ஒட்டுவதே ஒட்டும்!
கண் கண்டதும்
மதி சொன்னதும்
மனம் உணர்ந்ததும் - பொய்!
கண் திரண்டதும்
மனம் உடைந்ததும்
நான் நொந்ததும் - மெய்!
---- 0 ----
சரி என்றே
எண்ணி வந்தேன்
சிலர் குறித்த புரிதல் தனை!
அது
சரி அல்ல என்றே அவர்
கரி பூசிச் சென்றிட்டார்!
எவர் எனக்கு
அருமை என்று
இருமாப்பு கொண்டேனோ?
அவரே என்
பெருமை மீது
சேற்றினை இறைத்திட்டார்!
--- 0 ---
எல்லை உண்டென்று அறியாத பாவம்
தொல்லை கொடுத்து விட்டேன்!
உரிமை எடுத்து கண்டிக்கத் தான் சில
சொல்லை உதிர்த்து விட்டேன்!
உதிர்த்த சொல் சுட்டதென்றா இவர்கள்
ஊமை என்றானார்கள்? - ஆயின்
உண்மையை உரைக்கட்டும்
எந்தச் சொல் சுட்டதென்று?
---- 0 ----
இடைவெளி கூடுதென்று
இதயம் பதறியதால்
அபயக் குரல் கொடுத்து - உறவை
காத்திடத்தான் எத்தனித்தேன்!
அதுவே தவறென்று
ஆகிவிட்டால் என் செய்வேன்?
இச்செயலே பிரிவுக்கு
உரமாச்சோ? - துயர் கொண்டேன்!
--- 0 ---
அங்கங்கு காலம் ஓர்
அடையாளம் காட்டும்!
அறிகுறிகள் அறிந்து - நாம்
தயாராக வேண்டும்!
அன்றேல்,
எதிர்பாரா ஏமாற்றம்
நமை வந்து சூழும் - அதில்
பழங்கால இன்பமும்
பழுதாகிப் போகும்!
--- 0 ---
அளவாய் எடுத்தும்
அளவுக்குள் கொடுத்தும்
பழகுதல் நன்று!
தேவைக்கு மேல் என்றால்
ஏதும்
திகட்டத்தான் செய்யும்!
அவர்
குமட்டத்தான் செய்வர்!
அதை
குற்றமென் பதறிவோ?
--- 0 ---
வேண்டியதே ஆயினும் - அதை
வேண்டா தவர்க் களித்தால்
வேதனையே மிஞ்சும்!
மிஞ்சியது வேதனை - அது
நல்கியது போதனை!
ஆற்று மணலில் புரண்டாலும்
ஒட்டுவது தான் ஒட்டும்!
------------------------------------------------
சில்வண்டு
ஜீன் 13, 2007
Comments
-- Bakshe
this is a nice poem :)
-- Brindha
உங்கள் EMail பாராட்டுக்கு சில்வண்டு நன்றி உரித்தாக்குகிறது.
சிலு சிலுக்கும் உன் படைப்புகளுக்கிடையில் சீரியஸாய் ஒரு படைப்பா? நல்லா தான் இருக்கு. ஆனா, இதுல உன் சொந்த சோகம் தவிர வேறு உருப்படியான விஷயம் ஏதும் இல்லையே!
ஒரு விஷயம் நல்லா புரியுது. வாழ்க்கை உனக்கு பாடம் சொல்லித்தர ஆரம்பிச்சிருக்கு. நீ ஒரு பக்குவ வண்டாய் மாறிட்டிருக்கியோ? எல்லாம் சரி, ஒரு படைப்புக்கும் அடுத்த படைப்புக்கும் இடையே ஏனப்பா இத்தனை இடைவெளி? பதில் உரை!
நண்பன்!