புதியவன் என்னோடு பேசத்தான் என்ன இருக்கிறது? பூ அன்றோ அவள்? நான் இங்கே இருப்பதாலேயே அவள் மிரண்டுபோகச் சாத்தியக்கூறுகளும் உண்டன்றோ? சுவரோடு சுவராய் ஒட்டி அமர்ந்து தலை தாழ்த்தி அவள் எழுதிக்கொண்டிருக்கும் கோலத்தில் அவள் மழையில் நனைந்த சிட்டுக்குருவி போல எனக்குக் காட்சி தருகிறாள்.

“சிட்டுக்குருவியே பயக்காதே, நானொன்றும் வேடன் அல்ல. புள்ளிமானே மிரளாதே உன் விழி போன்ற அம்பொன்றும் என்னிடமில்லை.”

இங்கேயே நான் நின்று அவளுக்கு மேலும் சங்கோஜம் கொடுக்க வேண்டாம் எனத்தீர்மானித்து அக்கா வரும் வரை அறைக்கு வெளியில் நிற்கலாம் என்று முடிவு செய்து வெளியே போக எத்தனிக்கையில்,

"எங்கே போறேள்? உக்காருங்கோ! அக்கா இப்ப வந்திடுவாங்க" என்கிறாள் சிட்டுக்குருவி.

"இல்லை! பரவாயில்லை. அக்கா வந்ததும் சொல்லுங்கள் அதுவரை நான் வெளியிலே நிற்கிறேன்!"

"அக்கா இப்போ வந்திடுவாங்க! நீங்க உக்காருங்க" டியூஷனுக்கு அவள் பழைய மாணவி அல்லது பழகிய மாணவி ஆதலால், புதிய மாணவனான என்னை உரிமையாய் இப்படி உபசரிக்கிறாள் போலும்! அங்கேயே அமர்ந்து அவள் அழகை கள்ளத்தனமாய் இரசித்திருக்க எனக்கும் ஆசைதான் ஆயினும் தீர்மானத்தில் உறுதியானவனாய்,

"இருக்கட்டும்! பரவாயில்லை. அக்கா வந்தபின் வருகிறேன்!" என்று கூறி வெளியே செல்லும் கதவு நோக்கி முன்னேறினால்,

"அட, அதான் அக்கா இப்போ வந்திடுவாங்கன்னு சொல்றேனே? அதைக்கேட்காம எதுக்கு இப்படி அடம் பிடிக்கறேள் வெளியே போகனும்னு? பேசாமல் உட்காருங்க!" என்கிறாள் சற்றே உயர்ந்த குரலில்.

கட்டளையும் கண்டிப்பும் கலந்து அவள் இப்படிக் கூறிட, அதைக்கேட்ட நான், அவள் கேட்ட தொனியை நம்ப இயலாதவனாக அங்கேயே வாயடைத்து நிலைகுத்தி நின்றேன். பேசியது அவள்தானா? இல்லை வேறு யாராவதா? என உண்மையிலேயே அந்த அறையை ஒருமுறை நோட்டம் விட்டேன்.

மிரண்டு நிற்கும் என்னைப் பார்த்து சிரிக்கிறாள் அவள். ஏதேது? மழையில் நனைந்த சிட்டுக்குருவியாக இப்போது நான் தெரிகின்றேனோ அவள் கண்களுக்கு?

என் நிலை கண்டு ரசிக்கிறாள் அவள்! "நான் உங்களை ஏதும் செய்திடமாட்டேன் பயப்படாதீர்கள்!" என்று கூறி மேலும் சிரிக்கிறாள். அடங்கவில்லை சிரிப்பு அவளுக்கு,

கன நேரத்திற்க்கு முன் நான் இவளைப்பற்றி கணித்ததென்ன இப்போது நான் காண்பது தான் என்ன?

அவள், பயம் கொள்ளும் பதுமை. நான் இருப்பதால் நாணம் கொள்ளும் அழகி, அறிமுகமில்லாத ஆடவன் ஒருவனின் அருகாமையால் சங்கோஜம் கொள்ளூம் பணிவான பெண்மகள், என்றெல்லாம் இவளைப்பற்றி எனக்கு நானே சமர்பித்த முதல் தகவல் அறிக்கையை நானே டார்ஸ டாரென கிழித்துக்கொண்டிருந்தேன்.

அக்கா வந்தார்!

"வாப்பா ரொம்ப நேரம் ஆச்சா வந்து? ஏன் நிக்கிறே உக்காரவேண்டியதுதானே?"

-- என அக்கா என்னிடம் கேட்டதற்கு,

"இப்பத்தான் அஞ்சு நிமிஷம் முன்னாடி வந்தார்! நீங்க இல்லைன்னதும் வெளியே ஓடப்பார்த்தார், அதுக்குள்ளே நீங்க வந்திட்டீங்க, மாட்டிண்டுட்டார்" என்று அவள் என்னைப் பார்த்துக்கொண்டே அக்காவுக்கு பதில் தருகிறாள்.

"........" --அடிப்பாவி! இவளா மழையில் நனைந்த சிட்டுக்குருவி? என் புரிந்துகொள்ளும் திறனை நொந்துகொண்டேன்.

"என்னடீ? அதுக்குள்ளே ஆரம்பிச்சுட்டியா உன் கலாட்டாவை?" என்று அக்கா அவளிடம் கேட்க, அக்கா இப்படி கேட்டதிலிருந்து அவள் ஒரு கலாட்டா பேர்வழி என்பது உறுதியானது. இன்று இவள் பசிக்கு நான் இரையா? அவள் குறும்புச்சிரிப்போடு என்னை அமைதியாய் பார்த்துக்கொண் டிருக்கிறாள்.

"அறிமுகம் செய்துகிட்டீங்களா இல்லையா?" அக்கா கேட்க,

"இல்லை அக்கா! பார்த்துக்கிட்டோம் அவ்வளவுதான். சரியான அறிமுகம் இன்னும் ஆகவில்லை!" என்று அவள் பதில் கொடுத்தாள். பொடிவைத்தார்போல பேசுகிறாளே?

"இவ சிவரஞ்சனி, மத்யமா எழுதப்போறா!" அக்கா அவளை அறிமுகப்படுத்த சம்பிரதாயமாய் நான்,

"ஹலோ..." என்றேன் அவளைப்பார்த்து!

அவள் புன்னகைத்தாள். பிறகு இரு கையும் கூப்பி, "நமஸ்த்தே!!" என்று ஹிந்தியில் வணக்கம் தெரிவித்தவள் தொடர்ந்து, "இது ஹிந்தி டியூஷன் இல்லையா இங்கே ஹிந்தில தான் விஷ் பண்ணனும்" என்று கூற,

நான் நாராய்... நார் நாராராய்ய்க்க் கிழிந்துகொண்டிருந்தேன்! ஆனாலும் அவளின் குறும்பும், குறும்பு பேச்சும் என்னைக் கவர்ந்துதான் இருந்தது.

~~~ 0 ~~~

ஞ்சனிக்கு ஸ்கூலில் ஸ்பெஷல் கிளாஸ் இருப்பதால் அவளால் ரெகுலர் நேரத்திற்கு டியூஷனுக்கு வர முடியாத சூழ்நிலை. ஆகையால்தான் அவளுக்கும் ரெகுலர் டியூஷன் முடிந்த பிறகு தனியாக வகுப்பு எடுக்கிறார் அக்கா. அவள் வகுப்பு என் வகுப்பு ஆரம்பிப்பதற்கு அரைமணி நேரம் முன்பே துவங்கி, என் வகுப்பு முடிவதற்கு அரைமணி நேரம் முன்பே முடிந்தும்விடும். இந்த நேர முரண்பாட்டினால் எங்களுக்குப் பேசிப்பழக சந்தர்ப்பம் அமையாது போனாலும் எங்களுக்குள் ஒரு நெருக்கம் உண்டாகியிருந்ததை என்னால் உணர முடிந்தது.

டியூஷனில் அக்காவுக்கு எதிரே நான் அமர்ந்திருக்க எனக்குப் பின்னால் சுவரில் சாய்ந்து ரஞ்சனி உட்கார்ந்திப்பாள். அக்கா, பாடம் எடுக்கையில் என்னைக் கேட்கும் கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரியவில்லையென்றால் பின்னாலிருந்து இரகசியமாகச் சொல்லித்தருவாள். சில தவறான பதிலை நான் கூறிவிட்டால் 'உச்' கொட்டி சலித்துக்கொள்வாள்.

டியூஷனுக்குள் நான் நுழைந்ததும் முதல் செய்கையாய் அவள் கண்கள் என் கண்களோடு பேசும். என்னை 'வருக' என வரவேற்கும். சிலப்பொழுது 'உன் வருகைக்காய் காத்திருந்தேன்' எனும்! தாமதமாய் நான் வரும் நாட்களில் 'கோவம் உன்மேல் எனக்கு' என்றும் கூடக் கூறிடும். எங்களை விட எங்கள் கண்கள் விரைவாய் நட்பு வளர்த்து நெருக்கம் கொண்டாடியது.

அவள் வகுப்பு முடிந்து கிளம்புகையில் அறையின் கதவருகில் சென்று கதவு திறந்து வெளியே செல்லும் அந்த நொடியில் என்னைப் பார்ப்பாள். நானும், சரியாக அதே நொடியில் கள்ளத்தனமாய் அக்காவுக்குத் தெரியாமல் தலை திருப்பி அவளைப் பார்ப்பேன். அவள், 'வருகிறேன்' என தலையசைத்து, கண்ணிமைத்து விடை வாங்கிச்செல்வாள். அந்த நொடியினை நாங்கள் இருவரும் தவறவிட்டதே இல்லை.

அவள் விழி விடைவாங்க என் விழியோடு நேர்கோட்டில் இணையும் தருணம் இருக்கிறது பாருங்கள், அதுதான் ஹிந்தி டியூஷனுக்கு என்னை தொடர்ந்து செல்லவைத்த கிரியா ஊக்கி!

விழிகளின் விளையாட்டினை ரசித்துக்கொண்டே சில நாட்கள் உருண்டோட ஒருநாள் ஊக்கம் குறைக்கும் செய்தி ஒன்று என்னைக் காத்திருந்தது. ஹிந்தி பரீட்சைகள் நெருங்கிவருவதாலும், தற்போது பரீட்சை எழுதும் மாணவர்களைத் தயார் படுத்த அவர்களோடு அதிக நேரம் செலவிடவேண்டியிருப்பதாலும், நான் இந்த பரீட்சை எழுதப்போவதில்லை என்பதாலும், அக்கா எனக்கு மட்டும் டியூஷனுக்கு லீவு விட்டார்.

பரீட்சை எல்லாம் முடிந்தபிறகு கிட்டத்தட்ட பத்துப்பதினைந்து நாட்கள் கழிந்துதான் இனி டியூஷன் எனக்கு! அதுவரை ரஞ்சனியைப் பார்க்க இயலாது!

~~~ 0 ~~~

ரு தள்ளுவண்டி, அதனருகே மசாலாப்பொறி விற்கும் தொப்பி அணிந்த ஒரு முஸ்லிம் பெரியவர், மசாலா பொறியை சுவைத்துக்கொண்டே சிரித்த முகத்தோடு அரட்டையில் ஆழ்ந்திருக்கும் மூன்று பையன்கள். இந்தக் காட்சியை அப்படியே மனதில் கற்பனை செய்துகொள்ளுங்கள். என் மனதில் ஒரு ஓவியம்போல் பதிந்துபோன இந்தக்காட்சி, என் வாழ்வின் அதிமுக்கியமான நட்பிற்கான சாட்சி!

அந்த மூவரின் ஒருவன் நான், குறும்புச்சிரிப்புடன் என்னை கூர்ந்து பார்த்தவண்ணம் நிற்பவன் என் நண்பன் வினோத். சிங்கப்பல் உள்பட எல்லா பல்லும் வெளியே தெரிய தலையை சற்றே உயர்த்தி வானம் பார்த்து எவரையும் கவர்ந்திடும் சிரிப்பினை உதிர்த்துக்கொண்டு ஒல்லியான உடல்வாகில் வளர்த்தியாய் நின்றுகொண்டிருப்பவன் மற்றொரு நண்பன் பக்ஷிகுலாம்!

நான் செய்யும் கள்ளத்தனத்தைக் கண்டுபிடித்துவிட்டார்களாம். அதனால் தான் இந்தச் சிரிப்பு இவர்கள் முகத்தில் பளீரிடுகின்றது! பொறிக்கடை பாய் பொறியை வறுப்பதுபோல இவர்கள் இருவரும் என்னை வறுத்தெடுத்துக்கொண்டிருந்தார்கள்.

"அப்படியென்றால் அவளை உனக்கு பிடிக்கும் என்று கூறு!"

"பிடிக்கும்... ஆனால் நீங்கள் நினைப்பது போல இல்லை!"

"நாங்கள் என்ன நினைக்கிறோம் என்பது உனக்கெப்படித் தெரியும்?"

"தெரியும்! உங்கள் கேலிச்சிரிப்பில், கிண்டல் பேச்சில் அது எனக்குப் புரியும்!"

"நீயாக செல்லியிருந்தால் பிரச்சினை இல்லை, நாங்களாகத்தானே கண்டுபிடித்தோம்? அதனால் கேலி செய்ய எங்களுக்கு உரிமை உண்டு!"

"........."

"என்ன பேசாதிருக்கிறாய்?"

"ஒன்றும் இல்லை!"

"சரி! கேட்டதற்கு பதில் சொல். அவளை உனக்கு பிடிக்கும் இல்லையா?"

"இல்லை!"

"இல்லையா? இல்லை என்பது உண்மை என்றால் முகம் வாட்டம் கொள்ளக் காரணம் என்ன? டியூஷன் போகாமல் மண்டைகாய்கிறது என்றாயே ஏன்?"

"........" -- பதில் கிடைக்காமல் முழித்துக்கொண்டிருந்தேன் பக்ஷி கையில் மாட்டிய பக்ரீத் ஆடுபோல!

"இருக்கட்டும், புதிய பழக்கமாய் வாக்கிங் போகலாம் என்றாய், ஒவ்வொரு முறையும் உன் டியூஷன் இருக்கும் இந்தப்பக்கமே வாக்கிங் என அழைத்து வந்தாய். உன் டியூஷன் பக்கம் இருக்கும் இந்த பொறி கடையில்தான் பொறி நன்றாக இருக்கும் என இங்கேயே அழைத்து வருகிறாய், நாங்கள் இருவரும் ஏதும் பேசிக்கொண்டிருந்தால் எங்கள் பேச்சில் கலந்துகொள்ளாமல் உன் கண்களை டியூஷன் இருக்கும் பக்கமே அலைபாய விடுகிறாய்!"

".............." -- பாவிப்பயல்கள் எல்லாவற்றையும் கவனித்திருக்கிறார்கள்!

"முக்கியமாய் நீலநிறத்தில் சைக்கிள் என்றால் ஏன் படபடக்கிறாய்?"

-- பக்ஷி எனும் அந்தக் குச்சிப்பயல் அப்பட்டமாய் வெளிப்படையாய்க் கேட்டான்.

"ஒன்றும் இல்லை! இங்கே நல்ல பொறி கிடைக்கும்.. நீங்கள் ரசித்து உண்பீர்கள் என அழைத்துவந்தேன்!" கோவத்தில் உரைப்பதுபோல பதிலுரைத்தேன். இதற்கெல்லாமா மசிவார்கள் என் நண்பர்கள்.

" ரசித்துக்கொண்டுதான் இருக்கிறோம்! பொறியையும், பொறியில் மாட்டிய உன்னையும். மொத்தத்தில் நல்ல காரம்!" என்கிறார்கள் அசராமல்!

இப்படி ஓயாமல் தொடர்ந்தது அவர்களின் கிண்டல்பேச்சு. கவனிக்க மாட்டார்கள் என நினைத்து கை கழுவி வருகிறேன் என்று கூறி தள்ளு வண்டியின் பின்புறம் மறைவாகச்சென்று ரஞ்சனி சைக்கிளில் போவதை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் இவர்களிடம் கையும் களவுமாக அகப்பட்டேன்!

இவர்கள்தான் என்னை ஒருமுறை, நான் மிகவும் ரசிப்பேன் எனக்கூறி ஓர் திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.

வேதம் புதிது!

இந்தத் திரைப்படம் அதுவரை நான் உணர்ந்திராத வினோத பரவசத்தை எனக்குள் உண்டாக்கியது. அடிவயிற்றுக்குள் ஒரு வெற்றிடம் உண்டாகி அது என்னை அதற்குள் இழுப்பதுபோல் ஒரு உணர்வினை நான் உணர்ந்தேன்.

ஐயர் வீட்டுப் பெண்ணாக கதாநாயகி கோவில் கல்மண்டபத்தில் கோலம் போட்டு அறிமுகம் ஆகும் காட்சியில் ஆரம்பித்த இந்த வினோத உணர்வு படம் முழுவதும் எனக்குள் வியாபித்திருந்தது. கதாநாயகியாய் எனக்கு ரஞ்சனி தெரிகிறாள்!

ரஞ்சனியின் முகத்தை பிரதிபலிக்கும் நாயகியை எவனோ ஒருவனோடு ஜோடி சேர்ப்பதாவது? நான் என்னையே என் நாயகியின் நாயகன் ஆக்கினேன். திரையில் நானும் அவளும் கதாபாத்திரம் என்றாக, அவர்களின் உணர்வுக்குள் நான் ஊடுறுவிப் பயணம் செய்தேன்!

பொருத்தம் நமக்குள் இல்லையென்று நீ

நினைத்ததுண்டோ நெஞ்சுக்குள்ள?

-- தவிப்போடு கேட்டேன்!

தாமிரபரணி ஆத்துத்தண்ணி அது ஜாதிபேதம் பார்ப்பதில்ல!

-- அவள் கூறியதில் ஆறுதல் கொண்டேன்!

நீ நினைத்தால் திருநீறு அணிந்திருப்பேன்!

-- உறுதியாகத்தான் கூறினேன்!

நீ தடுத்தால் கோவில் மறந்திருப்பேன்!

-- அவள் கூறக்கேட்டு உருகினேன்!

சில திரைப்படங்கள், சில பாடல்கள், நம் வாழ்வில் நாம் கடந்து வந்த காலத்தின் கால அடையாளம் என்று ஆகிவிடுவதுண்டு. BookIndex போல, அல்லது, Bookmark போல.

சில பாடல்களைக் கேட்கும் போது மனம் அந்த காலகட்டத்துக்கு நம்மை இழுத்துச் செல்லும், அந்த காலங்களில் மனதினைப் பாதித்திருந்த உணர்வுகள் மீண்டும் மனதில் பொங்கி எழுந்து நிரம்பி வழியும். பழைய காட்சிகள் யாவும் மனதில் விரிந்து பரவ கண்கள் மூடி அக்காட்சிகளுக்குள் ஆழ்ந்துபோவது சுகம்.

ரஞ்சனி சம்மந்தமாய் மனதில் வியாபித்திருந்த அன்றைய உணர்வுகளுக்கு, என் கால அடையாளம் ஆனது "வேதம் புதிது" படமும் அதன் பாடல்களும் தான்.

ரஞ்சனியை பார்க்க முடியாத இந்த லீவு நாட்களில் என் மனம் முழுதும் ரஞ்சனியே வியாபித்திருந்தாள். கண் மூடியிருந்தாலும், திறந்திருந்தாலும், இருட்டிய இரவோ, வெளிச்சப்பகலோ எதுவாயினும் உள்ளத்திரையில் தெளிவாய் ரஞ்சனியின் பிம்பமே காட்சியளித்தது. என்னுள்ளும் தவிர்க்க இயலாத சில மாற்றங்கள் உண்டாகியது!

ஐயர் பாஷை பேசத்துவங்கினேன். மடிசார் புடவை தான் அழகென்று வாதம் செய்தேன். மாகாளிவேர் ஊறுகாக்கருகில் மற்றவை நெருங்குமா? சுண்டக்காய் போட்ட வத்தல் குழம்பின் ருசி வேறு எதற்கும் ஈடாகுமா? என்றெல்லாம் புகழ் பாடினேன். மோர்க்குழம்பும் அதில் கிடக்கும் வழ வழா வெண்டைக்காயும் கூட எனக்குப் பிடித்துப்போயிற்றென்றால் பாருங்களேன்!

~~~ 0 ~~~


ண்ணன் குறுக்கே வந்தான்! லீவு முடிந்து டியூஷன் துவங்கும் முதல் நாள் நான் நேரத்துக்கு டியூஷன் செல்ல இயலாதபடி அவன் இடைஞ்சல் செய்தான்! வழக்கமாய் அவன் எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்துதான் ஊர்சுற்றுவோம். இந்த முறை நான் கற்பனாலோகத்தில் ரஞ்சனியோடு சஞ்சரித்துக்கொண்டிருந்ததால் அண்ணனோடு சுற்றுதற்கு எனக்கு நேரம் கிடைக்கவில்லை! இதனால் என் மீது அவன் வருத்தம் கொண்டிருந்தான்.


இன்று அவன் ஊருக்குக் கிளம்புகிறான். என் மனம் சங்கடப்பட்டது. என்ன இருந்தாலும் அவன் என் அண்ணன் அல்லவா? குறைந்தபட்சம் பஸ் நிலையம் வரைச்சென்று பஸ்ஸாவது ஏற்றி விடவேண்டும். இல்லையேல் அவன் மனம் காயமுறும். என் விந்தை போக்கு புரியாமல் குழப்பம் கொள்வான். ஆதலால் அவனை வழியனுப்பச் செல்லலாம் என முடிவுசெய்தேன். பேருந்து வரவேண்டிய நேரத்திற்கு சரியாக வந்திட்டால் கவலையில்லை. டியூஷனுக்கும் சரியான நேரத்தில் சென்றடைந்திட முடியும். ஆனால், வருமா?

வரவில்லை! வழக்கம்போல நேரத்துக்கு வரவில்லை பாழாய்ப்போன அந்த அரசு விரைவுப்பேருந்து. வராத பேருந்தினைத் திட்டவும் முடியவில்லை. ஏனென்றால் அன்றெல்லாம் அரசு விரைவுப்பேருந்துக்கு திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஒரு பக்கம் திருவள்ளுவர், மறுபக்கம் அண்ணன். யாரைத்திட்ட? ஒருவழியாக ஒரு மணிநேரம் தாமதமாகப் பேருந்து வந்துசேர, அண்ணனை ஏற்றிவிட்டு ஓட்டமும் நடையுமாக நான் டியூஷன் வந்து சேர்ந்தேன்.

அக்கா அமரும் பாயைச்சுற்றி அரைவட்ட வடிவில் எல்லோரும் உட்கார்ந்திருக்க அக்காவை அங்கே காணவில்லை. அதை பொருட்படுத்தாமல் அரைவட்டத்தை ஆராய்ந்தேன். அதில் ரஞ்சனி இருக்கிறாளா என்பதை அறிந்துகொள்ள!

இருக்கிறாள்! என்னைப் பார்க்கிறாள். பார்த்தவள் சிரிக்கிறாள். பின், அவள் அருகே அமர்ந்திருக்கும் பெண்ணை கொஞ்சம் நகரச்செய்து அவள் அருகில் நான் உட்கார ஓர் இடம் உண்டாக்கி, அங்கே என்னை வந்து அமரும்படி சைகை காட்டினாள். நான் பரவசத்திற்குள்ளானேன்!

எங்கேனும் சென்று அமரட்டும் என விட்டிடாமல் எனக்கு அவள் அருகே இடம் உண்டாக்கி என்னை அங்கே அமரச்செய்கிறாளே? ஏன்?

மீண்டும் அவள் கண்கள் அழைப்பு விடுக்க, அழைப்பினைத் தட்ட இயலாமல் அல்லது தட்ட விரும்பாமல் நான் அவள் அருகில் சென்று அமர்ந்தேன்! அவளைப் பார்த்தேன்! அவள் தன் தாடைக்குக் கை கொடுத்து என்னைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறாள். இத்தனை நாள் கழித்து மீண்டும் என் கண்கள் அவள் கண்ணோடு நேர் கோட்டில் இணைய,

கண்ணுக்குள் நூறு நிலவா? இது ஒரு கனவா?

-- மனதுக்குள் பாடல் பின்ணனி இசைத்தது!

பஸ் நிலையத்திலிருந்து வேகமாய் ஓடி வந்ததாலா அல்லது அவள் கண்ணில் கண் சேர்த்ததாலா என்றறியேன். எனக்கு முத்து முத்தாக வியர்த்திருந்தது! அதை கவனித்த அவள்,

"கர்ச்சீப் தரவா?" -- எனக்கேட்க,

கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா?

-- மீண்டும் பின்ணனி இசைத்தது பாடல். மனம் மத்தளம் கொட்டிற்று. என்னால் ஏதும் பேச முடியவில்லை. அவளை வெறுமையாய் பார்த்தேன்.

அவளே தொடர்ந்து,

"இல்ல! ரொம்ப வேர்க்குதில்ல, ஒருவேளை உங்க கிட்டே கர்சீப் இல்லாட்டி என்னோடத தரவா?" என்று கேட்கிறாள். அவள் குறும்போடு விளையாட எனக்கு நேரம் இருக்கவில்லை. நான் தறிகெட்டோடும் என் மனதை சாந்தப்படுத்திக்கொண்டிருந்தேன். ஆதலால் பதில் கூற இயலவில்லை.

விக்கித்து நிற்கும் என்னைப்பார்த்து அவள் மேலும் கேட்டாள்,

"ஏன் இப்படி வேர்க்குது?"

"வேகமாய் வந்தேன்! அதனால் வியர்க்குது"

"ஓஹ்! வேகமா வந்ததாலத்தான் லேட்டா வந்தேளா?"

-- அவள் வாய்க்கு நான் அவல் ஆனேன்!

"பஸ்டாண்டுக்குப் போயிருந்தேன்! அண்ணா ஊருக்குப் போறான், அவனை பஸ் ஏத்தி விடப் போயிருந்தேன்."

"அண்ணா?" -- உனக்கு அண்ணன் இருக்கிறானா எனும் கேள்வி இது.

"அண்ணன், என் பெரியம்மாவின் மகன்!" அவள் கேள்வி புரிந்து பதிலுரைத்தேன். அவள் சிரித்தாள். பிறகு தொடர்ந்து,

"இவ்வளோ லேட் ஆனதால ஒருவேளை இன்னைக்கு வரமாட்டீங்களோன்னு நினைச்சேன்!" -- என்று கூறினாள்.

எதிர்பார்த்திருக்கிறாள். என்னை எதிர்பார்த்திருக்கிறாள். நான் வரத்தாமதம் ஆனதும் வரமாட்டேனோ எனத் துயர் கொண்டிருக்கிறாள். ஆனால் ஏன்?

"எப்படி வராம இருப்பேன்?" என்று கூறி இடைவெளிவிட்டு அவளை ஒருமுறை ஆழமாகப் பார்த்து,

"உன்னை பார்க்காவிட்டால் இந்த நாளே பாழாகிவிடுமே!" என்று சொல்ல நினைத்ததை மனதுக்குள் ஒளித்துவிட்டு, "இன்னைக்கு முதல் நாள் டியூஷன் இல்லையா அதுதான் மிஸ் பண்ணக்கூடாதுன்னு வந்தேன்."

-- என்று என் பதிலை பூர்த்திசெய்தேன்.

"ம்ம்ம்.. நல்லதுதான்" என்கிறாள் புதிராக!

"என்னது?"

"மிஸ் பண்ணாம வந்திடனும் நு நெனச்சது!" என்று கூறி, என் முகம் பார்த்து புன்னகைத்தாள். சொல்லப்போனால் அவள் புன்னகைக்குள் என்னை புதைக்கப்பார்த்தாள். புதைபடாதிருக்க நான் பேச்சு மாற்றினேன்.

"அக்கா எங்கே?"

"யாரோ சொந்தக்காரங்க வந்திருக்கான்னு உள்ளே போயிருக்காங்க. வந்திடுவாங்க." -- பதிலுரைத்தபிறகு ஏதோ ஞாபகம் வந்தவளாய் சிரித்தாள்.

"என்ன ஆச்சு? ஏன் சிரிக்கிறாய்?"

"இல்லை! உங்களைச் சந்தித்த முதல் நாள் ஞாபகம் வந்தது. அன்னைக்கு மாதிரி இன்னிக்கும் அக்கா இல்லைன்னதும் ரூமை விட்டு வெளியே போறேன்னு சொல்லி அடம் பிடிப்பேளோன்னு நினச்சேன். சிரிப்பு வந்திட்டது"

-- என்கிறாள். எங்கள் முதல் சந்திப்பு நிகழ்வுகள் நினைவு வர நானும் சிரித்தேன். அக்கா இன்னும் வரவில்லை. டியூஷனில் மற்ற பிள்ளைகள் எல்லாம் ஒருவருடன் ஒருவர் அரட்டையில் மூழ்கியிருக்க அந்த கூட்டத்தில் நாங்கள் இருவரும் தனியாக இருந்தோம். ரஞ்சனி என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறாள். கண்ணோடு கண் பார்த்திருப்பது பேரானந்தம். வாய் பேசாது, மனம் பேசும். அவள் தைரியமாக என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாலும் எனக்கோ அவளை கண்ணோடு கண் நோக்க இன்னும் தைரியம் போதவில்லை.

கண்களால் என்னைக் கவரும் அவளீர்ப்பு விசையிலிருந்து தப்பிக்க பேச்சில் கவனம் செலுத்துதலே சிறந்த யோசனை என்பதால் பேச்சு வளர்க்க சம்பிரதாயக் கேள்விகளைத் தொடுத்தேன்.

"எங்கே படிக்கறீங்க?"

"LMS ல்!"

"எந்த க்ளாஸ் படிக்கறீங்க?" என்று நான் அடுத்து கேட்ட கேள்விக்கு பதில் தராமல்,

"அடடா! தயவு செஞ்சு இந்த 'வாங்க' 'போங்க' வ விடறீங்களா?” என்கிறாள் திடீரென்று.

"........." -- ஒன்றும் புரியவில்லை எனக்கு.

"எதுக்கு வாங்க போங்கன்னு பேசறீங்க? என்னை 'வா' 'போ' ன்னே கூப்பிட்டு பேசலாம் நீங்க" என்று அவள் விளக்க,

"எனக்கு பழக்கமில்லேங்க. நான் எல்லாரையும் வாங்க போங்கன்னு பேசித்தான் பழக்கம்!" என்றேன் நான்.

"எல்லார்கிட்டேயும் எப்படியோ பேசுக்கோங்கோ எனக்கு பிரச்சினை இல்லை. ஆனா என் கிட்டே 'வா' 'போ' போதும்." என்கிறாள் மீண்டும் குரலில் கண்டிப்பினைக் கலர்ந்து.

"சரிங்க... முயற்ச்சி செய்யறேன்." -- கண்டிப்புக்கு அடிபணிந்தேன்.

"அட ராமா! திரும்பவும் அப்படியேத்தான் சொல்றேள்!"

"நேக்கு சட்டுன்னு வராதுடி மாமி!" என மனதில் அலறிவிட்டு, "திடீர்னு இப்படி பேசச்சொன்னா வராதுங்க. போகப்போக நான் மாத்திக்கறேன்" என சாந்தமாய் அவளிடம் கூறினேன். தொடர்ந்து,

"நீங்களும் என்னை வாங்க போங்கன்னு தானே கூப்பிடறீங்க? நீங்க என்கிட்டே 'வா' 'போ'ன்னு ஒருமையிலே பேசினா நானும் உங்க கிட்டே ஒருமையிலே பேச வசதியா இருக்கும்" என்றேன்.

"ஐயோ! அது கூடாது. நான் எப்படி உங்கள ஒருமைல கூப்பிடறது? என்னால ஆகாதுப்பா, நீங்க பேசுங்க அது போறும்"

"ஏன் அதனால் என்ன? தாராளமா ஒருமையிலே பேசலாம். நாம friends தானே! friends சுக்குள்ளே ஒருமையிலே பேசுறதில் என்ன தப்பு?"

"அதுபற்றி அப்புறம் யோசிக்கலாம். நீங்க முதல்ல இந்த வாங்க போங்க வ நிறுத்துங்க" என்று கூறி விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாள். ஆனால், அவள் கூறியது எனக்குள் ஒரு விவாதத்தைத் துவக்கிவைத்தது.

எது பற்றி யோசிக்கலாம் என்கிறாள்? நாம் நண்பர்கள்தானே என்று நான் கூறியதற்கா இல்லை, அவள் என்னை ஒருமையில் அழைப்பதற்கா? நான் அவளை ஒருமையில் தான் அழைக்கவேண்டும் என்று இப்படி வற்புறுத்துகிறாளே ஏன்? அதேசமயம் என்னை ஒருமையில் அழைக்கச்சொன்னால் அது கூடாது என்று மறுக்கிறாளே அது ஏன்?

கிட்டத்தட்ட சண்டைபோடும் தோரணையில் நாங்கள் விவாதித்ததால் எங்கள் அருகே அமர்ந்திருந்த டியூஷன் பிள்ளைகள் எங்கள் விவாதத்திற்கு பார்வையாளர் ஆனார்கள். அதில் சாய்குமார் என்பவன்,

"அண்ணா, அக்கா தான் அவங்க School -ல School pupil leader." என எனக்குத் தெரிவித்தான்!

"ஓஹ்...! அப்படியாங்க? நீங்க சொல்லவே இல்லையே"

"ஐயோ ராமா! திரும்பவும் அப்படித்தான் பேசறர். அது என்ன அப்படியாங்க ன்னு அதுலயும் ஒரு ங்க? அப்படியான்னு மாத்திரம் கேட்டா போறாதா? இல்லைன்னா என் பேர் சொல்லி கூப்பிட்டா ஆகாதா?!"

-- சாய்குமார் உள்ளிட்ட பார்வையாளர்கள் கூட்டம் இப்போது அதிகரித்திருக்க அனைவரும் 'கொல்'லெனச் சிரித்தனர். இப்போது அனைவரின் பார்வையும் எங்களைச் சுற்றி மையம் கொள்ள, எனக்கென தனி ரசிகர் பட்டாளமும், அவளுக்கென தனி ரசிகர் பட்டாளமும் அமைய ரசிகர்களின் திருப்திக்காக நான் அவளையும், அவள் என்னையும் சீண்டுவது தவிர்க்க முடியாததாயிற்று. இந்த சீண்டல்கள் நெருக்கத்தை அதிகரித்தது. அன்றைய தினம் எங்களுக்காக எழுதப்பட்டதோ? அக்கா வராததால் அன்றையப் பொழுது அவளோடு அளவலாவிக்கழிந்தது!

என் பதினாற்றுச்சோலையில் குறிஞ்சி பூத்தது!

~~~ 0 ~~~

க்கா எனும் உறவில் எனக்கு யாரும் இல்லததால், அக்கா ஸ்தானத்தில் இருப்பவர்களை இயல்பாகவே எனக்குப் பிடித்துப்போகும். என் ஹிந்தி அக்காவுடனும் அதுபோலத்தான் ஆயிற்று. அக்காவை என் சொந்த அக்கா போன்றே கருதினேன். அக்காவும் அதே பாசத்தோடு என்னோடு பழகினார். டியூஷன் செல்வது என்பது மாறி என் சகோதரி வீட்டுக்குச் செல்கிறேன் எனும் உணர்வே மேலோங்கியிருந்தது. ரஞ்சனியைப்போல நானும் அக்காவுக்குச் செல்லப்பிள்ளை ஆகியிருந்தேன்.

ரஞ்சனியை நான் 'வா' 'போ' என ஒருமையில் விளிக்கத் துவங்கியிருந்தேன். அவள் கண்களால் என்னை சீண்டுவதை இன்னமும் விடாப்பிடியாகத் தொடர்கிறாள். டியூஷனில் அவள் எப்போதும் எனக்கு எதிரில்தான் வந்தமர்வாள். சந்தர்ப்பம் அமையும்போதெல்லாம் அவளை நான் பார்ப்பதும், நான் பார்க்கும் போதெல்லாம் அவள் என்னைப் பார்ப்பதும் வாடிக்கையாகிப்போனது.

ஹிந்தி எழுதுவது எனக்கு மிகக்கடினமான செயல். தமிழ் போல் அல்லாமல் நான்கு க, நான்கு ச என மெய்யெழுத்துக்களெல்லாம் நான்கு நான்காய் இருக்கும். எழுதும்போது எழுத்துகளுக்கு மேலே தொப்பி போல் எப்போதும் கோடு வேறு இடவேண்டும். "க்யா முசீபத் ஹை?"

என் எழுத்துதிறனைச் சிறப்பாக்கிட அக்கா அடிக்கடி எனக்கு எழுத்து வேலை தருவது வழக்கம். அப்படி ஒரு நாள் அக்கா எழுத்துவேலை தர, நான் அதை வகுப்பறைக்கு வெளியே உள்ள வராந்தாவில் சென்று எழுதி வருகிறேன் எனக்கூறி அக்காவின் அனுமதிபெற்று வெளியே வந்தேன்.

அவளும் வருவாள் என்று என் உள்ளுணர்வு கூறியது. உள்ளுணர்வு உணர்த்தியது போல் அடுத்த ஐந்து நிமிடத்துக்குள் அவளும் வந்தாள். வந்து என் அருகே அமர்ந்து எழுதத்துவங்கினாள். அவளைப் பார்த்து புன்னகையை பரிமாறிவிட்டு நானும் எழுதத்துவங்கினேன்.

மனதுக்குள் உண்டாகியிருந்த பிரணயத்தின் அல்லது பிரளயத்தின் எதிரொளி முகத்தில் வராமலும் எதிரொலி குரலில் வராமலும் சமாளிக்க பெரும்பாடு பட்டுக்கொண்டிருந்தேன். எனது ஒவ்வோர் அணுவும் ஆனந்தத்தில் ஆழ்ந்தது.

"ஏன் வெளியே வந்திட்டீங்க?" என்னைப் பாராமல் நோட்டுப்புத்தகத்தைப் பார்த்து எழுதிக்கொண்டே கேட்கிறாள்.

"உள்ளே ஒரே சத்தமாயிருக்குல்ல, இங்கே அமைதியா காற்றோட்டமா இருக்கு அதான்" நானும் எழுதிக்கொண்டே அவளைப் பார்க்காமல் பதில் கூறினேன்.

"நீ ஏன் வெளியே வந்திட்டே?"

-- நீங்கள் வந்ததால் எனும் பதில் வரும் எனும் அல்ப ஆசை கொண்டிருந்தேன் என்பது உங்களுக்கு மட்டுமான இரகசியம்.

"அதே சத்தம்.... அதே காற்றோட்டம்... அதேதான் என் காரணமும்!"

-- மூக்குடைந்தது! அவளே தொடர்ந்து,

"இங்க நல்லா காத்து வீசுதில்லே?" எனக்கேட்டாள்.

"ம்!" ஆமோதித்தேன்!

"அப்புறம் ஏன் உங்களூக்கு இப்படி வேர்க்குது?" அடிப்பாவி...! இதை எப்போது கவனித்தாள்?

"எனக்கு அப்படித்தான். காற்றடித்தாலும் சிலநேரம் மழை பெய்தாலும் வியர்க்கத் துவங்கும்." ஏதோ உளறிவைத்தேன்.

"விசித்திரமானவர் நீங்கள்" -- கூறி அவள் சிரித்தாள்.

"சித்திரமானவள் நீ" -- கூறாமல் நான் சிரித்தேன்!

அன்றும் நிறைய நேரம் பேசினோம். பேசுகையில் அவளை பல முறை சிரிக்கவைத்தேன். கண்ணில் கண்ணீர் வரும் வரை சிரித்தாள். அவள் சிரிப்பின் அழகை நானும் இரசித்தேன். என்னிடம் என்னைப்பற்றிய நிறைய கேள்விகளை அன்று அவள் தொடுத்தாள்.

"உங்களுக்கிருக்கும் ஆசை என்ன? கனவு என்ன? லட்சியம் ஏதும் இருக்கா?"

-- என்னைப்பற்றி கேட்டதில் முக்கிய கேள்விகள் இவை.

அதற்கு நான்,

"நிறைய விஷயங்களில் எனக்கு ஆசை உண்டு. பெருத்த ஆசை சாப்பாட்டில்தான். நான் ஒரு போஜனப்ரியன் என்று என் ஜாதகத்திலேயே எழுதியிருக்கு. அது என்னைப் பார்த்தால் கூட சுலபமாகத் தெரியும்." என்றேன்.

கலகலத்து சிரித்தவள். "சாப்பாட்டில் என்ன ரொம்ப இஷ்டம்?" எனக்கேட்டதற்கு,

"பிரியாணி... மட்டன் பிரியாணி" என்று நான் கூறிட, ஐயர் பெண்ணான அவள், அவளையறியாமல் முகம் சுளித்தாள். நான் என் நாக்கை கடித்து என்னை கடிந்துகொண்டேன். உடனே மன்னிப்பும் கேட்டேன்.

"மன்னிச்சுக்கோ! வாய் தவறி வந்திடுச்சு தப்பா எடுத்துக்காதே!"

"எதுக்கு மன்னிப்பு? பிரியாணின்னு சொன்னதுக்கா? எனக்கும் இஷ்டம்தான் பிரியாணி. நானும் பயங்கரமா சாப்பிடுவேன் தெரியுமோ?" என்று அவள் கூற தூக்கிவாரிப்போட்டது எனக்கு. என் முகத்தில் ஆச்சர்யகுறிகள் நடத்திய ஊர்வலத்தைக் கண்டு ரசித்தவள், ஊர்வலத்தை கலைக்கும் விதமாய்,

"வெஜிட்டபிள் பிரியாணி!" என்று கூறிச்சிரித்தாள் அல்லது அழகுற்றாள்!

இதைத்தொடர்ந்து அவள்,

"சரி, ஆசை ஆகிவிட்டது அடுத்து கனவு என்ன?" எனக்கேட்க, இந்த இரண்டாம் கேள்விக்கு பதிலுரைக்கும் முன் அவளிடம் ஒரு கோரிக்கை வைத்தேன்.

"சொல்கிறேன் ஆனா என் கனவைக் கேட்டு நீ சிரிக்கக்கூடாது"

"சரி.. சிரிக்கமாட்டேன்" -- என்கிறாள் சிரித்துக்கொண்டே!

"ஒரு சினிமா எடுக்கனும்" என நான் கூறவும் குபீர் என சிரிப்பு வந்தது அவள்க்கு. ஆனால் வாயை இறுக மூடி அடக்கிக்கொண்டாள். வாயைத்திறந்தால் சிரித்துவிடுவாள் என்பதால் சைகையில் என்னை மேற்கொண்டு பேசுமாறு கூறினாள்.

"நீ சினிமா பாக்குறதுண்டா?" -- அவளைக் கேட்டேன்.

"ம்ஹும்... பாக்கமாட்டேன்.. பிடிக்காது" என்று கூறியவள் உடனடியாக, "ஆனா நீங்க படம் எடுத்தா நான் கண்டிப்பா வந்து பார்ப்பேன்" என்கிறாள்.

இதைக்கேட்டு என் உள்ளம் குளிர்ந்துபோனது என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்துகொள்ளப் போகின்றீர்களா என்ன?

"சரி, லட்சியம் என்ன?" மூன்றாம் கேள்வியைத் தொடுத்தாள்.

"பெரிய லட்சியம் எல்லாம் ஏதும் இல்லை. நல்ல மனுஷனா இருக்கனும். நிறைய பேருக்கு இஷ்டமுள்ளவனா இருக்கனும் அவ்வளவுதான்." என்று நான் சொல்லியதற்கு அவள்,

"That you are already!" என்கிறாள் மிருதுவான குரலில்.

இதைக்கேட்டதும் என் இதயத்துடிப்பு மும்மடங்கு கூடியது! உண்மையில் இது அவஸ்த்தை நிலை. ஏதோ புதிய வரம் பெற்றார்போல உணர்ந்தேன். இந்த மகிழ்ச்சியிலேயே சற்று நேரம் ஆழ்ந்துகிடக்கத்தோன்றியது. மேற்கொண்டு பேச முடியாமல் ஏதோ அடைத்தது.

வெளியே வந்தும் வெகு நேரம் ஆயிற்று. ஆதலால் டியூஷன் அறக்குள் செல்ல முடிவு செய்து, "ரொம்ப நேரம் ஆச்சு, அக்கா தேடப்போறாங்க உள்ளே போலாமா?" கேட்டேன் அவளிடம்.

"ம்!" சம்மதம் மூளினாள். அக்கா சொன்ன கட்டுரையை எழுதிய காகிதங்களை எடுத்து அடுக்கிக்கொண்டிருக்கையில்,

"என்ன வயசு ஆகுது உங்களுக்கு?" என என் வயதைக்கேட்டாள் திடீரென்று.

"பதினாறு! மதுரப்பதினாறு! உனக்கு?" என் வயதைக்கூறி அவள் வயதைக் கேட்டேன்.

"கம்மிதான் கொஞ்சம் கம்மி, ஒரு ஒன்னிரண்டு வருஷம் வித்தியாசம் வரும்" என்று கூறி புன்னகைத்தவள், மெல்லிதாய் அவளுக்குள், "அப்ப பரவாயில்லை!" என்றும் கூறிக்கொண்டாள்!

அவள் கூறியது எனக்கும் கேட்டது. ஆனால், என்ன அர்த்தத்தில் பரவாயில்லை என்கிறாள் என்பதுதான் எனக்குப் புலப்படவில்லை. அவளிடம் கேட்க எத்தனித்தேன் ஆனால் அதற்குள் அவள் டியூஷன் அறைக்குள்ளே சென்றுவிட்டிருந்தாள்.

நான் அருட்பெருங்குழப்பத்தில் ஆழ்ந்தேன்.

~~~ 0 ~~~

பிணக்கமும் இணக்கமும் மாறி மாறி வரும் உறவில் நெருக்கம் நிறைந்திருக்கும். அந்த உறவும் பலம் மிகுந்ததாய் இருக்கும். எங்களுக்குப் பிணக்கம் கொள்ளவெல்லாம் சந்தர்ப்பம் அமையவில்லை. இணங்கியே இருந்தோம். ஆனாலும் எங்களை மனம் வருந்தச்செய்யும் ஒரு விஷயம் நடந்தது.

மகிழ்ச்சிப்பூக்கள் பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்த எங்கள் சோலையில் அக்கா குண்டு வீசினார். டியூஷனுக்கு வரும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகம் ஆகிவிட்டதால் இரண்டு btach-ஆக பிரித்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒவ்வொரு batch-க்கும் தனித்தனியே டியூஷன் என்றார் அக்கா.

என் உள்ளுணர்வு முன்பே உணர்த்தியிருந்ததுபோல் நானும் ரஞ்சனியும் வெவ்வேறு batch-ல் இடம்பெற்றோம். இரண்டு batch-க்குமே ஞாயிற்றுக்கிழமை டியூஷன் இருந்தாலும் இரண்டு batch-க்கும் இரு வேறு நேரங்களை நிர்ணயித்து அறிவித்தார் அக்கா. நானும் ரஞ்சனியும் சந்திப்பதைத் தவிர்க்கும் நோக்கத்தோடுதான் அக்கா இந்த முடிவு எடுத்தார் என்றே இன்றளவும் நான் நம்புகிறேன்.

நாங்கள் இருவருமே அக்காவுக்குச் செல்லப்பிள்ளைகள். எங்களுக்குள் காதல் போன்ற எண்ணங்கள் அந்த வயதில் அதும் டியூஷனில் வைத்து துளிர்விட்டு பிரச்சினை ஆகிவிடக் கூடாது என்று அக்கா நினைத்திருக்கலாம். அக்காவின் இந்த முடிவினால் மனம் வருத்தம் கொண்டிருந்தது. ஆனால், அக்கா மீது கோவம் ஏதும் வரவில்லை.

இதுகுறித்து நான் ரஞ்சனியிடமோ, அவள் என்னிடமோ ஒரு வார்த்தைகூட பேசவில்லை. பிரிவினை எங்களை பாதிக்கவில்லை ஆனால், அதற்காக நட்பு முறிந்திடாதல்லவா. சில ஞாயிற்றுக்கிழமைகளில் எப்போதேனும் அவள் டியூஷன் முடிய தாமதமானால் ஒரு ஐந்து அல்லது பத்து நிமிடம் பார்த்து பேசிக் கலைவோம். எங்கள் சந்திப்பு இவ்வளவுதான் என்றாலும் மனதுக்குள் அவளோடான நட்பு வேரூன்றி உறுதியாய் நிலைத்தது. மனதின் நெருக்கம் குன்றாமல் இன்னும் சொல்லப்போனால் குன்றுபோல் வளர்ந்தது.

வார நாட்களில் அவள் டியூஷன் போகும்போது அவளை நான் பார்ப்பதற்கு வினோதும் பக்ஷியும் ஒரு யோசனை தந்து உதவினார்கள். ரஞ்சனி, அவள் வீட்டுக்குப் போகும் பாதையில் ஒரு பள்ளிக்கூடம் உண்டு. அந்த பள்ளியின் மைதானத்தை ஒட்டிதான் அவள் வீட்டுக்குப் போகும் பாதை இருக்கும். அங்கிருந்து பார்த்தால் தொலை தூரம் வரை அவள் சைக்கிளில் செல்வது தெரியும். ரஞ்சனி, டியூஷனுக்குப் போகும்போதும் வரும்போதும் நான் அவளை பார்த்திடத் தோதுவாக, அவளுக்கு டியூஷன் உள்ள நாட்களில், நாங்கள் கிரிக்கெட் விளையாடும் இடத்தை அந்த பள்ளி மைதானத்திற்கு மாற்றினோம். சந்திக்க இயலாவிட்டாலும் அவளை நண்பர்கள் உதவியோடு இப்படி தரிசிக்க முடிந்தது.

ஒரு பக்கம் எனக்கு உதவினாலும் மறுபக்கம் இம்சித்தார்கள் என் நண்பர்கள். ரஞ்சனி வரும் நேரம் பார்த்து என் பெயரைச் சொல்லி உரக்கக் கத்துவார்கள். அந்த கால கட்டத்தில் "ரஜினிகந்தா பான் மசாலா" என்றொரு பான் மசாலாவின் விளம்பரம் அடிக்கடி டி.வி, ரேடியோக்களில் வருவதுண்டு. அதை இந்த பயல்கள் "ரஞ்சனிகந்தா பான் மசாலா" என்று பாடி என்னை மாட்டிவிடப்பாப்பார்கள். முக்கியமாய் நண்பன் வினோதுதான் இதைப்பாடுவான்.

[ஞாபகம் இருக்கா நண்பா?!]. நல்லவேளையாக நான் அங்கு விளையாடுவதும் அவளை பார்ப்பதும் அவளுக்குத் தெரியாது.

சில நாட்கள்தான் இந்த யோசனையும் செயல்பாட்டில் இருந்தது. பொதுவாக வார நாட்களில் நாங்கள் விளையாடுவது அரிதுதான் ஆகையால் ரஞ்சனியை பார்ப்பதும் அரிதானது. மாதங்கள் உருண்டோடியது. சந்திக்க இயலாத இந்த நீண்ட காலத்திற்குப் பிறகு அவளைச் சந்திக்க ஒரு சந்தர்ப்பம் அக்கா வழியாகவே அமைந்தது.

பொங்கலுக்கு டியூஷனில் பொங்கல் கொண்டாட எல்லோரையும் வீட்டுக்கு அழைத்தார் அக்கா. இதோ, நாங்கள் அக்காவோடு பொங்கல் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்!

~~~ 0 ~~~

ரஞ்சனி தந்த சக்கரைப் பொங்கலைச் சாப்பிட்டு வராந்தா படிக்கட்டில் அமர்ந்திருந்தேன். ரஞ்சனி என்னருகே வந்தாள். நான் உட்கார்ந்திருந்த படிக்கு ஒரு படி மேலே அமர்ந்தாள். எத்தனை நாள் ஆயிற்று இதுபோல் அருகருகே அமர்ந்து? நான் மகிழ்ச்சியில் திளைத்திருந்தேன். அவள் களைத்திருந்தாள்!

"என்ன ரொம்ப களைச்சுப்போனார்போல இருக்கீங்க?" நான் கேட்டேன்!!

"வேலை... நேத்து ராத்திரியிலிருந்து ஓயாத வேலை!"

"ஓஹ்! ‘தூங்கவேண்டியிருந்ததா?"

"கிண்டலா? பொங்கல் சாப்டேளே... நன்னா இருக்கா ஏதுன்னு சொன்னேளா?"

"நன்னா இருந்திச்சான்னு தெரியல.. ஆனா நல்லா இருந்திச்சு!"

"நானே பண்ணினேன் தெரியுமா?"

"கேட்டது!"

"கேட்டதா... என்ன சொல்றேள்?"

"ஆமா! நொடிக்கு நூறு தடவ நீங்கதான் விளம்பரம் செஞ்சிட்டிருந்தீங்களே.. நானே செஞ்சது, நானே செஞ்சதுன்னு!"

"உண்மையில் நானே செஞ்சது!"

"அட! திரும்பவும் அதே விளம்பரம்!" என்று நான் கூற, சட்டென என் பக்கம் திரும்பியவள் அவள் அணிந்திருந்த பட்டுச்சட்டையின் இடது கை பாகத்தை மேல் நோக்கி சுருட்டத்துவங்கினாள்.

"அடடா என்ன இது? திடீர்னு ரௌடித்தனத்துல இறங்கிட்டீங்க? கையெல்லாம் சுருட்டிட்டு பீமபுஷ்டி பயில்வான் ஆயிட்டிருக்கீங்க? சரி சரி நம்பிட்டேன்.. நீங்க தான் சக்கரைப்பொங்கல் செஞ்சது! சத்தியமா நீங்க தான் செஞ்சது!" என்று கூறி பயந்து நடுங்குவதுபோல பாவ்லா செய்தேன்.

"பாருங்க இங்க..." கையைக் காட்டினாள்! அவளது இடது கை மணிக்கட்டிற்கு மேல் எண்ணை தெறித்த அடையாளமாய் இரண்டு புள்ளிகள் இருந்தது.

"என்னது இது?" எனக்குப் புரியாததைப்போலக் கேட்டேன்!

"அப்பளம் சுடறச்சே எண்ணை பட்டிடுத்து. ஆத்துல அம்மாக்கு நான் தான் பூரா ஹெல்ப் பண்ணினேன் தெரியுமா? அம்மா நிறைய வேலை இருக்குன்னு என்னையே சக்கரைப்பொங்கல் செய்யச்சொன்னா!" என்றாள்.

"சரி சரி நம்பிட்டேன்." என்றேன்.

"ம்ம்ம்ம்ம்..." நம்ப வைத்த திருப்தியில் அவள் உம் கொட்ட நான், "புத்திசாலி தான்!" என்றேன் அவளைப்பார்த்து!

"ஏன்?"

"முன்யோசனையோட மையால புள்ளியெல்லாம் வச்சிட்டு வந்திருக்கீங்களே,. ஒரு மை! ஒரு பொய்ய மெய்யாக்கிடுச்சு பாத்தீங்களா?!" என்று கூறிய என்னை அவள் அடிக்க வர, நான் ஓட, அவள் என்னைத் துரத்த, அந்த நேரம் பார்த்து அக்கா அங்கே வர, நாங்கள் இருவரும் அமைதியானோம்.

"உங்க விளையாட்டுகள் இன்னும் தீரலியா?" என அக்கா சிரித்துக்கொண்டுதான் கேட்டார். ஆனால், ரஞ்சனியின் முகம் வாடிவிட்டது. எங்கள் இருவர் கையிலும் எக்ஸாமுக்கான அப்ளிக்கேஷனைத்தந்து அதை பூர்த்தி செய்து தரச்சொன்னார் அக்கா. ரஞ்சனி அதை பூர்த்தி செய்ய டியூஷன் அறைக்குள் நுழைய நான் வராந்தாவிலேயே அமர்ந்து அதை நிரப்பத்துவங்கினேன்.

அக்கா என் அருகிலேயே வராந்தாவில் உட்கார்ந்து மற்ற பிள்ளைகளோடு பேசிக்கொண்டிருந்ததால் என்னால் டியூஷன் அறைக்குள் செல்ல முடியவில்லை. சற்று நேரத்தில், ரஞ்சனி அப்ளிக்கேஷனை நிரப்பி முடித்து அக்காவிடம் நீட்டியவள்,

"அப்ப நான் கிளம்பட்டுமாக்கா?" என அவள் அக்காவிடம் கேட்க நான் திடுக்கிட்டு அவளைப்பார்த்தேன். இத்தனை நாள் கழித்து பார்க்கிறோம், இன்னும் சரியாகப் பேசக்கூட இல்லை, அதற்குள் கிளம்புகிறேன் என்கிறாளே?

"ஏம்மா? அதுக்குள்ளே கிளம்பறே... கொஞ்ச நேரம் கழித்து போகலாமில்லையா? இங்கே எல்லோரும் இருக்காங்களே?" என்று அக்கா சொன்னதற்கு,

"இல்லக்கா, வெளியே போறோம். அப்பா வீட்ல காத்திண்டிருப்பார். நான் சீக்கிரம் வந்திடறேன்னு சொல்லிட்டு வந்தேன்." என்று கூறியவளை நம்ப முடியாமல் நான் பார்த்துக்கொண்டிருந்தேன். சும்மா என்னை சீண்டிடத்தான் சொல்கிறாள் என்றே நினைத்தேன்.

"சரிம்மா.." என அக்கா அனுமதி கொடுக்க, அவள் அக்கா காலில் விழுந்து நமஸ்கரித்து எழுந்திருக்கும்போது என் கண் நோக்கி கண்களால் விடை கேட்டாள். நான் அவள் இப்போது கிளம்புவதில் எனக்கு உடன்பாடில்லை எனும் தோரணையில் அவளைப் பார்த்தேன்.

என் கண்கள் நல்ல பதில் தராததால்,

"கிளம்பறேன் அப்ப பார்க்கலாம்!" என்கிறாள் என்னைப் பார்த்து.

நான் அவள் சொன்னதை கவனிக்காததைப்போல குனிந்து மும்முரமாய் விண்ணப்பத்தில் எழுதிக்கொண்டிருப்பதைப்போல நடிக்க, "உன்னைத்தான் கேக்குறா. பதில் சொல்லேன்!" என அக்கா கூற வேறு வழியில்லாமல் நிர்கதியாய், நிராதரவாய், நிராசையாய் தலையசைத்து விடை கொடுத்தேன்.

அவள் புறப்பட்டாள்! நான் சங்கடம் கொண்டேன். சட்டென கண்ணில் நீர் திரள் யாரும் பார்க்காதிருக்க வகுப்புக்குள் சென்றுவிட்டேன். பார்க்கத்துடித்ததும், பேசத்துடித்ததும் நான் மட்டும் தானோ? இத்தனை நாள் சந்திக்க இயலாமல் வருத்தம் கொண்டது நான் மட்டும் தானா? எத்தனை தலை போகும் அவசரம் இருந்தாலும் என்னை சந்திக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பாழ் படுத்தி இப்படிச் செல்லவேண்டுமா?

"உங்கள் விளையாட்டு தீரவில்லையா" என அக்கா கேட்டதுதான் காரணமா? அது தான் காரணம் என்றால், அதையெல்லாம் ஒரு காரணம் ஆக்கலாமா? அக்கா ஒன்றும் கண்டிக்கவில்லையே, சாதாரணமாகத்தானே கேட்டார்கள். அதற்காக என்னை உதாசீனப்படுத்தி இப்படிப் போவது தகுமா? இங்கே என் ஆசை பாழாகுதே அது உனக்குப் பரவாயில்லையா? என்னை கையொழிந்தாயே நியாயமா?

அவளின் இச்செயல் என் தன்மானத்திற்கு நேர்ந்த இழுக்காக எனக்குத்தோன்ற எனக்கு என்மீதே கட்டுக்கடங்காத கோவம் வந்தது. அவளை பார்ப்பதோ பேசுவதோ இனி எந்த சந்தர்ப்பத்திலும் கூடாது என உறுதிகொள் என கட்டளைக்குரல் ஒன்று எனக்குள் ஒலித்தது.

விருப்பினையும் வெறுப்பினையும் பிரிக்கும் இடைவெளி ஒரு மயிரிழையளவுதான். அவள் மேலான என் விருப்பு இன்னும் வெறுப்பாகவில்லை. ஆனால், என்னளவு விருப்பு அவளுக்கு இல்லை என்பதை பறைசாற்றுவது போல அவள் புறப்பட்டுப்போன செய்கை அமைந்ததால், நான் அவளுக்கு முக்கியம் இல்லை என்பதாய் நான் உணர்ந்ததால், அவள் மேல் எனக்கிருந்த விருப்பம் குறைந்தது. ரஞ்சனி எனும் பதம் இனி என் இதயத்திற்குள் அதிர்வுகளை உண்டாக்காது!

~~~ 0 ~~~

காணத்தவிப்பதற்கு ஓர் காலம்! காணத்தவிர்ப்பதற்கும் ஓர் காலம்!

ரஞ்சனியை அதன் பிறகு நான் சந்திக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் சிலநேரம் சந்திக்க நேர்ந்திடும் என்பதால் அன்றைய தினத்தில் டியூஷன் போகாமலோ அல்லது தாமதமாகச் சென்றோ அவளைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களை தவிர்த்துவந்தேன்.

ஹிந்தி பரீட்சைக்கான ஹால் டிக்கெட் வந்தது. நாள் பார்த்து, நேரம் பார்த்து, பூஜை செய்து தான் அக்கா அதை எங்களிடம் வழங்குவார். வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை அதற்காக எல்லோரையும் வரச்சொல்லியிருந்தார் அக்கா.

அந்த வாரத்தில் ஒரு நாள், ரஞ்சனியின் batch-ல் படிக்கும் சாய்குமார் எனக்காகக் காத்திருந்தான். அவன் எனக்கான சேதி ஒன்றை ரஞ்சனியிடமிருந்து தாங்கி வந்திருந்தான்.

அவள் என்னை சந்திக்கவேண்டுமாம். வரும் ஞாயிறன்று அவளை நான் அவசியம் சந்தித்தே ஆகவேண்டுமாம். அதற்காக அக்கா சொன்ன நேரத்திற்கு சற்று முன்பாகவே நான் டியூஷன் செல்ல வேண்டுமாம். அவளூம் அன்று சீக்கிரம் வந்திடுவாளாம்!

ஆகட்டும் எனக்கூறி சாயிக்குமாரை அனுப்பிவைத்தேன். சாதாரணகதியில், இந்நேரம் நான் இறக்கை முளைத்து வின்னில் பறந்திருக்க வேண்டும். உணர்வுகள் இறந்திருந்ததால் அப்படி ஏதும் நடக்கவில்லை. தரை தொட்டே நிற்கின்றன என் கால்கள்.

அன்று, என் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் ஏதேதோ காரணம் கூறி என்னை தவிக்கவிட்டவளை நான் தவறாமல் அவசியம் சென்று சந்திக்கவேண்டுமாம். அவளைச் சந்திக்கக் கூடிவரும் நாளுக்காக காத்திருந்து ஆசையோடு வந்த என்னை நிராசை செய்து 'நான் ஒரு பொருட்டே அல்ல' என்பது போல போனவளை நான் கண்டிப்பாகப் போய் பார்க்கவேண்டுமாம். இதுவென்ன நியாயம்? அவளைச் சந்திக்கும் அவசியம் ஏதும் இல்லை என மனம் தீர்க்கமான ஒரு முடிவை எடுத்தது.

தவிப்பதற்கோர் காலம்! தவிர்ப்பற்கோர் காலம்!

ஞாயிற்றுக்கிழமை....,

என் முடிவில் மாற்றம் ஏதும் நிகழவில்லை. டியூஷனுக்கே அன்று போகவேண்டாம் என்றுதான் முதலில் நினைத்தேன் ஆனால், நேரம் காலம் பார்த்து ஹால் டிக்கெட் தருவதால், இன்று போகாவிட்டால் அக்கா கோபித்துக்கொள்வார். ஆதலால் மிகவும் தாமதமாகக் கிளம்பினேன் டியூஷனுக்கு.

அக்கா வீட்டிற்கு பின்பக்கமாக உள்ள தெருவழியாகச் சென்று, பின்பக்க மதில் வழியே அவளின் சைக்கிள் இருக்கிறதா என எட்டிப்பார்த்தேன். இல்லை! ஹால் டிக்கெட் வாங்க வந்திருந்தவர்களும் ஒவ்வொருவராகக் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். சைக்கிள் இல்லை, ஆதலால் ரஞ்சனி எனக்காகக் காத்திருந்துவிட்டு போய்விட்டிருக்கக்கூடும் என்பதை உணர்ந்த மனம் பூரிப்படைந்தது, வென்றுவிட்டேன்! அவளை வென்றுவிட்டேன் என கூக்குரல் ஒன்று எனக்குள் ஒலமிட்டது.

"அண்ணா! இங்கே என்ன பண்றீங்க?"

-- அந்தத் தெருவில் சாயிக்குமார் வந்துகொண்டிருந்தான்.

"பின்னால நின்னிட்டு என்னண்ணா பண்றீங்க?" டியூஷன் பின்புறச் சுவர் வழியாக உள்ளே எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த என்னை ஆச்சரியமாய் பார்த்து கேட்டான் அவன்.

"ஒன்னுமில்லேடா, என் friend வீடு இந்தத் தெருவுலதான் இருக்கு அவன் வீட்டிலருந்து வந்திட்டிருக்கேன்."

"ரஞ்சனி அக்காவ பாக்கலையா?"

-- என் பதிலை காதில் போட்டுக்கொள்ளாதவனாய்க் கேட்கிறான்.

"இல்லை டா லேட் ஆயிடுச்சுல்ல, போயிட்டாளா? பரவாயில்ல, இன்னொரு நாள் பார்த்துக்கலாம். நீ நாளைக்கு அவளைப்பார்த்தால் சொல்லிடு"

-- என்று கூறி நடக்கத்துவங்க,


"ஐயோ! அந்த அக்கா இனிமே வரமாட்டாங்க. அவங்க அப்பாக்கு டிரான்ஸ்பர் ஆயிடுச்சாம். அவங்க ஊரைவிட்டுக் கிளம்பறாங்க..."

-- என்றான் கிட்டத்தட்ட அலறும் குரலில்.

என் நெற்றிப்பொட்டில் ஏதோ அறைந்தார்போல இருந்தது,

"என்னடா சொல்றே? அவ என் கிட்டே ஒன்னும் சொல்லவே இல்லையே!"

-- என்றேன் பரிதாபமாக.

"அதுக்குதான் உங்கள பாக்கனும்னு சொல்லியிருப்பாங்க. டியூஷன்லயே ரொம்ப நேரம் காத்திருந்தாங்க, இப்ப நான் வரும்போது கூட முன்பக்க கேட் கிட்டே நின்னிட்டிருந்தாங்க சீக்கிரம் போய்ப் பாருங்க"

-- என்று சாயி சொல்லி முடிக்கும் முன் பறந்தேன் அங்கிருந்து!

'இனி அவளைப் பார்க்க முடியாதோ?' எனும் எண்ணம் என் கோவத்தைக் கரைத்தது! தலையிலிருந்து ஒரு வெப்பம் உடல்வழி இறங்கிப்போவதை என்னால் உணரமுடிந்தது.

கேட்டில் அவள் இல்லை! ஓடினேன் தெரு முனைக்கு....!

டிரான்ஸ்பர் விஷயத்தை ஏன் என்னிடம் சொல்லவில்லை? அது தெரிந்திருந்தால் ஓடோடி வந்திருப்பேனே...

தெருமுனையில் அவளைக் காணவில்லை! அவள் வழக்கமாய் வீட்டுக்குப்போகும் பாதையில் ஓடினேன்!

தேவையில்லாமல் உன்மேல் கோவம் கொண்டேனோ? ஏதோ ஒரு மனசங்கடத்தில் அன்று நீ கிளம்பிச்சென்றிருப்பாய், நான்தான் உன் நிலையை புரிந்துகொண்டு சாந்தமாகியிருக்க வேண்டுமோ?

அவள் தென்படவில்லை!

இன்னும் சற்று தூரத்தில் பள்ளிக்கூடம் வரும் அங்கிருந்து பார்த்தால் இந்தப்பாதை சற்று தொலைவு வரைத்தெரியும். முன்பு வாரநாட்களில் அவள் டியூஷனுக்கு வரும்போது இங்கிருந்து பார்ப்பதுதான் வழக்கம்....!

பள்ளியை நோக்கி என் ஓட்டத்தைத் தொடர்ந்தேன்!

நீ வரச்சொல்லியும் வராமல், காத்திருந்தும் என்னைக் காணாமல் எத்தனை துயர் கொண்டிருப்பாய் நீ? அந்த வேதனை எனக்குத் தெரியும். என்னாலேயே தாங்க முடியவில்லை. நீ எப்படித்தாங்கியிருப்பாய்?

ஓடுகிறேன்...!

ரஞ்சனி, ஒரு முறை ஒரே ஒரு முறை உன் அழகு முகத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா? அன்று நீ, நாம் ஒன்றாகப் பழகுவதை அக்கா தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது என நினைத்து அந்த நல்ல காரணத்துக்காகக் கிளம்பியிருந்திருப்பாய், ஆனால் நானோ இன்று உருப்படாத வெறும் கோவம் காரணமாக, என் வறட்டு கௌரவம் காரணமாக, தேவையில்லாத இருமாப்பு காரணமாக வேண்டுமென்றே உன்னை உதாசீனப்படுத்திட்டேனே?

ஓடுகிறேன்...!

அன்று என்னிடம் அதிகம் பேசாது போனதற்கு நிச்சியம் கவலை கொண்டிருப்பாய், நானோ இன்று உன்னை பார்ப்பதைத் தவிர்த்ததை எண்ணி எள்ளி நகையாடினேனே? கடவுளே! நான் ஏன் இப்படி ஆனேன்? ஆண்டவா, இக்காவியம் இப்படியா முடிவுறவேண்டும்?

ஓடுகிறேன்...!

நான் நல்ல நண்பனே அல்ல ரஞ்சனி. வெறும் சுயநலவாதி. என் உணர்வுகளுக்கு மட்டுமே அக்கறை கொண்டிருந்தேன். உனக்கு தாங்காய் இருக்கவில்லை. உன் உணர்வுகளுக்கு மதிப்பும் கொடுக்கவில்லை. என் ஏமாற்றத்திற்கு நம் நட்பையே காவு கொடுக்கத்துணிந்த காதகன் நான். அதற்கு உன்னை பார்க்க முடியாமல் போவதுதான் தண்டனையா பெண்ணே! தயவுசெய்து என் கண்ணில் தென்படு!

தென்படவில்லை....!

பள்ளிக்கூடத்திற்கு வந்து மைதானத்தில் நுழைந்து, மைதானத்தின் மறுபக்கத்தை ஓடி அடைந்து, பள்ளியின் காம்பவுண்டு சுவர் மீது ஏறிப் பார்த்தபோது வளைந்துசெல்லும் அப்பாதையின் மறு கோடியில் தூரத்தில் அவள் சைக்கிளில் போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. தூரத்தில் வெகு தூரத்தில் போய்க்கொண்டிருக்கிறாள். என்னை தாளாத துயரத்தில் ஆழ்த்தி போய்க்கொண்டிருக்கிறால். இனி ஓடியும் பிரயோஜனம் இல்லை. ஓடினாலும் அவளை அடைய முடியாது.... கடைசி முயற்ச்சியாய்!

ஆன மட்டும் சக்தியை திரட்டி கை தட்டி கத்தி அழைத்தேன்....,

"ரஞ்சனீனீனீ........"

அவள் திரும்பவில்லை! அவளுக்கு கேட்கவில்லை! சிவரஞ்சனி என் கண் எல்லையிலிருந்து மறைந்துபோனாள்!

தவிர்ப்பதற்கோர் காலம் பின்பு, தவிப்பதற்கோர் காலம்!

Comments

NRIGirl said…
Beautiful! Loved it!

Popular posts from this blog

வானவில் பூக்கள்!

துரியோ&CO vs பாண்டா பாய்ஸ்!

மன்னிப்பீரா தோணியாரே?